2014 சமால்பூர் செயற்கை மோதல்
சமால்பூர் செயற்கை மோதல் வழக்கு (Jamalpur Fake Encounter case) இந்திய மாநிலம் பஞ்சாபில் லூதியானாவின் சமால்பூர் பகுதியில் நடந்துவரும் குற்றவியல் வழக்காகும். செப்டம்பர் 2014இல் இரண்டு தலித் சகோதரர்கள், அரிமிந்தர் சிங் (23), சதீந்தர் சிங்(25), காவல்துறையினரால் செயற்கை மோதலில் கொல்லப்பட்டதாக வழக்கு நடக்கின்றது.[1] பஞ்சாப் காவல்துறையினர் மூத்த காவல்துறை கண்காணிப்பாளர் உட்பட மூன்றுபேரை இந்த இளைஞர்களைக் கொலை செய்ததாக குற்றஞ்சாட்டி பணியிடை நீக்கம் செய்துள்ளனர்.
விவரம்
அரிமிந்தர் சிங்கும் சதீந்தர் சிங்கும் மாச்சீவாடா அருகிலுள்ள போவாப்பூர் சிற்றூரைச் சேர்ந்தவர்கள். சாம்ராலா அருகிலுள்ள தனியார் கல்லூரியில் பட்டப்படிப்பு படித்து வந்தனர். மாவட்ட அளவில் சடுகுடு ஆட்டக்காரர்களாக விளங்கினர். இருவருக்கும் 2013/14இல் குற்றப் பின்னணி இருந்தது; கொலை செய்ய முயற்சி, அத்துமீறல், பெண்ணைத் தாக்கி பாலியல் தொந்தரவு கொடுத்தல் என்பன. [2] ஆனால் இவை புனையப்பட்ட வழக்குகள் என அவர்களது குடும்பம் மறுத்தது.
சமால்பூரில் இரண்டு சகோதரர்களும் வாடகை வீட்டில் குடியிருந்தனர். இவர்கள் இருந்த வீட்டின் உரிமையாளரும் அகாலி தளம் (பாதல் குழு) உறுப்பினருமான குர்சித் சிங் தூண்டுதலில் காவலர் யத்வீந்தர் சிங், இரண்டு ஊர்க்காவல் படையினர் பல்தேவ் சிங், அஜித் சிங் இவர்களைத் தாக்கினர். குற்றவழக்கில் குர்சித் சிங்கும் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார்.[3]
காவலர்கள் மீதான நடவடிக்கை
கொலை முயற்சியில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டிருந்த இந்தச் சகோதரர்களை கொன்றதற்காக காவலர்கள் பாராட்டுக்களை எதிர்பார்த்திருந்தனர். ஆனால் காவலரும் இரண்டு ஊர்காவல் படையினரும் பணிநீக்கம் செய்யப்பட்டனர். மாச்சீவாடா காவல்நிலைய நிலைய அதிகாரி மஞ்சிந்தர் சிங்கும் பணிநீக்கம் செய்யப்பட்டார். கன்னா மாவட்ட மூத்த காவல்துறைக் கண்காணிப்பாளர், அரிஷ்குமார் பன்சல் கடமை தவறியதாக பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.[4] வன்கொடுமைத் தடைச் சட்டத்தின் கீழும் வழக்கு பதியப்பட்டுள்ளது.