பரோ-புயான்
பரோ-புயான்கள் (Baro-Bhuyans) (அல்லது பரோ-புயான் ராஜ் , பரோ-பூயன்கள் மற்றும் பரோ-புய்யன்கள் ) இடைக்காலத்தின் பிற்பகுதியிலும் நவீன காலத்தின் தொடக்கத்திலும் அசாம் மற்றும் வங்காளத்தில் சிப்பாய்-நில உரிமையாளர்களின் கூட்டமைப்புகளாக இருந்தனர். கூட்டமைப்புகள் தளர்வான சுயாதீன நிறுவனங்களைக் கொண்டிருந்தன, ஒவ்வொன்றும் ஒரு போர்வீரர் தலைவர் அல்லது ஒரு நிலப்பிரபு ( ஜமீந்தார் ) தலைமையில். பரோ-புயான் அசாம் மற்றும் வங்காளம் ஆகிய இரண்டுக்கும் தனித்துவமானது. மேலும், உத்தரப் பிரதேசம் மற்றும் பிகாரின் புய்ஹார் பாரம்பரியத்திலிருந்து வேறுபட்டது. [1] அசாமில் இந்த நிகழ்வு 13 ஆம் நூற்றாண்டில் கியாசுதீன் இவாஜ் ஷாவின் படையெடுப்பை எதிர்த்தபோதும், வங்காளத்தில் 16ஆம் நூற்றாண்டில் முகலாய ஆட்சியை எதிர்த்தபோதும் முக்கியத்துவம் பெற்றது.[2]
பின்னணி
பரோ என்பது பன்னிரெண்டு என்ற எண்ணைக் குறிக்கிறது. ஆனால் பொதுவாக பன்னிரெண்டுக்கும் மேற்பட்ட தலைவர்கள் அல்லது நிலப்பிரபுக்கள் இருந்தனர். மேலும் பரோ என்ற சொல் பலரைக் குறிக்கிறது. [3] இவ்வாறு, புயான்-ராஜ் என்பது தனிப்பட்ட புயான்களை குறிக்கிறது, அதேசமயம் பரோ-புயான் அவர்கள் உருவாக்கிய தற்காலிக கூட்டமைப்புகளைக் குறிக்கிறது. [4] வெளிப்புற சக்திகளால் தங்கள் பகுதியின் மீது ஆக்கிரமிப்பு நடந்த காலங்களில், அவர்கள் பொதுவாக ஆக்கிரமிப்பாளரை வெளியேற்றுவதில் தங்கள் பகுதி ஆட்சியாளர்களுக்கு ஒத்துழைத்தனர். சமாதான காலத்தில், அவர்கள் தங்கள் இறையாண்மையைப் பாதுகாத்தனர். ஒரு வலிமையான அரசன் முன்னிலையில், அவர்கள் தங்கள் விசுவாசத்தை வழங்கினர். பொதுவாக அவர்கள் ஒவ்வொருவரும் காக்கலா எனப்படும் கிராமக்குழுவின் கட்டுப்பாட்டில் இருந்தனர். அவர்களில் அதிக சக்தி வாய்ந்தவர்கள் தங்களை ராஜா என்று அழைத்துக் கொண்டர். புயான்களின் ஆட்சியாளர்கள் வெவ்வேறு இன, மத அல்லது சமூக பின்னணியைச் சேர்ந்தவர்கள். [5] [6]
13 ஆம் நூற்றாண்டில் பிரம்மபுத்திரா பள்ளத்தாக்கில் பரோ-புயான் ராஜ் (கூட்டமைப்பு) அமைப்பு குட்டித் தலைவர்களிடமிருந்து உருவானது (பழைய காமரூப மாநிலத்தின் மீதமுள்ள பகுதிகள்). [4] [7] இவர்கள் அடிக்கடி வெளிநாட்டு படையெடுப்புகளை எதிர்த்தனர் (13 ஆம் நூற்றாண்டில் கியாசுதீன் இவாஜ் ஷா), அந்நிய ஆட்சியை அகற்றினர் (16 ஆம் நூற்றாண்டில் உசைன் ஷா ) மற்றும் சில சமயங்களில் அரச அதிகாரத்தை (14 ஆம் நூற்றாண்டில் காமதா இராச்சியம் ) கைப்பற்றினர். இவர்கள் பிரம்மபுத்திரா ஆற்றின் தென் கரையில் திமாசா ராச்சியத்தின் மேற்கே பகுதியையும், வடக்கரையில் உள்ள சுதியா இராச்சியத்தின் மேற்கே பகுதியையும் ஆக்கிரமித்தனர். நகாமோ, தர்ரங் மற்றும் சோணித்பூர் மாவட்டங்களின் பகுதிகள் இதில் அடங்கும். பின்னர், பரோ புயான் அதிகாரம் 16 ஆம் நூற்றாண்டில் முடிவடைந்தது, ஏனெனில் அவை திமாசா ராச்சியத்திற்கும் மேற்கில் காமதா இராச்சியத்திற்கும் இடையில் சிக்கிகொண்டு, கிழக்கில் விரிவடைந்து வந்த அகோம் இராச்சியத்தால் மெதுவாக ஆதிக்கம் செலுத்தப்பட்டன.
வங்காளத்தில், 16 ஆம் நூற்றாண்டில் சோனார்கானின் இசா கான் தலைமையிலான மிக முக்கியமான பரோ-புயான் கூட்டமைப்பு, இப்பகுதியில் வங்காள சுல்தானகத்தின் சிதைவின் போது முகலாய விரிவாக்கத்திற்கு எதிர்ப்பாக உருவானது. இவர்கள் பதியின் நிலத்தையும் வங்காளத்தின் பிற பகுதிகளையும் பன்னிரண்டு நிர்வாக அலகுகளாக பிரித்தனர். [8] பரோ-புயான்கள் படிப்படியாக முகலாய ஆதிக்கத்திற்கு அடிபணிந்து இறுதியில் வங்காள சுபாவின் ஆளுநரான முதலாம் இசுலாம் கானின் தலைமையில் பேரரசர் ஜஹாங்கீர் ஆட்சியின் போது கட்டுப்பாட்டை இழந்தனர்.