புசீர் மாகாணம் (Bushehr Province (பாரசீக மொழி: استان بوشهر, Ostān-e Būshehr ) என்பது ஈரானில் உள்ள முப்பத்தோறு மாகாணங்களில் ஒன்றாகும். இது நாட்டின் தென் பகுதியில், பாரசீக வளைகுடா கடற்கரைப் பகுதியை ஒட்டி உள்ளது. இதன் தலைநகராக பூசெகர் நகரம் உள்ளது. மாகாணத்தில் அஸலூஹெ, புஷேர், டிஷெஸ்ட்டன், டஷ்தி, டீர்ர், தியாம்ம், ஜாம், கங்கன், கணேவ், டங்கஸ்டன் ஆகிய பத்து மாவட்டங்கள் உள்ளன. 2011இல், இந்த மாகாணமானது சுமார் ஒரு மில்லியன் மக்கள் தொகையைக் கொண்டதாக இருந்தது.
மாகாணமானது நாட்டின் இரண்டாம் பிராந்தியத்தைச் சேர்ந்ததாக உள்ளது. நாட்டில் உள்ள மாகாணங்களின் வளர்சியை நோக்கமாக கொண்டு மாகாணங்களை 2014 சூன் 22 அன்று ஐந்து பிராந்தியங்களாக ஒருங்கிணைக்கப்பட்டது.
வரலாறு
நியார்க்கஸ் போரின் போது புசீர் நகர் பற்றி கிரேக்கர்கள் அறிந்திருந்தனர். 1913ஆம் ஆண்டில் ஒரு பிரெஞ்சு அகழ்வாய்வுக் குழு நடத்திய ஆய்வுகளின் முடிவில், எலிமைட் பேரரசுக்கு முன்னதாவே புசீர் நகரம் தோன்றியதாக தீர்மானித்தது. லயன் என அழைக்கப்படும் ஒரு நகரில் இருந்த ஒரு கோயிலானது கடற்படை தாக்குதல்களில் இருந்து பாதுகாக்கும் வகையில் மதில்கள் வடிவமைக்கப்பட்டதாக இருந்தது. இந்த நகரத்தின் எஞ்சியுள்ள பகுதியானது இன்றைய புசீர் நகரின் தெற்கே 10 கி.மீ. தொலைவில் உள்ளது.
பாரசீக மாகாணமான ஷபான்கரேயின் பகுதியாக இந்த பிராந்தியத்தை மார்கோ போலோ விவரிக்கிறார். [3]
போர்த்துகீசியர்கள், 1506இல் புசீர் நகரத்தைக் கைப்பற்றினர். பாரசீக வளைகுடா பிராந்தியத்தில் அவர்களைத் ஷா அபாஸ் ஸாபாவி தோற்கடிக்கும்வரை அவர்கள் அங்கே இருந்தனர். 1734 வாக்கில், பாரசீக வளைகுடாவில் அப்சரித்து வம்சத்தின்நாதிர் ஷாவின் இராணுவக் கொள்கைகள் காரணமாக புசீர் மீண்டும் முக்கியத்துவம் பெற்றது.
பாரசீக வளைகுடாவில் நாதிர் ஷாவின் கடற்படை கடற்படையின் மைய தளமாக புசீரை அவர் தேர்ந்தெடுத்தார். இதனால் அவர் நகரின் பெயரை பண்டார ஈ நாடிரியா (நாதிர் துறைமுகம்) என மாற்றினார். ஜான் எல்டனின் என்ற ஒரு ஆங்கிலேயரை அவர் தனது கடற்படையை உருவாக்க உதவிகோரினார். அவரது கடற்படையானது பல கப்பல்களையும் 8000-10000 நபர்களையும் கொண்டிருந்தது என ஒரு டச்சு குறிப்பு தெரிவிக்கிறது.
நாதிர் ஷா இறந்த பிறகு, புசீருடன் நல்ல வர்த்தக உறவுகளை டச்சு பேணியது. இது 1763 ஆம் ஆண்டில் பிரித்தானியருக்கு புசீர் அறிமுகமாகி, ஜான் வம்சத்தின் கரிம் கான் உடன் அவர்கள் ஒப்பந்தம் செய்து கொண்டது வரை இது நீடித்தது. அப்போது, புசீர் நகரமானது ஈரானின் முதன்மை துறைமுக நகராக பாரசீக வளைகுடாவில் மாறியது. கஜர் காலத்தில், பிரிட்டன், நோர்வே, உருசியா, இத்தாலி, பிரான்சு, ஜெர்மனி, உதுமானியப் பேரரசு ஆகிய நாடுகளின் இராஜதந்திர மற்றும் வர்த்தக அலுவலகங்கள் புசீர் நகரில் இருந்தன. பிரிட்டன் இப்பகுதியில் தன் காலை நன்கு ஊன்றி வருவாய் ஈட்டி வந்தது. கஜர் காலத்தில், இந்த துறைமுகத்தில் ஒவ்வொரு ஆண்டும் 100 பிரித்தானிய கப்பல்கள் வந்து சென்றன.
2013 புசீர் நிலநடுக்கம்
2013ஆம் ஆண்டு ஏப்ரல் 9 ம் தேதி புசீர் மாகாணத்தின் டாஷிய மாவட்டத்தில் ஷோன்பேக் நகரம் மற்றும் ஷொன்பேப் மற்றும் தாசூஜ் ஆகிய கிராமங்களஇல் ரிக்டர் அளவுகோலில் 6.1 அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் குறைந்தபட்சம் 37 பேர் கொல்லப்பட்டனர்.[4]