ஹரிப்பாடு சுப்பிரமணிய சுவாமி கோயில்
ஸ்ரீ சுப்ரமண்ய சுவாமி கோயில் (Haripad Sree Subrahmanya Swamy temple) என்பது கேரளாத்தின் ஆலப்புழை மாவட்டம், ஹரிப்பாட்டில் உள்ள பழமையான முருகன் கோயில்களில் ஒன்றாகும். முருகனுக்கு அமைக்கப்பட்ட இந்தக் கோயிலானது தட்சிண பழனி (தென் பழனி) என்று அழைக்கப்படுகிறது. கலியுகத்திற்கு முன்பே இந்த கோயில் நிறுவப்பட்டதாக நம்பப்படுகிறது. இதுவே கேரளத்தின் மிகப் பெரிய முருகன் கோயிலாகும். மேலும் இங்கு உள்ள கொடிக்கம்பமும் மிக உயர்ந்தது ஆகும்.
ஹரிப்பாடு ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோயில் | |
---|---|
அமைவிடம் | |
நாடு: | இந்தியா |
மாநிலம்: | கேரளம் |
மாவட்டம்: | ஆலப்புழா |
அமைவு: | ஹரிப்பாடு |
ஆள்கூறுகள்: | 9°17′5″N 76°30′5″E / 9.28472°N 76.50139°E |
கோயில் தகவல்கள் | |
கட்டிடக்கலையும் பண்பாடும் | |
கட்டடக்கலை வடிவமைப்பு: | கேரள பாரம்பரிய பாணி |
இணையதளம்: | haripadsubrahmanyaswamytemple |
ஆரம்பகால வரலாறு
இந்த கோயில் முருகன் சிலையானது பரசுராமரால் வழிபடப்பட்டு பின்னர், கோவிந்தமுட்டம் உப்பங்கடலில் உள்ள கந்தநல்லூரில் விடப்பட்டதாகவும், அதில் இருந்து மீட்கப்பட்டதாகவும் நம்பப்படுகிறது. சிலை நெல்புரகடவில் கரைக்கு கொண்டு வரப்பட்டது. சிலையை மீட்டதை நினைவு கூறும் வகையிலேயே பயிப்பாடு வல்லம் களி அல்லது ஜலோத்சவம் என்னும் மூன்றுநாள் திருவிழாவனது திருவோணத்துக்குப் பிறகு பையாப்பட்டு ஆற்றில் நடத்தப்படுகிறது. சிலை மீட்கப்பட்டப்பிறகு கிறிஸ்தவ குடும்பத்தைச் சேர்ந்த தாரகன்மார் என்பவருக்கு சொந்தமான ஒரு ஆலமரத்தின் கீழ் அரை நாழிகை (அரை மணி நேரம்) இந்த சிலை பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டதாக தொன்மவியல் கூறுகிறது. இப்போதும் இந்த இடத்தில் "அரை நழிகை அம்பலம்" என்று அழைக்கப்படும் ஒரு சிறிய கோயில் உள்ளது. [1]
மகர மாதத்தில் புஷ்ய நட்சத்திரத்தில் இந்த கோயிலுக்கு குடமுழுக்கு நடத்தப்பட்டது. இந்த நாள் ஒவ்வொரு ஆண்டும் கோயிலின் ஸ்தாபக நாளாக கொண்டாடப்படுகிறது. கோயிலை குடமுழுக்கு செய்ய விஷ்ணு ஒரு துறவியாக தோன்றினார் என்று நம்பப்படுகிறது. மலையாள ஆண்டு 1096 இல் கோயிலில் தீ பிடித்தது, ஆனால் தங்கக் கொடி மரம் மற்றும் கூத்தம்பலம் ஆகியவை தீயில் இருந்து காப்பாற்றப்பட்டன. ஸ்ரீ சித்திரை திருநாள் இராம வர்மா மன்னரின் காலத்தில் இந்த கோயில் புனரமைக்கப்பட்டது. தங்கக் கொடி மரம் மீண்டும் நிறுவப்பட்டது. [2]
முதன்மை தெய்வம்
கோயிலின் முதன்மைத் தெய்வமாக நான்கு கைகளுடன் முருகன் உள்ளார். ஒரு கையில் வேலை ஏந்தியும், மற்றொரு கையில் வஜ்ராயுத்த்தைக் கொண்டும், ஒரு கையில் பக்தர்களுக்கு ஆசி வழங்கும் அபய முத்திரையுடனும், மற்றொரு கையை தொடைமீது வைத்தும் இருக்கிறார். முருகன் சிலையின் உயரம் சுமார் எட்டு அடியில் பிரம்மாண்டமாக உள்ளது. இந்த சிலைக்குள் விஷ்ணு, சிவன், பிரம்மா ஆகியோர் இருப்பதாக ஐதீகம். முழுகன் சிலை கிழக்கு நோக்கி உள்ளது. [3] [4]
பிற தெய்வங்கள்
முதன்மைத் தெய்வமான முருகனுக்கு அருகில் தட்சிணாமூர்த்தி, பிள்ளையார், திருவம்பாடி கண்ணன், நாகர், சாஸ்தா, கீழ்த்தயார் கோவில் சுப்பிரமணியன் உள்ளிட்ட பல தெய்வங்கள் உள்ளன.
கோயில் அமைப்பு
இந்த கோவிலில் நான்கு கோபுரங்கள் உள்ளன. கோயிலின் கிழக்குப் பக்கத்தில் தங்கக் கொடி மரம் உள்ளது. கோயிலின் கருவறை வட்ட வடிவத்தில் உள்ளது. கோயில் வளாகத்தில் ஒரு கூத்தம்பலம் உள்ளது . முருகனின் வாகானமான மயில்கள் பாதுகாக்கப்பட்டு கோயில் வளாகத்தில் வைக்கப்பட்டுள்ளன. [5]
திருவிழாக்கள்
இக்கோயிலில் மூன்று திருவிழாக்கள் முதன்மையாக நடத்தப்படுகின்றன. அவை அவணி உற்சவம் சிங்கோமிலும், மார்கழி உற்சவம் தணுவிலும், சித்திரை உற்சவம் மேடத்திலும் நடக்கின்றன. விருச்சிகத்தில் திரிக்கார்த்திகா, எடவத்தில் பிரதிஷ்டா நாள், துலத்தில் ஸ்கந்த அஷ்டமி, கண்ணியில் நவராத்திரி, மகரத்தில் தைப்பூசம் ஆகியவை ஹரிபாத் கோயிலின் மற்ற முக்கியமான திருவிழாக்கள் ஆகும். [2][6]