திருத்தந்தை முதலாம் ஜூலியுஸ் (Pope Julius I) கத்தோலிக்கத் திருச்சபையில் உரோமை ஆயராகவும் திருத்தந்தையாகவும் பெப்ருவரி 6, 337 முதல் ஏப்பிரல் 12, 352 வரை ஆட்சிசெய்தார். இவர் கத்தோலிக்கத் திருச்சபையின் 35ஆம் திருத்தந்தை ஆவார்.
உரோமையில் பிறந்த இவர், திருத்தந்தை மாற்கு இறந்த நான்கு மாதங்களுக்குப் பிறகு திருத்தந்தைப் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
கிறிஸ்து பற்றிய கொள்கையை விளக்குதல்
இவரது பதவிக் காலத்தின்போது, இயேசு கிறிஸ்துவின் இறைத்தன்மை பற்றிய விவாதம் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டிருந்தது. அதாவது, இயேசு கிறிஸ்து இறைத்தன்மை கொண்டவர், கடவுளின் மகன் என்று நிசேயா சங்கம் 325 இல் அறிவித்திருந்தது. ஆனால் ஆரியுஸ் (Arius) என்பவர் இக்கொள்கையை ஏற்க மறுத்து, இயேசு கடவுளின் படைப்புகளில் மிகச் சிறந்தவரே தவிர கடவுள்தன்மை கொண்டவரல்ல என்று போதித்தார். இவ்வாறு அடிப்படைக் கொள்கை பற்றி ஐயம் எழுப்பப்பட்டதால், திருச்சபைக்குள் குழப்பம் ஏற்பட்டிருந்தது.
ஆரியுசின் ஆதரவாளர்கள் மேற்கு உரோமை மன்னராக இருந்த காண்ஸ்டன்ஸ் என்பவருக்கும் திருத்தந்தை ஜூலியசுக்கும் தங்கள் நிலையை விளக்கி உரைக்க தூதுவர்களை அரசின் கீழைப்பகுதியாக இருந்த காண்ஸ்டாண்டிநோபுளில் இருந்து அனுப்பிவைத்தனர். ஆரியுசின் கொள்கையைக் கடுமையாக எதிர்த்ததன் காரணமாக காண்ஸ்டாண்டிநோபுளின் ஆயர் அத்தனாசியுசு ஏற்கனவே நாடுகடத்தப்பட்டிருந்தார். அவரை நாடுகடத்தியது சரியே என்று ஆரியுசின் ஆதரவாளர்கள் வாதாடினர்.
திருத்தந்தை ஜூலியுஸ் அத்தனாசியுசுக்குத் தம் ஆதரவைத் தெரிவித்து, இரு தரப்பினரும் ஒன்றுகூடிப் பேச வேண்டும் என்று முடிவுசெய்து ஒரு சங்கத்தைக் கூட்ட முயன்றார். ஆனால், ஆரியுசின் ஆதரவாளர்கள் அச்சங்கத்தில் பங்கேற்க மறுத்துவிட்டனர்.
இரண்டாம் முறையாக நாடுகடத்தப்பட்ட அத்தனாசியுசு உரோமைக்கு வந்தார். அவரே காண்ஸ்டாண்டிநோபுளின் முறையான ஆயர் என்று திருத்தந்தை ஜூலியுஸ் தாம் கூட்டிய சங்கத்துக்குத் தலைமை தாங்கி அறிவித்தார். இந்த முடிவைக் கீழைச் சபையான காண்ஸ்டாண்டிநோபுள் பகுதியைச் சார்ந்த ஆயர்களுக்கு அறிவித்து, ஜூலியுஸ் கடிதம் அனுப்பினார். அதில், திருச்சபையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டபோது தம்மோடு தொடர்புகொள்ளத் தவறியதற்காக ஜூலியஸ் அந்த ஆயர்களைக் கடிந்துகொள்கிறார் (Epistle of Julius to Antioch, c. xxii).
அதன் பின் சார்திக்கா நகரில் ஒரு சங்கம் கூட ஜூலியுஸ் ஏற்பாடு செய்தார். அச்சங்கமும் ஆரியுஸ் போதித்த கொள்கையைக் கண்டித்தது. ஜூலியுஸ் எடுத்த முடிவுகள் சரியே என்று உறுதிப்படுத்தியது.
இயேசு பிறந்த நாள் திசம்பர் 25 என்று தீர்மானிக்கப்படல்
இயேசுவின் பிறந்த நாளை திசம்பர் 25 என்று குறித்து, விழாக் கொண்டாட முடிவுசெய்தவர் திருத்தந்தை ஜூலியுஸ் என்று வரலாற்றாசிரியர்கள் கருதுகின்றனர்.[1]
ஜூலியுஸ் கட்டிய கோவில்கள்
திருத்தந்தை ஜூலியுஸ் உரோமையில் இரு பெருங்கோவில்களைக் கட்டினார். ஒன்று, டைபர் நதிக்கரையில் அமைந்த மரியா கோவில் (Santa Maria in Trastevere), மற்றொன்று பன்னிரு திருத்தூதர் கோவில்.
இறப்பும் திருவிழாவும்
ஜூலியுஸ் 352, ஏப்பிரல் 12 ஆம் நாள் உயிர்துறந்தார். அவருக்குப் பின் பதவி ஏற்றவர் திருத்தந்தை லிபேரியஸ் ஆவார்.
கத்தோலிக்கத் திருச்சபையில் திருத்தந்தை ஜூலியுஸ் ஒரு புனிதராகக் கருதப்படுகிறார். அவருடைய திருவிழா அவர் இறந்த நாளாகிய ஏப்பிரல் 12 ஆம் நாள் கொண்டாடப்படுகிறது.