பாபா அணு ஆராய்ச்சி மையம்
பாபா அணு ஆராய்ச்சி மையம் (Bhabha Atomic Research Centre) இந்தியாவில் மிகவும் புகழ் பெற்ற ஒரு அணு ஆராய்ச்சி நிலையம் ஆகும், இது மும்பையில் அமைந்துள்ளது. இந்தியாவின் முதன்மையான அணுசக்தி ஆராய்ச்சி நிலையமாக இதனை இந்தியாவின் புகழ் பெற்ற அறிவியல் வல்லுனரான ஹோமி பாபா அவர்கள் தலைமையில் செயல்படுத்தியதாகும். இங்கு பல வகையான அணு சக்தியை சாதகமான வழிகளில் பயன்படுத்துவதற்கான அணு உலைகள் செயல்பாட்டில் உள்ளன. இவை அனைத்தும் உயர்தர ஆராய்ச்சிக்காகவே உருவாக்கியவை ஆகும். பாபா அணு ஆராய்ச்சி மையம் ஒரு பன்முக சேவை யாற்றிவரும் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவனம். இந்நிறுவனம் அணுக்கரு எரிபொருள் சுழற்சி, தற்கால மற்றும் எதிர்காலத்தில் தேவைப்படும் நவீன அணுக்கரு ஆற்றல் அமைப்புகள், தொழிற்சாலைகளுக்குத் தேவையான மின்னாற்றல் சாராத அணுக்கரு ஆற்றல், வேளாண்மை, சுகாதாரம் என ஒவ்வொரு துறையிலும் நாட்டை வலிமைப்படுத்துவதையே முக்கிய குறிக்கோளாகக் கொண்டு செயலாற்றி வருகிறது . மேலும் ரோபோடிக்ஸ், சூப்பர்- கணினிகள், லேசர்கள், முடுக்கிகள், மனித மரபணுக்கள், நானோ-தொழில்நுட்பம் மற்றும் உயர் கடத்திகள் போன்ற அதிநவீன தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சித் திட்டங்களில் சிறப்புடன் செயலாற்றி வருகிறது. அடிப்படை அறிவியலின் முக்கியம் வாய்ந்த பல துறைகளில் ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகிறது
Bhabha Atomic Research Centre | |
![]() Bhabha Atomic Research Centre भाभा परमाणु अनुसन्धान केंद्र | |
சுருக்கம் | பா அ ஆ மை |
---|---|
உருவாக்கம் | சனவரி 3, 1954[1] |
நோக்கம் | நாட்டை வலிமைப்படுத்து |
தலைமையகம் | டிராம்பே, மும்பை, மகாராஷ்டிரா, |
தலைமையகம் | |
இயக்குனர் | சேகர் பாசு |
வலைத்தளம் | barc |
வரலாறு
![](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/c/c1/Trombay.jpg/220px-Trombay.jpg)
இந்த ஆராய்ச்சி மையம் 1954 ஆம் ஆண்டில், டிராம்பே அணு சக்தி நிறுவனமாகத் துவங்கியது. அப்போது டாடா இன்ஸ்டிட்யுட் ஆப் பண்டமெண்டல் ரிசேர்ச் என்ற நிறுவனத்தில் பணி புரிந்த பல அறிவியல் வல்லுனர்கள் இந்த நிறுவனத்தில் பணி புரிவதை விரும்பி ஏற்றுக்கொண்டார்கள். அதன் தலைவராக இருந்த ஹோமி பாபாவின் மறைவுக்குப் பின், 1966 ஆம் ஆண்டு முதல் இந்நிறுவனம் 'பாபா அணு ஆராய்ச்சி மையம்' என்ற பெயரில் அறியப்பெற்றது.
இந்த ஆராய்ச்சி மையம் இந்தியாவின் அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்துறை அமைச்சகத்தின் கீழ் அமைந்த இந்திய அணு சக்தித்துறையின் மேற்பார்வையில் செயல்பட்டு வருகிறது.[2] இந்த ஆராய்ச்சி நிலையத்திற்கான துவக்கத்தில் தேவைப்பட்ட அணு ஆராய்ச்சி உலைகள் மேற்கு நாடுகளில் இருந்து வரவழைக்கப்பட்டன. தாராப்பூர் அணுசக்தி நிலையத்தில் முதல் முதலில் செயல் பட்ட அணு சக்தி தயாரிக்கும் உலைகள் அமேரிக்காவில் இருந்து பெற்றவையாகும்.[2]
1956 ஆம் ஆண்டில் , இங்கு முதலில் துவங்கிய அணு ஆராய்ச்சி மையத்தின் உலைகளை அன்றைய இந்தியப் பிரதமர் ஜவஹர்லால் நேரு அப்சரா என பெயரிட்டார். அதற்குப் பிறகு முறையே கானடா நாட்டின் உதவியுடன் சைரஸ் (1960), ஜெரேலினா (1961) (இப்பொழுது செயல்பாட்டில் இல்லை), முதலாம் பூர்ணிமா (1972), இரண்டாம் பூர்ணிமா (1984), த்ருவா (1985), மூன்றாம் பூர்ணிமா (1990), காமினி ஆகிய ஆராய்ச்சி நிமித்தமான உலைகள் செயல் பாட்டில் உள்ளன.
1974 ஆம் ஆண்டில் ஆக்கபூர்வமான வழிகளில் ஆராய்ச்சி மேற்கொள்வதற்காக பொக்ரானில் நடத்திய சோதனைக்காக புளுத்தோனியம் சைரஸ் திட்டத்தின் கீழ் பெற்றதாகும். 1974, 1998 ஆகிய ஆண்டுகளில் இந்தியா நடத்திய சோதனைகள் மூலமாக, அணு ஆலைகளில் பயன்படும் எரிபொருட்களை தயாரிப்பதற்கான தொழில் நுட்பத்தில் இந்தியர்கள் முன்னேற்றம் அடைந்ததையும், பாதுகாப்பான முறையில் அவற்றை பயன்படுத்தும் திறனை பெற்றிருப்பதையும் உலகத்திற்கு உணர்த்தியது.
கக்ரபார் அணுமின் நிலையம், ராஜஸ்தான் அணுமின் நிலையம், தாராப்பூர் அணுமின் நிலையம்[3] ஆகிய இந்திய ந்யூக்ளியர் பவர் கோர்போரேசன் நிருவாகத்தின் கீழ் செயல்படும் அணு சக்தி நிலையங்கள் இந்த ஆராய்ச்சி மையத்தில் கிடைக்கப்பெற்ற தொழில் நுட்பங்களை பயன்படுத்தி மேம்படுத்தியதாகும்.[4] புகழ் பெற்ற இந்திய அறிவியல் வல்லுநர் திரு ராஜா ராமண்ணா அவர்கள் இந்த மையத்தின் ஆணையாளராக எட்டாண்டுகள் (1972-1978) செயல்பட்டார்.