நீர் விலக்கு விளைவு
நீர் விலக்கு விளைவு (Hydrophobic effect) என்பது முனைவுறும் தன்மையற்ற பொருட்களை நீர்க்கரைசலில் திரட்டுவதற்கும் மற்றும் நீரின் மூலக்கூறுகளை நீக்குவதற்கும் வேதியியல் பொருள்களால் வெளிப்படுத்தப்படும் ஒரு போக்கு ஆகும்.[1][2] இது நீர் மற்றும் முனைவற்ற தன்மை கொண்ட பொருட்களைத் தனியாகப் பிரித்தலை விவரிக்கிறது. இப்பண்பானது, தண்ணீரின் மூலக்கூறுகளுக்கிடையில் ஐதரசன் பிணைப்புகளை அதிகரித்து, மேலும் தண்ணீர் மற்றும் முனைவுத்தன்மையற்ற மூலக்கூறுகளுக்கிடையேயான தொடும் பரப்பைக் குறைக்கிறது.
![](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/9/9d/Water_drop_on_a_leaf.jpg/250px-Water_drop_on_a_leaf.jpg)
நீர் விலக்கு விளைவானது, எண்ணெய் மற்றும் நீர் இவற்றின் கலவையை அதன் இரண்டு கூறுகளாக பிரிப்பதற்கான காரணமாக அமைகிறது. செல் சவ்வுகள் மற்றும் வெசிக்கிள்கள் உருவாக்கம், புரத மடிப்பு, புரத சவ்வுகளை முனைவுத்தன்மையற்ற கொழுமிய சூழல் மற்றும் புரதக்கூறு அளவிலான சிறு மூலக்கூறு சேர்க்கைகளில் உட்செருகுதல் போன்ற உயிரியல் தொடர்புடைய விளைவுகளுக்கும் நீர் விலக்கு விளைவானது காரணமாக அமைகிறது. ஆகவே, நீர் விலக்கு விளைவானது உயிர் வாழ்தலுக்கும் அவசியமானதாக உள்ளது.[3][4][5][6] இந்த விளைவைத் தருகின்ற அல்லது ஆட்படுகின்ற பொருட்கள் நீர்விலக்கிகள் (hydrophobes) என அழைக்கப்படுகின்றன.