நெல்லூர்
நெல்லூர் (Nellore) இந்தியாவின் ஆந்திர மாநிலத்தின் நெல்லூர் மாவட்டத்திலுள்ள ஒரு நகரமாகும். மக்கள்தொகை அடிப்படையில் நெல்லூர் ஆந்திரப்பிரதேசத்தின் 6வது பெரிய நகராகும்[1]. பெண்ணாற்றின் [2] (வடபெண்ணை) கரையில் அமைந்துள்ள இந்நகரின் பழைய பெயர் விக்ரம சிம்மபுரி ஆகும் [3]. மாவட்டத்தின் தலைநகரம், நெல்லூர் மண்டலம், நெல்லூர் வருவாய்க் கோட்டம் [4] என்ற பலவாறாக நெல்லூர் அறியப்படுகிறது. அதிக மக்கள் தொகை கொண்ட நகரங்களின் பட்டியலில் நெல்லூர் நான்காவது இடத்தைப் பிடிக்கிறது. நெல்லூர் மாநிலத்தின் தலைநகரான ஐதராபாத்திற்கு தென்கிழக்கில் 453 கிமீ தொலைவிலும் சென்னையிலிருந்து வடக்கில் 173 கிமீ தொலைவிலும் உள்ளது. சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலை நெல்லூர் வழியாக செல்லுகிறது.
நெல்லூர் | |
---|---|
நகரம் | |
ஆள்கூறுகள்: 14°26′33″N 79°59′11″E / 14.44250°N 79.98639°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | ஆந்திரப் பிரதேசம் |
மாவட்டம் | நெல்லூர் |
அரசு | |
• வகை | மாநகராட்சி |
• நிர்வாகம் | நெல்லூர் மாநகராட்சி |
நேர வலயம் | ஒசநே+5:30 (இசீநே) |
அஞ்சல் குறியீட்டு எண் | 524 001 - 524 005 |
தொலைபேசி | +91-861 |
வாகனப் பதிவு | AP-26 |
பெயர்க்காரணம்
இங்கு நெல்லி மரத்தினடியில் லிங்க வடிவில் ஒரு கல் இருந்ததாக தொல் புராணக் கதை ஒன்று கூறுகிறது. நெல்லி ஊர் என்பது நாளடைவில் நெல்லூராக மாறியது என்பது வரலாறு ஆகும். நெல்லிக்கு தெலுங்கில் உசிரி என்ற பெயர் இருந்தாலும் மெட்ராசு மாகாணத்தில் ஆட்சி மொழியாக இருந்த தமிழின் தாக்கத்தால் இவ்வாறு மாறியிருக்கலாம் என நம்பப்படுகிறது.[5]
வரலாறு
சோழர்கள், பல்லவர்கள், பாண்டியர்கள், மௌரியப் பேரரசு, சேதி வம்சத்தின் காரவேலன் , சாதவாகணர்கள், காக்கத்தியர்கள், கலிங்கத்தின் கீழைக் கங்கர்கள் , விஜயநகரப் பேரரசு, ஆற்காடு நவாபு போன்றவர்கள் நெல்லூரை ஆட்சி செய்துள்ளனர். தஞ்சாவூர் மௌரியப் பேரரசின் கீழ் முதலாம் இராசேந்திர சோழன் ஆட்சி செய்த சோழர்களின் காலத்திலிருந்தே நெல்லூர் இருந்து வந்துள்ளது. மற்றும் 3 ஆம் நூற்றாண்டில் மௌரிய அரசர் அசோகராலும் நெல்லூர் ஆளப்பட்டுள்ளது. பின்னர் நெல்லூர் பல்லவ வம்சத்தின் ஆட்சியாளர்களால் கைப்பற்றப்பட்டு கி.பி 6 ஆம் நூற்றாண்டு வரை அவர்கள் ஆட்சியில் அகப்பட்டிருந்தது. பின்னர் சோழ ஆட்சியாளர்கள் நெல்லூரை நீண்ட காலம் ஆட்சி செய்தனர். தெலுங்கு சோழர்கள் 13 ஆம் நூற்றாண்டில் அவற்றின் வீழ்ச்சியை சந்தித்தனர். கி.பி பதின்மூன்றாம் நூற்றாண்டில் அவை வீழ்ச்சியடையும் வரை இது சோழ இராச்சியத்தின் ஒரு பகுதியாக உருவெடுத்திருந்ததாக தமிழ் கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன[6]. பின்னர் காகதியர்கள் , விஜயநகர பேரரசு, கோல்கொண்டாவின் சுல்தான்கள் , முகலாய பேரரசு மற்றும் ஆற்காட்டு நவாப் என பலரும் நெல்லூரை ஆண்டனர். 18 ஆம் நூற்றாண்டில், நெல்லூரை ஆங்கிலேயர்கள் ஆர்காட்டு நவாப்களிடமிருந்து கையகப்படுத்தினர் நெல்லூர் பிரித்தானிய இந்தியாவின் மெட்ராசுமாகாணத்தின் ஒரு பகுதியாக இருந்தது. தெலுங்கு மொழி தோன்றுவதிலும், ஆந்திர மாநிலம் உருவாவதிலும் இந்த நகரம் முக்கிய பங்கு வகித்தது. ஆந்திரா உருவாவதற்கு மரணம் வரை உண்ணாவிரதம் இருந்த பொட்டி சிறீ ராமுலு நெல்லூரைச் சேர்ந்தவர்.
புவியியல்
அமைவிடம்
நெல்லூர் 14°16′N 79°35′E / 14.26°N 79.59°E.என்ற அடையாள ஆள்கூறுகளில் அமைந்துள்ளது.[7][8] கடல் மட்டத்திலிருந்து சராசரியாக 18 மீட்டர் உயரத்தில் நெல்லூர் அமைந்துள்ளது..[8]
தட்பவெப்பம்
வெப்பமும், ஈரப்பதமுமான கோடை மற்றும் மிதமான குளிர்காலம் கொண்ட ஒரு பொதுவான வெப்பமண்டல கடல் காலநிலை நெல்லூரில் நிலவுகிறது. இங்கு ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் மிகவெப்பமான மாதங்களாகும். மற்றும் வெப்பமான நிலை பொதுவாக சூன் மாத இறுதி வரை நீடிக்கும். டிசம்பர், சனவரி மற்றும் பிப்ரவரி மாதங்கள் மிகக் குளிரான மாதங்களாகும். வங்காள விரிகுடா நகரத்திலிருந்து 24 கிலோமீட்டர் (15 மைல்) தொலைவில் இருப்பதால், கடல் காற்று நகரத்தின் காலநிலையை குளிர்காலத்திலும் கோடைகாலத்திலும் மிதமாக்குகிறது. கடற்கரைக்கு அருகாமையில் இருப்பதால் நகரத்தில் ஈரப்பதம் அதிகமாக உள்ளது. தென்மேற்கு பருவமழை நெல்லூருக்கு கிடைக்காது. வடகிழக்கு பருவமழை காரணமாக அக்டோபர் மற்றும் டிசம்பர் மாதங்களுக்கு இடையில் நெல்லூரில் மழை பெய்யும். இந்த காலம் நகரத்தின் ஆண்டு மழையில் 60 சதவீதத்தை அளிக்கிறது. இந்த காலகட்டத்தில் நகரத்தில் சூறாவளிகள் பொதுவானவை, இதனால் வெள்ளம் மற்றும் அழிவு இங்கு அதிகம் ஏற்படுகிறது [9]. நெல்லூரில் கோடையில் அதிகபட்ச வெப்பநிலை 36 முதல் 46 ° செல்சியசு வரை பதிவாகிறது. மற்றும் குளிர்காலத்தில் குறைந்தபட்ச வெப்பநிலை 23 முதல் 25 ° செல்சியசு வரை இருக்கிறது. தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை வழியாக மழையளவு 700 முதல் 1,000 மி.மீ (28 முதல் 39 அங்குலம்) வரை இருக்கும். நெல்லூர் பருவங்களின் அடிப்படையில் வற்ட்சி மற்றும் வெள்ளம் இரண்டுக்கும் உட்படுகிறது[10]
தட்பவெப்ப நிலைத் தகவல், Nellore (1981–2010) | |||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
மாதம் | சன | பிப் | மார் | ஏப் | மே | சூன் | சூலை | ஆக | செப் | அக் | நவ | திச | ஆண்டு |
பதியப்பட்ட உயர்ந்த °C (°F) | 35.6 (96.1) | 39.4 (102.9) | 43.9 (111) | 45.6 (114.1) | 46.7 (116.1) | 46.7 (116.1) | 42.2 (108) | 40.6 (105.1) | 41.7 (107.1) | 39.4 (102.9) | 36.7 (98.1) | 35.0 (95) | 46.7 (116.1) |
உயர் சராசரி °C (°F) | 29.9 (85.8) | 32.4 (90.3) | 35.1 (95.2) | 37.8 (100) | 39.9 (103.8) | 38.2 (100.8) | 36.0 (96.8) | 35.1 (95.2) | 35.1 (95.2) | 32.8 (91) | 30.1 (86.2) | 29.0 (84.2) | 34.3 (93.7) |
தாழ் சராசரி °C (°F) | 20.7 (69.3) | 22.0 (71.6) | 23.9 (75) | 26.2 (79.2) | 28.4 (83.1) | 28.5 (83.3) | 27.2 (81) | 26.7 (80.1) | 26.4 (79.5) | 25.2 (77.4) | 23.2 (73.8) | 21.5 (70.7) | 25.0 (77) |
பதியப்பட்ட தாழ் °C (°F) | 15.0 (59) | 16.1 (61) | 17.2 (63) | 20.2 (68.4) | 20.2 (68.4) | 21.1 (70) | 22.2 (72) | 21.7 (71.1) | 21.5 (70.7) | 18.9 (66) | 16.7 (62.1) | 14.4 (57.9) | 14.4 (57.9) |
பொழிவு mm (inches) | 26.0 (1.024) | 1.7 (0.067) | 3.5 (0.138) | 8.7 (0.343) | 43.1 (1.697) | 28.9 (1.138) | 85.9 (3.382) | 96.0 (3.78) | 97.2 (3.827) | 287.1 (11.303) | 290.9 (11.453) | 100.4 (3.953) | 1,069.4 (42.102) |
சராசரி பொழிவு நாட்கள் | 1.2 | 0.2 | 0.2 | 0.4 | 1.6 | 3.0 | 6.1 | 6.4 | 5.4 | 8.7 | 9.1 | 3.7 | 46.0 |
ஆதாரம்: India Meteorological Department (record high and low up to 2010)[11][12] |
.