மனம்
மனம் (mind) என்பது, சிந்தனை, நோக்கு, உணர்ச்சி, மன உறுதி, கற்பனை போன்றவற்றில் வெளிப்படுகின்ற அறிவு (intellect) மற்றும் உணர்வுநிலை சார்ந்த அம்சங்களின் தொகுப்பைக் குறிக்கிறது.
மனம் என்பது என்ன, அது எவ்வாறு இயங்குகிறது என்பது தொடர்பான கோட்பாடுகள் நிறையவே உள்ளன. பிளேட்டோ, அரிஸ்ட்டாட்டில், ஆதிசங்கரர், புத்தர் போன்ற பல கிரேக்க, இந்திய தத்துவஞானிகள் இதுபற்றிக் கூறியுள்ளனர். நவீன அறிவியலுக்கு முற்பட்ட காலக் கோட்பாடுகள் இறையியலை அடிப்படையாகக் கொண்டவை. ஆன்மாவுக்கும் மனத்துக்குமான தொடர்புகள் பற்றிப் பேசுகின்றன. நவீன கோட்பாடுகள், அறிவியல் அடிப்படையிலான மூளை பற்றிய புரிந்துகொள்ளலின் அடிப்படையில் ஆனவை. இவை மனம் என்பதை உளவியலின் ஒரு தோற்றப்பாடாக நோக்குகின்றன. அத்துடன் இச்சொல் ஏறத்தாழ உணர்வுநிலை (consciousness)என்பதற்கு ஈடாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
வரையறை
எந்தெந்த மனித இயல்புக் கூறுகள் மனத்தை உருவாக்குகின்றன என்பதும் பெருமளவில் விவாதிக்கப்பட்ட ஒரு விசயமாகும். சிலர், தர்க்க அறிவு, ஞாபகம் போன்ற உயர்நிலை அறிவுச் செயற்பாடுகள் மட்டுமே மனத்தை உருவாக்குகின்றன என்கின்றனர்.[1] இதன்படி, காதல், வெறுப்பு, பயம், களிப்பு போன்ற உணர்வுகள் இயல்பிலும், உருவாக்கத்திலும் மனத்திலிருந்து வேறுபட்டவையாகும். வேறு சிலர், பகுத்தறிவு, உணர்வு என்பன சார்ந்த மனித இயல்புகள் ஒன்றிலிருந்து ஒன்று வேறுபடுத்தப்பட முடியாதவை என்றும், அவை இரண்டுமே இயல்பிலும், உருவாக்கத்திலும் ஒரே விதமானவை என்றும் ஆதலால், இவையனைத்தும் மனத்தின் பகுதிகளாகவே கொள்ளப்பட வேண்டும் என்றும் வாதிடுகின்றனர்.
மனதைப்பற்றி வேதாத்திரி மகரிஷி அவர்கள் கூறும்பொழுது, அது ஆராயப்படவேண்டிய ஒன்று என்றும், அப்படி ஆராய்ந்தால் தான் அது வளப்படும் என்றும் கூறுகிறார். எனவே இதை மனவளக்கலை என்று அவரது போதனையாக அறிமுகப்படுதியிருக்கிறார்."[2]
மனம் சார் புலங்கள்
சிந்தித்தல் அல்லது சிந்தனை சிந்தை அல்லது மூளையில் முதன்மையாக இடம்பெறும் ஓர் அடிப்படைச் செயற்பாடு. ஆங்கிலத்தில் இதை ஒரு cognitive process (அறிதிறன் வழிமுறை) என்று கூறுவர். சிந்தித்தலின் ஊடாக சிந்தனைகள் அல்லது எண்ணங்கள் பெறப்படுகின்றன. இந்த எண்ணங்கள் மொழி, கணிதம், ஓவியம், இசை, கலைப்பொருட்கள், மனித செயற்பாடுகள் என பல வடிவங்களில் வெளிப்படுகின்றன.ஓடுவது, நடப்பது, வாசிப்பது போன்றே சிந்திப்பதும் ஒரு செயற்பாடு எனினும் சிந்திப்பதை விபரிப்பது கடினமானது. அறிவியல் நோக்கிலும் சிந்தித்தல் என்றால் என்ன என்பது தொடர்பாக ஒரு முழுமையான விளக்கம் அல்லது கோட்பாடு இன்னும் இல்லை. எடுத்துக்காட்டாக ஒருவர் கடுமையாக சிந்திக்கிறார் அல்லது திறமையாக சிந்திக்கிறார் என்பதை வரையறை செய்வது சிக்கலானது. சிந்தித்தல் முதன்மையாக ஓர் அகச் செயற்பாடு என்பதால் புறவய நோக்கில் அதை விபரிப்பது இன்னும் சிக்கலான ஒன்றாகவே இருக்கிறது.இருப்பினும் மனிதர் எப்படி சிந்திக்கிறார்கள்? மூளையின் எந்த எந்த பகுதிகள் எந்த எந்த வகையான சிந்தனைகளில் பெரிதும் ஈடுபடுத்தப்படுகின்றன. சிந்திக்கும் பொழுது மூளையில் ஏற்படும் வேதியியல் நிகழ்வுகள் அல்லது மாற்றங்கள் எவை? என பல வழிகளில் சிந்தித்தல் தொடர்பாக ஆய்வுகள் நடைபெறுகின்றன.காரணம் (Reason) என்பது விடய தொடர்பான உணர்வை விழிப்புணர்க் கொள்திறனாகவும், ஏரணம் பிரயோகித்தலாகவும், காரணிகளை உறுதி செய்வதாகவும், செயல் வழக்கத்தை மாற்றல் அல்லது நியாயப்படுத்தலாகவும், புதிய அல்லது ஏற்கெனவே இருக்கும் தகவல் அடிப்படையில் உள்ள நிறுவன அமைப்பும் நம்பிக்கையும் ஆகும்.[3] இது மனித பண்புக்கூறு செயற்பாடுகளான மெய்யியல், அறிவியல், மொழி, கணிதம், கலை ஆகியவற்றுடன் நெருங்கிய தொடர்பு கொண்டதாகவும், மனித இயல்புப் பண்புகளாக வரையறுக்கலாம் என கருதப்படுகிறது.[4]காரணம் அல்லது அதன் பண்பு சிலவேளை பகுத்தறிவு என கருதப்படுகிறது.
மன மெய்யியல்
![](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/f/fa/Phrenology1.jpg/200px-Phrenology1.jpg)
மன மெய்யியல் என்பது மனதின் தன்மை, மனம் சார்ந்த தொடர்புகள், மனச் செயற்பாடுகள், மனப் பொருள், நனவுநிலை மற்றும் பெளதீக உடலுக்கும், குறிப்பான மூளைக்கும் இவற்றுக்குமிடையேயான உறவு பற்றிக் கற்கும் மெய்யியலின் ஓர் பகுதியாகும். மன மெய்யியலில் மன-உடல் சிக்கல் (எ.கா: உடலுடன் மனதுக்குள்ள தொடர்பு) முக்கிய விடயமாகவும், பெளதீக உடலுடன் மனதின் இயல்பு உறவு அற்றது என்ற விடயமும் அதாவது, குறிப்பிட்ட மன நிலையின் இயல்பும் நனவுநிலையும் எப்படி சாத்தியம் போன்ற விடயங்களைக் கொண்டும் உள்ளது.[6][7][8]
மனவியல்
![](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/5/53/Jardin_du_Musee_Rodin_Paris_Le_Penseur_20050402_%2802%29.jpg/220px-Jardin_du_Musee_Rodin_Paris_Le_Penseur_20050402_%2802%29.jpg)
![](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/2/23/Thinking%E0%A7%A8.jpg/220px-Thinking%E0%A7%A8.jpg)
இந்த சிந்தனை-தூண்டுதல் காலங்களில் மிகவும் சிந்திக்கத் தூண்டியது என்னவென்றால், நாம் இன்னும் சிந்திக்கவில்லைஎன்பதே.
– -மார்ட்டின் ஹைடேக்கர் (Martin Heidegger)[9]
ஒரு தொடர்வண்டி பயணத்தில் மனிதன் சிந்திக்கிறான். சுவரில் உள்ள கருத்தோவியம் "'to think for myself' became less favorable".'என்னைப்பற்றி நானே நினைக்கும்போது எனக்கு சாதகமாக நான் நினைப்பது மிகவும் குறைவான அளவே ஆகும்.
அறிதல் தன்மை மனவியல் எனும் மூலத்திலிருந்து, கேள்விக்கு பதில் அல்லது ஒரு நடைமுறை பிரச்சனைக்கு அறிவார்ந்த செயல்படுத்தக்கூடிய செறிவான தீர்வு காணும் நோக்கம் கொண்டவர்களே உளவியலாளர்கள். அறிவாற்றல் உளவியல் அல்லது அறிதல் தன்மை மனவியல் என்பது உளவியலின் ஒரு பிரிவாகும். இது சிக்கல் தீர்த்தல், நினைவகம் மற்றும் மொழி போன்ற பல உள்ளக மன செயல்முறைகளை ஆராய்ந்து புதிய கூறுகளைக் கண்டறியும் பிரிவாகும். இந்த அணுகுமுறையிலிருந்து எடுக்கப்பட்ட சிந்தனையானது அறிதல் தன்மை அல்லது உள்ளத்தால் உணர்வறிவாகவும், அறிவுணர்வாகவும் உள்வாங்குதல் என்று அறியப்படுகிறது. இது, மனதில் தகவல் செயலாக்கம் எவ்வாறு நடைபெறுகிறது என்பதை விளக்குகிறது. குழந்தைகளின் புலனுணர்வு வளர்ச்சியை விவரிக்கும் நிலை / கட்டங்கள் சார்ந்த கோட்பாடுகளை மாக்ஸ் வெர்தீமர்(Max Wertheimer), உல்ஃப்காங்க் கோலர்(Wolfgang Köhler) மற்றும் குர்த் கோஃபிகா(Kurt Koffka)[10] போன்றோரின் பண்பேற்ற கெஸ்டால்ட் உளவியல் (ஜீன் ப்யாஜே)Jean Piaget வின் ஆய்வு வெளிப்பாடுகள் நன்கு பிரதிபலிக்கின்றன.
தனிநபர் சார்ந்த மற்றும் தங்களின் புரிந்துணர்தல், கண்டறிதல், மற்றும் பிரச்சினைகளை தீர்த்தல் போன்ற பல நிலைகளில், அறிதல் தன்மை மனவியலாளர்கள் மனோவியல் முறைகளையும், தூண்டல் துலங்கல் முறைகளையும் மற்றும் சோதனை அணுகுமுறைகளைப் பயன்படுத்துகின்றனர்.
அறிவியல் ஆய்வுகள்
நரம்பு அறிவியல்
அறிவாற்றல் நரம்பு அறிவியல் (cognitive neuroscience) என்பது அறிவாற்றல் உளவியலின் ஒரு பிரிவு. இது மன செயல்பாட்டின்போது மூளையின் அமைப்பையும் செயல்களையும் விவரிக்கிறது.[11] அறிவாற்றல் உளவியல் என்னும் அறிவியலில் உயிரினங்களின் அறிவாற்றல் திறன்களான தகவல் சேமிப்பு, படைப்பாற்றல், மொழி உற்பத்தி, மக்களையும் பொருட்களையும் அடையாளம் காணுதல், பகுத்தறிதல், தீர்வு காணுதல் போன்ற செயல்களுக்கு எவ்வாறு மூளை மன செயல்முறைகள் பொறுப்பாகின்றன என்பதை அறியலாம். காயம்பட்ட மூளையிலும் நரம்புகளிலும் ஏற்படும் செயல்பாட்டை வைத்து, இயல்பான மனநிலை செயல்பாடுகளை ஊகிக்கலாம். மூளை காயமடைந்த நோயாளிகளை ஆய்வு செய்வதன் மூலமும் அவர்களின் குறையுடைய செயல்பாடுகளைக் கூர்ந்து கவனிப்பதன் மூலமும் சான்றுகள் கிடைக்கும்.
வெவ்வேறு மூளைப் பகுதியில் காயமடைந்த இரு நோயாளிகள் வெவ்வேறு குறையுடைய செயல்களை வெளிப்படுத்துவர். முதல் நோயாளிக்கு அச்சு எழுத்துக்களைப் படிப்பது கடினமாயிருந்தால் இரண்டாவது நோயாளிக்கு அச்சு எழுத்துக்களைப் படிப்பது எளிதாயிருக்கும். ஆனால் பேசுவதைப் புரிந்து கொள்வது கடினமாயிருந்து. முதல் நோயாளியோ பேசுவதை எளிதாகப் புரிந்து கொண்டார். இதிலிருந்து விஞ்ஞானிகள் மூளையில் பேச்சைப் புரிந்து கொள்ள தனிப்பகுதி இருப்பதைக் கண்டறிந்தனர். மேலும் மூளையின் ஒவ்வொரு பகுதியும் ஒவ்வொரு வேலைக்குச் சிறப்பான முறையில் அமைந்திருக்கிறது என்பதைக் கண்டறிந்தனர். இது அறிவாற்றல் நரம்பு உளவியலை அறிவாற்றல் நரம்பு விஞ்ஞானத்திலிருந்து வேறுபடுத்தியது. ஆனால் குறிப்பாகப் புலனுணர்வு நிகழ்வுகள் அடிப்படையில் நரம்பியல் வழிமுறைகளைக் கண்டறிவதில் கவனம் செலுத்தியது.
உளவியல்
நரம்புசார் உளவியல் (Neuropsychology) மூளையின் அமைப்பு மற்றும் செயல்பாடுகள் எவ்வாறு குறிப்பிட்ட நடத்தைக்குக் காரணமாகின்றன, அவை எவ்வாறு சிந்தனைத்திறன், உணர்ச்சிகளில் தாக்கம் ஏற்படுத்துகின்றன என்பனவற்றை உட்பொருளாகக் கொண்ட உளவியலின் கிளைத்துறை ஆகும்
நரம்புசார் உளவியலாளர்கள் மருத்துவமனைகளில் நரம்பியல் நோய் காரணமாக உளவியல் பூர்வமான பிரச்சனைகளால் பாதிக்கபட்டவர்களுக்குச் சிகிச்சை அளிப்பவர்களாக அதிகம் இருந்தாலும், வேறு சிலர் பல்கலைக்கழகங்கள், ஆய்வு நிறுவனங்களில் ஆராய்ச்சியாளர்களாகவும், மருந்துகள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யப்படும் மருந்துகள் எவ்வாறு நரம்பு மண்டலத்தில் தாக்கம் ஏற்படுத்துகின்றன என்பதைக் கண்டுபிடிப்பவர்களாகவும் பணியாற்றுகிறார்கள்.[12]
இந்தத் துறை நரம்பியலுடனும், மன நல மருத்துவத்துடனும் அதிகத் தொடர்பு கொண்டது.
வேதாந்த சாத்திரத்தில் மனம்
இந்து சமய வேதாந்த சாத்திரங்கள், குறிப்பாக சாங்கிய மெய்யியல் தத்துவங்கள்,[13] மனம் நான்கு பணிகள் செய்யும் போது நான்கு பெயர்களில் அழைக்கப்படுகிறது. அவைகள்;
- மனம்: சந்தேகம் எழும் போது மனதிற்கு மனம் என்ற பெயர் பெறுகிறது. எதையும் உறுதியாக தீர்மானிக்க இயலாத குழம்பிய மன நிலை இது.
- சித்தம்: பார்த்தவைகள், கேட்டவைகள், உணர்ந்தவைகள் என வாழ்க்கையில் பெறுகின்ற அனுபவங்கள் அனைத்தும் பதிவுகளால் (சமஸ்காரங்கள்) மனதில் சேமிக்கப்படுகிறது. அந்த சேமிப்பு நிலையமாக திகழம் மனதை சித்தம் எனப்படுகிறது.
- புத்தி: தொலைவில் வருபவன் இராமனா அல்லது கிருட்டிணனா என்று குழம்பிய மனம், சேமிப்பு நிலையமான சித்தத்தில் தொலைவில் வருபவனை இராமன் என்றோ அல்லது கிருட்டிணன் என்றோ ஒப்பிட்டு நோக்குகிறது; சித்தத்தில் ஏற்கனவே இராமனை அல்லது கிருட்டிணனைப் பற்றிய பதிவுகள் இருக்குமானால் அவன் இராமன் அல்லது கிருட்டிணன் என்ற முடிவிற்கு வருகிறது. ஒரு வேளை அவர்களைப் பற்றிய தகவல்கள் எதுவும் சித்தத்தில் இல்லாவிட்டால், `அவன் யார் என்று தெரியவில்லை` என்று முடிவு செய்கிறது மனம். இவ்வாறு முடிவு செய்கின்ற மனமே புத்தி ஆகும்.
- அகங்காரம்: மேற்கண்ட மூன்று படிகளின் மூலமாக ஒருவரை அல்லது ஒரு பொருளை அறியும்போது, நான் இராமனை அறிகிறேன், நான் கிருட்டிணனை அறியவில்லை, என்று உறுதி செய்கின்ற நான் எனும் உணர்வாகத் (Ego) திகழம்போது மனம் அகங்காரம் எனப்படுகிறது.
போலி அறிவியலில்
ஆன்மிக உளவியல்
ஆன்மிக உளவியல் (Parapsychology) இயல்பு கடந்த, உள (ஆன்மீக) இயல் நிகழ்வுகள் விசாரனை கருத்து பற்றிய கற்றல்சார் துறையாகும். தொலை நுண்ணுணர்வு, முன்னறிவு, மனக்கண் தொலைக்காட்சி, தொலைவிலுள்ள பொருள்களைத் தொடாமல் நகர்த்தல், மரணத்திற்குக்கிட்டிய அனுபவம், மறுபிறப்பு, அவியுரு அனுபவம் மற்றும் பிற இயல்பு கடந்த விபரங்கள் பற்றி ஆன்மிக உளவியலாளர்கள் ஆராய்கிறார்ககள்.
ஆன்மிக உளவியல் ஆய்வுகள் தனியார் அன்பளிப்புக்களின் பண உதவியினால் சில வேறு நாடுகாளின் தனியார் அமைப்புக்களால் பெரிய அளவில் நடத்தப்படுகின்றன.[14][15][16]