பஞ்சாபிய நோன்புகள்
கருவிகள்
Actions
பொது
அச்சு/ஏற்றுமதி
பஞ்சாபில் பின்வரும் நோன்புகளை அங்கு வழங்கப்படும் பல்வேறு நாட்டார் சமய வழக்கங்களின் பகுதியாகக் கடைபிடிப்பர்.
கரு-யே தா வரத் (ਕਰੂੲੇ ਦਾ ਵਰਤ) என்பது கர்வா சௌத் நோன்பின் பஞ்சாபி பெயராகும்[1] இந்நோன்பு தொன்றுதொட்டு பஞ்சாப் பகுதியில்தான் முதன்மையாகக் கடைபிடிக்கப்பட்டு வருவது. எனினும் பிற்காலங்களில் உத்தரப் பிரதேசம்[2] மற்றும் இராசத்தான் பகுதிகளிலும் இந்நோன்பு வழக்கம் பெற்றுள்ளது.
கர்வா சௌத் நோன்பு மேற்கொள்ளும் முறைப்படி ஒரு பெண் விரதம் முடித்து உண்ணும் முன் தன் கணவனைக் காண வேண்டும். எனினும், கரு-யே தா வரத்தில் திருமணமான தங்கையைத் தனையன் அழைத்துச் சென்று, நோன்பைப் பெண்ணின் பிறந்த வீட்டில் நிகழ்த்துவது வழக்கம்.[1]
பெண்கள், விடியலுக்கு முன் இனிப்புப் பலகாரங்களை உண்பர். பின் பகல் முழுதும் வேறெதுவும் உண்ணாமல் நோன்பிருப்பர். நோன்பு குறித்தக் கதைகள் கேட்ட பின்பே உணவு உட்கொள்வர். பெண்கள் தம் துணைவனின் நலம் பேணுதலே இந்நோன்பின் நோக்கமாகும்.[1]
(ਝਕਰੀਆ ਦਾ ਵਰਤ) ஜாக்ரியா-தா-வரத் என்பது மகன்களின் நலம் காக்கும் பொருட்டு தாய்மார்கள் மேற்கொள்ளும் ஒரு பஞ்சாபிய நோன்பு. ஜாக்ரி என்பது வரண்ட இனிப்புப் பன்னியங்கள் நிறைக்கப்பட்ட மட்பாண்டமாகும். தாய்மார்கள் காலை வேளையில் ஏதேனும் இனிப்பை உண்ட பின் நாள் முழுதும் உண்ணா நோன்பிருக்க வேண்டும்.
கர்வா சௌத் நோன்பு முடித்த நான்காம் நாள் ஜாக்ரியா-தா-வரத் கடைபிடிக்கப்படும். இந்நோன்பை முதல் முறையாகக் கடைபிடிக்கும் தாய், ஜாக்ரியில் வைக்கப்பட்ட இனிப்புகளை தன் கணவனின் சுற்றத்திற்குப் பகிர்ந்தளிப்பார். மேலும் தன் மாமியாருக்கு ஒரு பஞ்சாபி அங்கியை வழங்க வேண்டும்.
தொடர்ந்து கடைபிடிக்கப்படும் நோன்புகளில் தாய்மார்கள் ஜாக்ரியில் நீர், வெல்லம் மற்றும் அரிசியை நிரப்பி வைப்பர். நிலவு உதிக்கும் போது விண்மீன்களுக்கும் தம் மகன்களுக்கும் படையல் வழங்கப்படும். வேறு பலகாரங்களும் பண்டங்களும் பரிமாறப்படும். அதன்பின் தாய்மார்களும் ஏதேனும் இனிப்பை உண்டு நோன்பை முடிப்பர்.[3]
(ਭੁਗੇ ਦਾ ਵਰਤ) பூகே-தா-வரத் சகோதரர்களின் நலன் காக்க வேண்டி சகோதரிகள் 'போ' எனும் பஞ்சாபி மாதத்தில் நோற்கும் நோன்பாகும். பெண்கள் இனிப்பு எள்ளுருண்டை உண்டு இந்நோன்பை முடிப்பர்.[3]