பிரம்மேஸ்வரர் கோயில்
பிரம்மேஸ்வரர் கோயில் (Brahmeswara Temple) பொ.ஊ. 1058-இல் கட்டப்பட்டு, பிரம்மேஷ்வரருக்கு அர்பணிக்கப்பட்ட இந்துக் கோயிலாகும். இக்கோயில் வட இந்தியப் பஞ்சாயதனக் கட்டிடக் கலை நயத்தில் கட்டப்பட்டுள்ளது.
பிரம்மேஸ்வரர் கோயில் | |
---|---|
பிரம்மேஸ்வரர் கோயில் | |
அமைவிடம் | |
நாடு: | இந்தியா |
மாநிலம்: | ஒடிசா |
அமைவு: | புவனேஸ்வர் |
கோயில் தகவல்கள் | |
மூலவர்: | பிரம்மேஸ்வரர் |
வரலாறு | |
கட்டப்பட்ட நாள்: | பொ.ஊ. 1058 |
பிரம்மேஸ்வரர் கோயில் இந்தியாவின் ஒடிசா மாநிலத்தின் தலைநகரான புவனேஸ்வரில் அமைந்துள்ளது.
இக்கோயிலின் உள்ளும், வெளிலும் கல்வெட்டுக் குறிப்புகள் நிறைந்துள்ளது. பொ.ஊ. பதினெட்டாம் நூற்றாண்டில் இக்கோயில் மறுசீரமைக்கப்பட்ட போது, அங்கிருந்த கல்வெட்டுக் குறிப்புகள் மூலம், இக்கோயிலை சந்திர குல மன்னர் உத்யோதகேசரியின் தாயான கோலவதி தேவியால் பொ.ஊ. 1058-இல் கட்டப்பட்டதாக அறியப்படுகிறது.[1] இக்கோயிலின் பதிவுகள் குறித்த கல்வெட்டுகள் தற்போது கொல்கத்தா அரசு அருங்காட்சியகத்தில் உள்ளது.
கட்டிடக் கலை
மணற்கல்லால் கட்டப்பட்ட பிரம்மேஸ்வரர் கோயில் வட இந்தியப் பஞ்சயாதனக் கட்டிடக் கலை நயத்தில் கட்டப்பட்டுள்ளது. மூலவரான பிரம்மேஸ்வரரின் கருவறையின் நான்கு மூலைகளில் நான்கு தெய்வங்களின் சிறு துணைக் கோயில்கள் அமைந்துள்ளது.
கோயிலின் விமானம் 18.96 மீட்டர் உயரம் கொண்டது.[2] இக்கற்கோயில் மரச்சிற்பங்களுடன் கூடியது. இக்கோயிலின் மொத்த அமைப்பும் பிரமிடு வடிவிலானது.
இக்கோயிலின் கட்டிட அமைப்பில், கருவறை மற்றும் மகா மண்டபத்தை இணைக்கும் அந்தராளம் எனும் முற்ற வெளியுடன் கூடியது.
கோயில் கதவுகளில் எண் திசைக் காவலர்களான திக்பாலகர்களின் சிற்பங்கள் பொறிக்கப்பட்டுள்ளது. மனிதத் தலையும், திரிசூலத்தையும் ஏந்திய சாமுண்டி ஒரு பிணத்தின் மீது நிற்கும் சிற்பமும், கொடூரப் பார்வையுடன் கூடிய ருத்திரன் மற்றும் பிற தேவதைகளின் சிற்பங்கள் இக்கோயிலில் செதுக்கப்பட்டுள்ளது.