புனித பிரான்சிசு மகளிர் கல்லூரி
புனித பிரான்சிசு மகளிர் கல்லூரி என்பது புனித சகோதரிகள் அறக்கட்டளையால் இந்தியாவின் தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள பேகம்பேட்டில் 1959 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட மகளிர் கல்லூரியாகும். கத்தோலிக்க சிறுபான்மை நிறுவனமான, இது தெலங்காணா மகளிர் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
வகை | தன்னாட்சி பெற்ற அரசு உதவி பெறும் மகளிர் கல்லூரி |
---|---|
உருவாக்கம் | 1959 |
நிறுவுனர் | புனித சகோதிரிகள் சபை |
சார்பு | தெலங்காணா மகளிர் பல்கலைக்கழகம் |
தரநிர்ணயம் | பல்கலைக்கழக மானியக் குழு (இந்தியா), தேசிய மதிப்பீடு மற்றும் தரச்சான்று அவை |
முதல்வர் | முனைவர் உமா ஜோசப் |
அமைவிடம் | 6,உமா நகர், பேகம்பேட்டை , , , 500016 , 17°26′14″N 78°27′37″E / 17.4371226°N 78.460385°E |
வளாகம் | நகர்ப்புறம் |
மொழி | தெலுங்கு, ஆங்கிலம், இந்தி |
இணையதளம் | கல்லூரி இணையதளம் |
வரலாறு
பேகம்பேட்டை மற்றும் அதன் அருகிலுள்ள பெண்களின் கல்விக்காக 1959 ஆம் ஆண்டில் புனித பார்தோலோமியா கேபிதானியோ மற்றும் புனித வின்சென்சா செரோசாவினால் ஆரம்பிக்கப்பட்ட புனித சகோதரிகள் அறக்கட்டளை மூலம் இக்கல்லூரி நிறுவப்பட்டுள்ளது.
இக்கல்லூரியின் அடிப்படைகளான "நெறி, பாதுகாவலர் மற்றும் வழிகாட்டி" என்பது இயேசு கிறிஸ்துவின் போதனைகளிலிருந்து பெறப்பட்டுள்ளது.[1] இந்தியா டுடே இதழால் ஹைதராபாத்தில் உள்ள சிறந்த கலைக் கல்லூரி, [2] சிறந்த அறிவியல் கல்லூரி [3] மற்றும் சிறந்த வணிகக் கல்லூரி [2] என மூன்று பிரிவுகளில் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
2013 ஆம் ஆண்டு ஐதராபாத்தில் உள்ள அமெரிக்க துணைத் தூதரகத்தால்[4] இக்கல்லூரியில் அமெரிக்கன் கார்னர் நூலகம் அமைக்கப்பட்டுள்ளது.[5] இந்திய-அமெரிக்க கூட்டாண்மையை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டும் அமெரிக்க வாழ்க்கை மற்றும் கலாச்சாரத்தின் அம்சங்களில் உள்ள பொருட்கள் மற்றும் உரையாடல்களுக்கான அணுகலை வழங்கும் பொருட்டும் இந்த நூலகம் அமைக்கப்பட்டுள்ளது.
சர்ச்சை
ஆகஸ்ட் 2019 ஆம் ஆண்டில்,கல்லூரி மாணவர்களின் ஆடைக் குறியீட்டை ஒழுங்குபடுத்துவதை நோக்கமாகக் கொண்டு புதிய கல்லூரி விதி ஒன்று, கையில்லாத ஆடைகள், முழங்கால் தெரியும் உடைகள் மற்றும் முழங்கால் நீளத்திற்கு மேல் இருக்கும் குர்த்திகளை அணிந்த மாணவிகளை கல்லூரிக்குள் அனுமதிப்பதில்லை என்று அறிமுகப்படுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து, செப்டம்பரில், மாணவிகள் கல்லூரி வளாகத்திற்குள் நுழைவதற்கு முன்பு ஆடை அளவீட்டு சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். இந்த பெண் வெறுப்பு தன்மை விதியை காரணம் காட்டி பல மாணவர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். [6] இக்கல்லூரி முதல்வர் சகோதரி சாண்ட்ரா ஹோர்டா ஒரு மாணவியின் ஆடையை இழுத்து சோதிக்கும் வீடியோ காட்சி இணையதளத்தில் வெகுவேகமாகப் பரவியது. அதைத் தொடர்ந்து மாணவர்கள் பல நாட்கள் போராட்டங்களை நடத்தினர், அதைத் தொடர்ந்து இந்த ஆடைக் கட்டுப்பாடு விதிகள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டன. ஆனால் அடுத்த கல்வியாண்டில் இருந்து இந்த "முழங்கால் நீள குர்திகள்" விதி தொடர்ந்து வருகிறது. [7]
குறிப்பிடத்தக்க முன்னாள் மாணவர்கள்
- ஸ்மிதா சபர்வால் - ஐஏஎஸ் அதிகாரி
- சாய்லட்சுமி பலிஜேப்பள்ளி - அறுவை சிகிச்சை நிபுணர் மற்றும் தொண்டு நிறுவனர் [8]
- லட்சுமி மஞ்சு - நடிகை
- மாளவிகா நாயர் - நடிகை
அங்கீகாரம்
1964 ஆம் ஆண்டில் பல்கலைக்கழக மானியக் குழுவின் சட்டப்பிரிவு 2(f) மற்றும் 12B மூலம் அங்கீகரிக்கப்பட்டுள்ள இக்கல்லூரி, 1988 ஆம் ஆண்டில் கடிதம் எண். F. 24-7/87 (NFE) மூலம் தன்னாட்சி நிலையை அடைந்துள்ளது. தெலங்காணா மகளிர் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ள இக்கல்லூரியானது தேசிய மதிப்பீடு மற்றும் தரச்சான்று அவையின் நான்காவது சுழற்சியில் ஏ தரத்துடன் மறு அங்கீகாரம் பெற்றுள்ளது.[9]