முஜாஹிதீன்
முஜாஹிதீன் (Mujahideen, அரபு மொழி: مجاهد முஜாஹித், பன்மை مجاهدون முஜாஹிதூன், அடிநிலைப் பன்மை مجاهدين முஜாஹிதீன் "போராளிகள்" அல்லது " ஜிகாத்தில் பங்கேற்பவர்கள்") இஸ்லாமிய வழக்கில் அரபு மொழியில் கடவுளின் வழியில் போராடுபவர்களைக் குறிப்பதாகும்.[1][2] இதன் வேர்ச்சொல்லும் ஜிகாத்தின் வேர்ச்சொல்லும் ஒன்றேயாகும்.
வரலாறு
இக்கருத்தின் துவக்கம்
ஜிகாத்தின் துவக்கம் முகம்மது நபி மற்றும் திருக் குர்ஆனின் சொற்களிலும் செயல்களிலும் அடங்கியுள்ளது.[3] முகமது நபி அவர்களின் கடினமான காலங்களில் அவருக்குத் துணை நின்றவர்கள் அன்சார்கள் (உதவியாளர்கள்) என்றும் முஹாஜிர்கள் (புலம் பெயர்ந்தோர்) என்றும் அழைக்கப்பட்டனர். [4] முகம்மது நபியுடன் ஆயுதமேந்திப் போராடிய அன்சார்களும் முஹாஜிர்களும் முஜாஹிதீன்கள் என்று அழைக்கப்பட்டனர்.
ஆப்கானிஸ்தான் உள்நாட்டுப் போர்
![](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/b/b7/Afghan_Muja_crossing_from_Saohol_Sar_pass_in_Durand_border_region_of_Pakistan%2C_August_1985.png/220px-Afghan_Muja_crossing_from_Saohol_Sar_pass_in_Durand_border_region_of_Pakistan%2C_August_1985.png)
ஆப்கானிஸ்தானில் 1970களில் சோவியத் சார்பு ஆப்கானிஸ்தான் சனநாயக குடியரசு ஆட்சிக்கு எதிராக எழுந்த பல்வேறு புரட்சிக்குழுக்களே தற்கால முஜாஹிதீன்களாக பெரிதும் அறியப்படுபவர்கள் ஆகும். இவர்களை அடக்குவதற்கு சோவியத் ஒன்றியத்தின் உதவி வேண்டப்பட்டது. இதனால் இந்த முஜாஹிதீன்கள் மிக நவீன ஆயுதங்கள் தாங்கிய சோவியத் மற்றும் ஆப்கன் சனநாயகக் குடியரசு துருப்புகளுடன் சண்டை இடலாயிற்று. 1980களில் சோவியத் ஒன்றியம் இந்தச் சண்டையிலிருந்து விலகிக் கொண்டபிறகு பல்வேறு முஜாஹிதீன் குழுக்கள் தங்களுக்குள்ளேயே சண்டையிட்டுக் கொண்டன.[5]
பல வெளிநாட்டு முஸ்லிம்கள் பல்வேறு முஜாஹிதீன் குழுக்களுக்கு உதவி வழங்கி வந்தன. இவர்களில் முதன்மையானவர்கள் சவூதி அரேபியாவின் செல்வச் செழிப்பான குடும்பத்திலிருந்து வந்த உசாமா பின் லாதின் ஆகும். இவரது மக்தப் அல்-கதமத் நிதி, ஆயுதங்கள் மற்றும் போராளிகளை வெளியிலிருந்து வழங்கியது. சவூதி அரேபியா மற்றும் பாக்கித்தான் அரசுகளும் உதவி புரிந்தன.[6]
இந்தியா மற்றும் பாக்கித்தான்
இந்தியாவில் 2008ஆம் ஆண்டு தங்களை இந்திய முஜாஹிதீன் என அறிமுகப்படுத்திக்கொண்ட குழுவொன்று பல்வேறு தீவிரவாதச் செயல்களுடன் வெளிப்படுத்திக் கொண்டது. நவம்பர் 26, 2008இல் தங்களை டெக்கன் முஜாஹிதீன் என கூறிக்கொண்ட குழுவொன்று மும்பையில் நடந்த பல திவிரவாதச் செல்களுக்கு பொறுப்பேற்பதாகக் கூறியது. இந்திய உளவுத்துறை இந்திய முஜாஹிதீன் என்பவர்கள் லஷ்கர்-ஏ-தொய்பா மற்றும் ஹர்கத்-உல்-ஜிகாத்-அல்-இஸ்லாமி இயக்கங்களின் முன்னிலைக்குழுக்களே எனக் கூறியுள்ளது[7]. இந்திய மாநிலம் காசுமீரில் இந்திய அரசாட்சியை எதிர்க்கும் இசுலாமிய போராளிகள் பரவலாக முஜாஹிதீன் என்றே அழைக்கப்படுகின்றனர்.
பாக்கித்தானின் ஆதிக்கத்தில் உள்ள காசுமீரிலும் பல்வேறு போராட்டக்குழுக்கள் உருவாகியுள்ளன. இவற்றில் லஷ்கர்-ஏ-தொய்பா , ஜெய்ஷ்-ஏ-முகம்மது, சம்மு காசுமீர் விடுதலை முன்னணி, ஹிஸ்புல் முஜாஹிதீன், ஹர்கத்-அல்-முஜாஹிதீன் குறிப்பிடத்தக்கவை.[8] மனித உரிமை கவனிப்பு அமைப்பின் 1996 அறிக்கை செயற்படும் முஜாஹிதீன்களின் எண்ணிக்கை 3200 என்று மதிப்பிட்டுள்ளது.[9]
பாக்கித்தான் படையின் தேசிய பாதுகாவலர்கள் "முஜாஹித் படை" என்று அறியப்படுகின்றனர். இவர்கள் பிற குழுக்களைப் போலன்றி ஓர் நாட்டின் அதிகாரபூர்வ படைத்துறையினர் ஆகும். [10]
கேரளாவின் சுன்னி இஸ்லாம் பிரிவுக்குள் உள்ள கேரள நத்வதுல் முஜாஹிதீன் இயக்கம் "முஜாஹித்"கள் என்றே அழைக்கப்படுகின்றனர்.
மேற்கோள்கள்
![](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/f/fa/Wikiquote-logo.svg/34px-Wikiquote-logo.svg.png)