முத்துக் குளித்தல்
முத்துக்குளித்தல்(Pearl hunting) அல்லது முத்தெடுத்தல் அல்லது முத்து வேட்டை என்பது கடலின் ஆழமான பகுதிகளில் வசிக்கும் முத்துச் சிப்பி மற்றும் நன்னீர் மட்டிகள் (freshwater pearl mussel)எனப்படும் மெல்லுடலிகளிலிருந்து முறையான மூழ்குதல் பயிற்சி மூலம் முத்தினை எடுத்து கடலின் மேற்பரப்பிற்குக் கொண்டு சேர்க்கும் முறையாகும்.இவ்வாறு சேகரிக்கப்படும் இயற்கை முத்துகள் விலை மதிப்பு மிக்க ஒன்பது இரத்தினங்களுள் ஒன்றாக மதிக்கப்படுகிறது.[1]
![](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/6/68/Ama2.jpg/300px-Ama2.jpg)
வரலாறு
![](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/6/6b/Waterclothes.jpg/220px-Waterclothes.jpg)
பாரசீக வளைகுடா வழியாக சேகரித்தல் முத்து 4000 ஆண்டுகளுக்கு முன்பு சுமேரியர்கள் பாரசீக வளைகுடாப் பகுதியில் முத்தெடுத்ததாக வரலாறு தெரிவிக்கிறது. 2000 ஆண்டுகளுக்கு முன் ஜப்பானில் முத்துக்குளிப்பதில் 'அமா'(AMA) எனப்படும் பெண்கள் முத்தெடுக்கும் தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளனர்.[2] 'அமா' என்றால் கடல் பெண் என்று பொருளாகும். கி.பி. 1800 களில் ஆஸ்திரேலிய கடல் பகுதியில் முத்தெடுக்கும் முயற்சிகள் தொடங்கின. 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் 2,000 க்கும் மேற்பட்ட மக்கள் ஈடுபடும் ஒரு தொழிலாக முத்துக் குளித்தல் விளங்கியது. தொடக்கத்தில் ஆஸ்திரேலியாவில் சிறந்த மூச்சுப்பயிற்சியுள பழங்குடியினப் பெண்கள் முத்துக் குளித்தலில் ஈடுபட்டனர். 1930 வரை பாரசீக வளைகுடாப்பகுதியில் முத்தெடுத்தல் ஒரு மாபெரும் தொழிலாக விளங்கியது.பாரசீக முத்துகளின் நிறம் மற்றும் அதிக ஒளிர்வு ஆகியவற்றால் விலை மதிப்பு மிக்கதாக விளங்கின. ஆனால் எண்ணெய் ஏற்றமதி தொடங்கியதும் கடல் நீர் மாசுபாடு காரணமாக அந்த பகுதியில் ஒரு முக்கிய தொழிலாக இருந்த முத்து வேட்டை முடிவுக்கு வந்தது.
ஆசியாவில் முத்து சிப்பிகள், கடலின் மேற்பரப்பில் இருந்து 5லிருந்து 7 அடி (1.5-2 மீட்டர்) ஆழத்தில் காணப்பட்டன. ஆனால் தரமான முத்து சிப்பிகளைக் கண்டுபிடிக்க 40 அடி (12 மீட்டர்)முதல் 125 அடி (40 மீட்டர்) ஆழம் வரை கூட போக வேண்டியிருந்தது இந்த ஆழமான மூழ்குதலில் பல்வேறு ஆபத்துகள் இருந்தன.
19 ஆம் நூற்றாண்டில், ஆசியாவில் மிகவும் அடிப்படை தொழில்நுட்பத்தை மட்டுமே நம்பி முத்தெடுத்தல் நடைபெற்றது. எடுத்துக்காட்டாக கடுங்குளிர் மற்றும் வெப்பத்திலிருந்து பாதுகாப்பதற்காக அவர்களின் உடலில் கிரீஸ் தடவிக்கொண்டனர். தங்கள் காதுகளில் கிரீஸ் தடவப்பட்ட பருத்தி வைத்துக்கொண்டும்தங்கள் மூக்கில் ஒரு ஆமையின் ஓட்டையும் அணிந்தனர். ஒரு பெரிய பாறையிலிருந்து குதித்து நீந்தி ஆழத்திற்குச் சென்றனர். மேலும் சிப்பியைச் சேகரிக்க ஒரு கூடையினையும் அவர்கள் இடுப்பில் கட்டியிருந்தனர்.[3][4]
இந்தியாவை பொறுத்தவரை முத்துக் குளித்தல் அரசாங்கத்திற்குச் சொந்தமான பண்ணைகள் மூலமே மேற்கொள்ளப்படுகின்றன. முத்துக் குளிக்கும் போது பெறப்படும் சிப்பிகளில் ஒரு குறிப்பிட்ட விழுக்காடு அரசாங்கத்திடம் அளித்தல் வேண்டும். பண்டைய தமிழகத்தில் குறிப்பாக முத்து வளமிக்க கீழைக்கடலோரத்தில் தூத்துக்குடி, இராமநாதபுரம், நாகப்பட்டினம், தென் ஆற்காட்டின் கரையோயங்களில் முத்து எடுக்கப்பட்டது. இத்தொழில் பரதவர் எனப்படும் சமூகத்தினர் ஈடுபட்டு வந்துள்ளனர்.[5][6][7] இப்பகுதியில் கிடைத்த முத்து கீழை முத்து என பெயர் பெற்றதாக வரலாறு தெரிவிக்கிறது. இலங்கையில் உள்நாட்டுப் போர்களின் காரணமாக இத்தொழில் நிறுத்தி வைக்கப்பட்டது.
பிலிப்பைன்சில் குறிப்பாக சூலூ தீவுக் கூட்டத்தில் பெரிய முத்துகள் சேகரிக்கும் தொழில் வெற்றிகரமாக நடைபெற்றது. இங்கு ஆழமான, தெளிவான, மற்றும் விரைவான அலைகடலின் ஆழத்தில் பெறப்பட்ட முத்து "உயர் கலப்பின" முத்துகள் என்று கண்டறியப்பட்டன. இது உலகின் மிகச்சிறந்த முத்தாகக் கருதப்பட்டன. பெரிய முத்துகள் சுல்தானின் ஆணைப்படி பெரிய முத்துக்களைச் சேகரித்து விற்பனை செய்வது சட்டப்படி குற்றமாகும். அவ்வாறு விற்பனை செய்பவர் மரண தண்டனைக்கு ஆளாக நேரிடும். ஆனாலும் பலர் திருட்டுத்தனமாக முத்துச் சேகரித்து ஐரோப்பாவின் பல செல்வக் குடும்பங்களுக்கு விற்பனை செய்கின்றனர்.[8]
அமெரிக்காவிலும் பூர்வ குடி அமெரிக்கர்கள் நன்னீர் ஏரிகளிலும், ஓஹியோ ஆறு, டென்னஸி ஆறு, மிசிசிபி ஆறு போன்ற ஆறுகளில் இருந்தும் முத்தினை அறுவடை செய்கின்றனர்.மேலும் கரீபியன் கடல், மத்திய மற்றும் தென் அமெரிக்கக் கடலோரங்களில் வெற்றிகரமாக கடல் முத்து எடுக்கப்படுகிறது.
வடக்கு மற்றும் தென் அமெரிக்காவில் (நவீன கொலம்பியா மற்றும் வெனிசுலா வடக்கு கடலோரங்களில்) காலனிய அடிமை முறை, புழக்கத்தில் இருந்த போது கடலில் மூழ்கி முத்தெடுக்க அடிமைகள் ஈடுபடுத்தப்பட்டனர். அவ்வாறு முத்தினைத் தேடி இவர்கள் கடலுள் மூழ்கும் போது கடல் சுறாவின் தாக்குதலுக்கு அடிக்கடி ஆளானர்கள் இதனால் இவர்கள் இறக்கவும் நேரிட்டது. எனினும் சில நேரங்களில் இவற்றிலிருந்து மீண்டு ஒரு பெரிய முத்தைக் கண்டுபிடித்த ஒரு அடிமைக்கு சுதந்திரம் வழங்கப்பட்டது.[9]
முத்தெடுக்கும் இடங்கள்
முத்துக்குளிக்கும் இடங்கள் உலகில் மிகச் சிலவேயுள்ளன.
- பாலத்தீன் வளை குடாவில் உள்ள பஹ்ரைன்,
- இலங்கையிலுள்ள சிலாபம் மற்றும் மன்னார் வளைகுடா
- இந்தியாவில் உள்ள தூத்துக்குடி
- ஜப்பானில் உள்ள டோக்கியோ கடல்,
- குலூத்தீவுகள் அமைந்துள்ள கடல் பிரதேசம்
- ஆஸ்திரேலியாவின் வடக்கு மேற்குக் கரையோரங்கள்,
- கலிபோர்னியாக் கடல் என்பவை அவையாகும்.[10]
முத்துச் சேகரித்தல்
![](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/9/9b/Parelduikers_Pearl_divers.jpg/250px-Parelduikers_Pearl_divers.jpg)
முத்துச் சிப்பிகளுக்கு நான்கு வயதாக இருக்கும் போது பெறப்படுவனவற்றிலேயே அதிசிறந்த முத்துக்கள் காணப்படும். நல்ல தரமான அரிய வகையான மூன்று அல்லது நான்கு முத்துகளை பெறுவதற்கு கிட்டத்தட்ட ஒரு டன் சிப்பிகள் சேகரிக்கப்பட வேண்டும். வருடத்தில் எல்லா மாதங்களிலும் முத்துக் குளித்தல் நடைபெறுவதில்லை. மார்ச் திங்களே இதற்கு உகந்ததாகக் கருதப்படுகின்றது.
முத்துக் குளிப்போர்
ஒரே மூச்சில் 100 அடி ஆழம் வரை நீந்தி சுமார் இருபது மீற்றர் ஆழமுள்ள கடல்படுக்கையில் காணப்படும் சிப்பிகளைச் சேகரிக்க வேண்டும். எண்பது முதல் தொண்ணூறு செக்கினில் இது பெறப்பட வேண்டும். மூச்சை அடக்கவும் தன் மீது அழுத்தும் கடல் நீரின் கனத்தைக் தாங்கக் கூடியவராகவும் இருத்தல் அவசியம். புதிதாக இப்பணியில் ஈடுபடுபவர்களுக்கு மூக்கிலும், காதிலிருந்தும் இரத்தம் கசிவது தவிர்க்க முடியாததொன்றாகும். மேலும் இவர்கள் மனிதனை விழுக்கக் கூடிய பெரிய சுறா மீன்கள் அண்மிக்கும் வேளையில் சமயோசிதமாக தப்பிக்க வேண்டிய நிலையும் உள்ளது. இதற்கு அவர்கள் கூரிய கருங்காலித் தடிகளைத் தம்வசம் வைத்துக் கொள்வர்.[3]
முத்துக் குளிக்கும் ஒருவர் தவறுதலாக அதிக நேரம் கடலினுள் தங்கிவிட்டால் மூச்சுத் திணறி இறக்கவும் நேரிடும். பண்டைக்காலத்தில் இப்பணியில் ஈடுபடுபவர்கள் உடல் வலிமையையும், அகன்ற மார்பும் கறுத்த நிறமுடையவராக இருந்தனர். ஆனால் தற்போது அதற்கான தனிப்பட்ட உடை, நீரினுள் எளிதாக சுவாசிக்க உயிர்வளிமம் (ஆக்சிஜன்) நிரப்பப்பட்ட சிறிய உருளைகளையும் தலைக் கவசத்தையும் அணிந்த பின்பு கடலினுள் இறங்குகின்றனர்.
முத்தெடுக்கும் முறை
சிப்பிகளைச் சேகரிப்பதற்காக இடுப்பைச் சுற்றி பையொன்றைக் கட்டிக்கொள்வார்கள்.நீரில் மூழ்கும் போது சரியான இடம் தென்பட்டதும் பரபரப்பாக முத்துக் களைச் சேகரித்து இடுப்பில் கட்டிச் சென்ற பை போன்ற வலையினுள் போடப்படும். அதேவேளை தோணியில் இருப்பவர் முத்துக் குளிப்பவர்களைக் கண்ணும் கருத்துமாகக் கண்காணித்துக் கொண்டிருப்பார்கள்.மேலே வந்தவர் தோணியில் இருப்பவரிடம் தான் சேகரித்த முத்துச் சிப்பிகளை ஒப்படைத்து விட்டு சிறிது ஓய்வு எடுத்தபின் மீண்டும் முத்துக் குளிக்கக் குதித்துவிடுவார். முத்துக் குளிக்கும் பணி முடிவுற்றதும் சிப்பிகளைக் கடற்கரையில் கொட்டி ஏலத்தில் விற்பனை செய்வார்கள். சில நாட்களின் பின்பு சிப்பிகளை ஒவ்வொன்றாகத் திறந்து நன்றாகக் கழுவி முத்துக்களை வெளியில் எடுப்பார்கள்.
இன்றைய நிலை
1896 இல் ஜப்பானைச் சேர்ந்த கொக்கிச்சி மிக்கிமோட்டோ என்பவரால் உருவாக்கப்பட்ட தொழில் நுட்பத்தின் மூலம் செயற்கையாக முத்துக்களைப் பெறுகின்றனர். அதற்கான சிப்பி மற்றும் மட்டிகளை வளர்க்கும் பண்ணை முறை மேற்கொள்ளப்படுகிறது. இதனால் உயர் தரமுடைய ஏராளமான முத்துகள் ஒவ்வோர் ஆண்டும் உற்பத்தி செய்யப்படுகின்றன. ஜப்பானில் 'அமா' எனப்படும் பெண் முத்துக்குளிப்போர் தற்போது சுற்றுலாத்துறையில் பணிபுரிகின்றனர்.
மேற்கோள்
ஆதார நூல்கள்
- Al-Hijji, Yacoub Yusuf (2006). Kuwait and the Sea. A Brief Social and Economic History. Arabian Publishing. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-9558894-4-8.
- al-Shamlan, Saif Marzooq (2001). Pearling in the Arabian Gulf. A Kuwaiti Memoir. The London Centre of Arab Studies. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-900404-19-2.
- Bari, Hubert; Lam, David (2010). Pearls. SKIRA / Qatar Museums Authority. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-99921-61-15-9. Especially chapter 4 p. 189-238 The Time of the Great Fisheries (1850-1940)
- Ganter, Regina (1994). The Pearl-Shellers of Torres Strait: Resource Use, Development and Decline, 1860s-1960s. Melbourne University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-522-84547-9.
- George Frederick Kunz: Book of the Pearl பரணிடப்பட்டது 2008-05-12 at the வந்தவழி இயந்திரம் (G.F. Kunz was America's leading gemologist and worked for Tiffany's in the beginning of the 20th century)
இவற்றையும் காண்க
வெளியிணைப்புகள்
eHow Contributor