மின்னலே (திரைப்படம்)
கருவிகள்
Actions
பொது
அச்சு/ஏற்றுமதி
மின்னலே | |
---|---|
![]() | |
இயக்கம் | கௌதம் மேனன் |
தயாரிப்பு | Dr. முரளி மனோகர் |
கதை | கௌதம் மேனன் |
இசை | ஹாரிஸ் ஜயராஜ் |
நடிப்பு | மாதவன், ரீமா சென், அப்பாஸ், விவேக், நாகேஷ் |
படத்தொகுப்பு | சுரேஷ் அர்ஸ் |
வெளியீடு | 2001 |
ஓட்டம் | 150 நிமிடங்கள் |
நாடு | ![]() |
மொழி | தமிழ் |
ஆக்கச்செலவு | Rs.7,30,00,000 |
மின்னலே (Minnale) என்பது 2001 ஆம் ஆண்டு தமிழில் வெளிவந்த காதல் திரைப்படம் ஆகும். இந்தத் திரைப்படத்தைக் கௌதம் மேனன் இயக்கி இருந்தார். இத்திரைப்படத்திற்கான கதையை கௌதம் மேனன் மற்றும் விபுல் டி. ஷா ஆகியோர் எழுதி இருந்தனர். இதில் மாதவன், அப்பாஸ், ரீமா சென், விவேக் மற்றும் நாகேஷ் ஆகியோர் நடித்திருந்தனர். தன் காதலியைப் பின்தொடர தனது முன்னாள் கல்லூரி எதிரியின் அடையாளத்தை காதல் வயப்பட்ட ஒருவன் பயன்படுத்துகிறான். இறுதியாக உண்மை வெளிவரும்போது அவன் சந்திக்கும் பிரச்சினைகளை இப்படம் கதையாகக் கூறி இருந்தது.
மின்னலே திரைப்படத்தில் கௌதம் மேனன் இயக்குனராக அறிமுகம் ஆனார். ஹாரிஸ் ஜயராஜ் இசையமைப்பாளராக அறிமுகம் ஆனார். இத்திரைப்படம் வெளிவருவதற்கு முன்னர் இதன் பாடல்கள் பிரபலமாயின. இத்திரைப்படத்திற்கு ஆர். டி. ராஜசேகர் மற்றும் ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்தனர். படத்தொகுப்பு பணியை சுரேஷ் அர்ஸ் செய்தார்.
பெப்ரவரி 2, 2001 அன்று மின்னலே வெளியானது. விமர்சகர்களால் பாராட்டப்பட்டது. வணிகரீதியாக பிரம்மாண்ட வெற்றியைப் பெற்றது.[1] அதே ஆண்டு மேனன் இந்தியில் இத்திரைப்படத்தை ரெஹ்னா ஹே தேரே தில் மேயின் என்ற பெயரில் மறு ஆக்கம் செய்தார். அத்திரைப்படத்திலும் மாதவனே கதாநாயகனாக நடித்தார்.
கல்லூரியில் அடாவடித்தனம் செய்யும் மாணவனான ராஜேஷ் (மாதவன்) அங்கு பயிலும் மாணவனான சாமுவேல் (அப்பாஸ்) இருவரும் பரம எதிரிகள். பலமுறை மோதியும் உள்ளனர். இவர்களிருவரும் கல்லூரியிலிருந்து வேலைகள் தேடவும் ஆரம்பிக்கின்றனர். அச்சமயம் ராஜேஷ் பெங்களூரில் அழகிய பெண்ணொருவரைச் சந்திக்கின்றார். அவரைப் பார்த்த உடனே அவர் மீது காதல் கொள்ளும் ராஜேஷ் அவரைத் தேடியும் செல்கின்றார். ஆனால் அவரோ சென்னையிலேயே தங்கியுள்ளார் என்பதனை பின்னைய நாட்களில் அறிந்து கொள்ளும் ராஜேஷ் அவரைப் பலமுறை சந்திக்கவும் செய்கின்றார். அச்சமயம் அமெரிக்காவில் தங்கி வேலை பார்த்து வந்த சாமுவேல் ராஜேஷ் காதலித்த பெண்ணையே திருமணம் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது இதனை அறிந்து கொள்ளும் ராஜேஷ் தானே அமெரிக்காவிலிருந்து வந்திருக்கும் மாப்பிள்ளை என்ற பொய்யைக் கூறி அவர் வீட்டினுள் நுழையவும் செய்கின்றார். இச்செய்தியை பின்னர் உணர்ந்து கொள்ளும் அவர் காதலியும் அவரை ஏற்றாரா என்பதே கதையின் முடிவு.
கௌதம் மேனன் 2000ஆம் ஆண்டு ஓ லாலா என்ற காதல் திரைப்படத்தை ஆரம்பித்தார். இத்திரைப்படத்தின் தயாரிப்பாளர்கள் மாறினர். தலைப்பானது மின்னலே என்று மாறியது. அப்பொழுது ஆரம்ப நடிகராக இருந்த மாதவன் இத்திரைப்படத்தில் கதாநாயகனாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார்.[3] திரைப்படம் உருவான விதம் பற்றி கௌதம் மேனன் கூறும் போது எடிட்டர் சுரேஷ் அர்ஸ் தவிர மற்ற திரைப்பட குழுவினர் அனைவரும் புதுமுகங்களாக இருந்ததால் கடினமாக இருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.[4] மாதவன் இத்திரைப்படத்தின் கதையை தனது வழிகாட்டி மணிரத்னத்திடம் கூறுமாறு மேனனிடம் கூற, இது மேனனுக்கு மேலும் அழுத்தத்தைக் கொடுத்தது. அலைபாயுதே திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு இத்திரைப்படத்தில் நடிக்கும் முடிவானது தனது திரைவாழ்க்கையில் நேர்மறையான முடிவாக இருக்குமா என தெரிந்துகொள்ள மாதவன் இவ்வாறு செய்தார். ஆரம்பத்தில் தயக்கமாக இருந்தபோதும் மேனன் மணிரத்னத்திடம் கதையைக் கூறினார். மணிரத்னம் இக்கதையால் பெரிதாக ஈர்க்கப்படவில்லை. ஆனால் இதற்காக மாதவன் "வருத்தப்பட்டதாக" தான் நினைப்பதாக மேனன் கூறியுள்ளார். பிறகு திரைப்படத்தைத் தொடர மாதவன் ஒப்புக் கொண்டார்.[4]
1999 ஆம் ஆண்டின் உலக அழகி யுக்தா முகி இத்திரைப்படத்திற்குக் கதாநாயகியாக நடிக்க ஜூலை 2000ல் பரிசீலிக்கப்பட்டார். ஒரு கட்டத்தில் இஷா கோப்பிகரும் கதாநாயகி பாத்திரத்திற்கு பரிசீலிக்கப்பட்டார். இறுதியாக ரீமா சென் கதாநாயகியாக அறிமுகப்படுத்தப்பட்டார்.[5][6] ரிலாக்ஸ் என்ற கன்னடப் படத்திற்குப் பிறகு மாதவன் அப்பாசுடன் மின்னலே திரைப்படத்தில் இரண்டாவது முறையாக இணைந்து நடித்தார். திரைப்படம் வெளியான பிறகு தன்னைப் பற்றிய காட்சிகள் நீக்கப்பட்டதாக அப்பாஸ் கருதினார். தன்னைப் பற்றிய காட்சிகள் திரைப்படத்தில் இருந்து நீக்கப்பட்டதற்கு மாதவன் பங்காற்றியதாகக் குற்றம் சாட்டினார்.[7]
வசீகரா என் நெஞ்சினிக்க, மின்னலே திரைப்படத்தில் இடம்பெற்ற பாடலாகும். தாமரை என்ற பெண் கவிஞர் இந்தப் பாடலை எழுதினார். "பெண்களின் உணர்வுகளையும் ஆண்களின் வரிகளில் கேட்டே பழகிய நமக்கு, தாமரை எழுதிய ’வசீகரா’ பாடல் தமிழ் திரைப்படத்தில் முதன் முதலாக பெண் ஒருத்தியின் காதல் உணர்வு பெண் பார்வையில் எழுதப்பட்ட பாடலாக பதிவாகி இருக்கிறது" என்று இந்தப் பாடல் நல்ல வரவேற்பைப் பெற்றது[8].
இத்திரைப்படத்தின் பாடல்கள் மற்றும் பின்னணி இசையை அமைத்தவர் ஹாரிஸ் ஜயராஜ் ஆவார். பாடல் வரிகளை வாலி மற்றும் தாமரை ஆகியோர் எழுதியுள்ளனர்.[9] இத்திரைப்படத்தின் வணிக ரீதியான மாபெரும் வெற்றிக்கு இப்படத்தின் சிறப்பான வரவேற்பு பெற்ற பாடல்கள் ஒரு முக்கிய காரணமாகும். படத்தின் பாடல்கள் பிப்ரவரி 2001, அன்று சென்னையில் நடந்த இசை வெளியீட்டு விழாவில் வெளியிடப்பட்டன.[10] இத்திரைப்படத்தின் "வசீகரா" பாடல் நடபைரவி ராகத்தில் அமைக்கப்பட்டதாகும்.[11] ஹாரிஸ் ஜயராஜ் இப்படத்தின் சிறப்பான இசையமைப்பிற்காக தனது முதல் பிலிம்பேர் விருதைப் பெற்றார்.
![]() | |
---|---|
![]() | யூடியூபில் அதிகாரப்பூர்வ பாடல்கள் |
எண் | பாடல் | பாடகர்கள் |
---|---|---|
1 | "அழகிய தீயே" | ஹரிஷ் ராகவேந்திரா, திம்மி |
2 | "ஒரே ஞாபகம்" | தேவன் ஏகாம்பரம் |
3 | "மடி மடி" | திம்மி, கார்த்திக் |
4 | "நெஞ்சைப் பூப்போல்" | ஹரிஷ் ராகவேந்திரா |
5 | "ஓ மாமா மாமா" | சங்கர் மகாதேவன், திப்பு |
6 | "பூப்போல் பூப்போல்" | திப்பு, கார்த்திக் |
7 | "வேறென்ன வேறென்ன" | உன்னிகிருஷ்ணன், ஹரிணி |
8 | "வசீகரா என் நெஞ்சினிக்க" | பாம்பே ஜெயஸ்ரீ |
9 | "வெண்மதி வெண்மதியே" | திப்பு, ரூப் குமார் ரத்தோட் |
இயக்கம் |
| ||||
---|---|---|---|---|---|
தயாரிப்பு |
| ||||
நிறுவனங்கள் |
|