பவள முக்கோணம்
- பக்கம்
- உரையாடல்
கருவிகள்
Actions
பொது
அச்சு/ஏற்றுமதி
பிற திட்டங்களில்
பவள முக்கோணம் (ஆங்கில மொழி: Coral Triangle, மலாய்: Segitiga Terumbu Karang) என்பது, இந்தோனேசியா, மலேசியா, பப்புவா நியூ கினி, பிலிப்பைன்ஸ், சாலமன் தீவுகள், கிழக்கு திமோர் ஆகிய நாடுகளின் கடல்சார் பகுதியைக் குறிக்கும் ஒரு புவியியல் குறிப்புச் சொல்லாகும்.[1] வெப்ப மண்டல கடல் நீரைக் கொண்ட இந்த நிலப்பகுதி, ஒரு முக்கோண வடிவத்தைக் கொண்டது. அதனால், அதற்கு பவள முக்கோணம் என பெயர் சூட்டப் பட்டது.
இந்தப் பவள முக்கோணத்தில், பவளப் பாறைகளை உருவாக்கும் பாறைப் பவள உயிரிகள் நிறைந்து உள்ளன. இதுவரையில் 600-க்கும் மேற்பட்ட பாறைப் பவள உயிரிகள் அடையாளம் காணப்பட்டு உள்ளன. தவிர, 2000-க்கும் மேற்பட்ட பவளப் பாறை மீன் இனங்களையும் அடையாளம் கண்டு இருக்கிறார்கள்.[2]
அண்மைய காலங்களில், இந்த முக்கோணம் ஆசியான் நாடுகளைச் சேர்ந்த கடல்வாழ் உயிரின ஆய்வாளர்களையும், வெளிநாட்டு அறிவியலாளர்களையும் பெரிதும் கவர்ந்து வருகிறது.[3]
இந்தப் பவள முக்கோணம், இரு உயிர்ப் புவிஅமைப்பு மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு உள்ளது.
கடல்களின் அமேசான் (Amazon of the seas) என புகழாரம் செய்யப்படும் இந்தப் பவள முக்கோணம், கடல்வாழ் பல்லுயிர்களின் அனைத்துலக மையம் என்றும் அங்கீகரிக்கப்பட்டு உள்ளது. ஏனெனில், இந்த முக்கோணம், 5.7 மில்லியன் ச.கி.மீ. கடல்நீர் பரப்பளவைக் கொண்டது.[5]
இந்த முக்கோணத்தில் இருந்து கிடைக்கும் உயிரியல் வளங்கள், அந்தப் பகுதியில் வாழும் 120 மில்லியன் மக்களைக் காப்பாற்றி வருகின்றன.[6] அதாவது, மீன்பிடித்தல் மூலமாக ஆண்டுக்கு 3 பில்லியன் டாலர் அந்நியச் செலாவணியை வருமானமாக ஈட்டித் தருகின்றன.[7]
அண்மைய காலங்களில் ஆழ்கடல் மீனவர்களால், அப்பகுதியின் கடல்வாழ் உயிரினங்களுக்கு அச்சுறுத்தல்கள் ஏற்பட்டு வருகின்றன. ஆகவே, அவற்றிற்கு, தகுந்த பாதுகாப்பு அளிக்க வேண்டும் என இயற்கைக்கான உலகளாவிய நிதியம் (World Wide Fund for Nature) கருதுகிறது. அதன் பொருட்டு, பவள முக்கோணத் திட்டம் எனும் ஒரு திட்டத்தை உருவாக்கி உள்ளது. அதைச் செயல்படுத்துவதில் முன்னுரிமையும் வழங்கி வருகிறது.[8][9]
பவள முக்கோணத்தில், பெரிய வகை திமிங்கல சுரா மீன்களைத் தவிர, 3,000 க்கும் மேற்பட்ட மற்ற மீன் இனங்களும் உள்ளன. 7 கோடி ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்ததாகச் சொல்லப்படும் அரிய வகை மீன் இனமான சீலகாந்த் (Coelacanth) மீன்களும், இந்த முக்கோணத்தில் இருப்பதாகக் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. 1952-ஆம் ஆண்டில் கன்டுபிடித்தார்கள்.[10][11] உலகில் ஏழு வகையான கடலாமைகள் உள்ளன. அவற்றில் ஆறு வகை ஆமைகள், இந்தப் பவள முக்கோணத்தில்தான் காணப் படுகின்றன.[9]
கடந்த பத்தாண்டுகளில், பல வகையான கடல்சார் பல்லுயிர்களுக்கு அச்சுறுத்தல்கள் ஏற்பட்டு வருகின்றன. கடற்கரை மேம்பாடுகள்; அளவுக்கு மீறி மீன் பிடித்தல்; பவள முக்கோண நாடுகளின் அடிப்படையான ஏழ்மைநிலை; கடல்சார் பல்லுயிர்களைப் பாதுகாப்பதில், அரசியல் அதிகாரத்தின் மிதமான போக்கு; தட்பவெப்ப நிலை மாற்றம்[12] போன்றவை காரணச் சான்றுகளாக அமைகின்றன. அரிய வகை மீன்களுக்கு உலகச் சந்தையில் ஏற்பட்டு வரும் கிராக்கியும் ஒரு காரணமாகச் சொல்லப்படுகிறது.[13]
பவள முக்கோணத்தில், ஏறக்குறைய 120 மில்லியன் மக்கள் வாழ்கிறார்கள். இவர்களில் 2 புள்ளி 25 மில்லியன் மக்கள் மீனவர்களாகும். பொதுவாக, இவர்களுக்கு கடல்தான் வாழ்வதாரம்.[14] ஏழ்மைச் சுழ்நிலையில் வாழும் இவர்களுக்கு கடல்சார் உயிரினங்களைப் பாதுகாக்க வேண்டும் என்பது முக்கியமாகப் படவில்லை. அரிய வகை மீன்களுக்கு ஏற்பட்டு வரும் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் மீனவர்கள் பெரும் பொறுப்பு வகிக்கின்றனர்.[15]
பவள முக்கோணப் பகுதியில் தூனா வகை மீன்கள், வரையறுக்கப்பட்ட நிலையையும் தாண்டி, மேலும் கூடுதலாகப் பிடிக்கப்படுவதாகவும் அறியப் படுகிறது.[14] தூனா மீன்கள் விரைவில் அழியக் கூடிய சாத்தியங்கள் உள்ளன என்றும் ஆய்வாளர்கள் கருத்துரைக்கின்றனர்.[16][14]
தற்சமயம், பவள முக்கோண வட்டாரத்தில் பல வகையான பாதுகாப்பு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில், அங்கு அமைந்துள்ள அரசாங்கங்கள், இயற்கை பாதுகாப்பு அமைப்புகள், உலகளாவிய இயற்கை நிதியம் (World Wide Fund for Nature), அனைத்துலக இயற்கை பாதுகாப்பு நிறுவனம் (The Nature Conservancy and Conservation International), ஆசிய மேம்பாட்டு வங்கி போன்ற அமைப்புகள் பெரும் பங்காற்றி வருகின்றன.[14][17][18]
2013 ஆவணப் படம் (Journey to the South Pacific). பவள முக்கோணத்தில் எவ்வாறு பாதுகாப்புகள் மேற்கொள்ளப் படுகின்றன எனும் படக்கதை.[19]