தர்மலிங்கம் சித்தார்த்தன்
தர்மலிங்கம் சித்தார்த்தன் '(Dharmalingam Siddharthan, பிறப்பு: 10 செப்டம்பர் 1948) இலங்கையின் அரசியல்வாதியும் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினரும் ஆவார். 1970களில் இருந்து ஈழ விடுதலைப் போராட்டத்துடன் தொடர்பு கொண்டிருக்கும் இவர் இலங்கை தமிழரசுக் கட்சியின் உடுவில் தொகுதி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வி. தர்மலிங்கத்தின் மகன் ஆவார்.[1][2]
தர்மலிங்கம் சித்தார்த்தன் | |
---|---|
![]() 2017 இல் சித்தார்த்தன் | |
இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் ஆகத்து 2020 | |
தொகுதி | யாழ்ப்பாண மாவட்டம் |
பதவியில் ஆகத்து 2015 – மார்ச் 2020 | |
தொகுதி | யாழ்ப்பாண மாவட்டம் |
பதவியில் 2001–2004 | |
தொகுதி | வன்னி மாவட்டம் |
பதவியில் 1994–2000 | |
தொகுதி | வன்னி மாவட்டம் |
வட மாகாண சபை உறுப்பினர் | |
பதவியில் 2013–2015 | |
பின்னவர் | கணபதிப்பிள்ளை தருமலிங்கம் |
தொகுதி | யாழ்ப்பாண மாவட்டம் |
தலைவர் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 1989 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | தர்மலிங்கம் சித்தார்த்தன் 10 செப்டம்பர் 1948 |
இறப்பு | appointer |
இளைப்பாறுமிடம் | appointer |
அரசியல் கட்சி | தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் |
பிற அரசியல் தொடர்புகள் | தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு |
பெற்றோர் | வி. தர்மலிங்கம் |
ஆரம்ப வாழ்க்கை
சித்தார்த்தன் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மூத்த உறுப்பினரும், உடுவில் நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்த வி. தர்மலிங்கத்தின் மகன் ஆவார்.[3][4][5]
போராளியாக
1960களில் தமிழ்த் தேசிய அரசியலில் ஈடுபாடு கொண்ட சித்தார்த்தன், 1970களில் ஈழ இயக்கங்களுடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டார்.[6] இளைஞர் பேரவை ஊடாக போராட்டத்தில் ஈடுபடுத்திக்கொண்ட சித்தார்த்தன் இங்கிலாந்தில் பட்டப்படிப்பை மேற்கொண்டிருந்தார். இலண்டனில் விடுதலைப் புலிகளின் புதிய தமிழ் புலிகள் என்ற கிளையை ஆரம்பித்தவர்களில் இவரும் ஒருவர்.[6][7] 1980 இல் புலிகளின் தலைவர் க. உமாமகேஸ்வரன் அவ்வியக்கத்தில் இருந்து விலகி புளொட் அமைப்பை ஆரபித்ததை அடுத்து,[6] சித்தார்த்தன் புளொட்டில் சேர்ந்தார்.[6][8] 1982இல் சித்தார்த்தன், ஈரோஸ் அமைப்பின் உதவியுடன் சிரியா சென்று பாலத்தீன இயக்கத்தில் இராணுவப் பயிற்சி எடுத்தார்.[8] பிரித்தானியாவில் இருந்து செயல்பட்டு வந்த சித்தார்த்தன், 1985 ஆம் ஆண்டு அன்றைய ஜே. ஆர். ஜெயவர்த்தனாவின் அரசுடன் திம்புவில் இடம்பெற்ற பேச்சுவார்த்தைக்காக புளொட் சார்பில் கலந்து கொண்டார். 1989இல் உமாமகேசுவரன் படுகொலை செய்யப்பட்டதை அடுத்து சித்தார்த்தன் புளொட்டின் தலைவரானார்.[9]
அரசியலில்
சித்தார்த்தன் 1989 நாடாளுமன்றத் தேர்தலில் சனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்டின் அரசியல் பிரிவு) வேட்பாளராக யாழ்ப்பாண மாவட்டத்தில் போட்டியிட்டார். இக்கட்ட்சியில் இருந்து எவரும் நாடாளுமன்றத்திற்குத் தெரிவாகவில்லை.[10][11] 1994 நாடாளுமன்றத் தேர்தலில் சித்தார்த்தன் புளொட்டின் அரசியல் பிரிவான ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் வேட்பாளராக வன்னி மாவட்டத்தில் போட்டியிட்டு நாடாளுமன்றம் சென்றார்.[12] 2000 தேர்தலில் இவரது கட்சி எந்த இடத்தையும் பெறவில்லை.[13] 2001 தேர்தலில் வெற்றி பெற்று நாடாளுமன்றம் சென்றார்.[14] 2004 தேர்தலில் மீண்டும் போட்டியிட்டார். ஆனால் அவரது கட்சி போட்டியிட்ட எந்த ஒரு இடத்திலும் வெற்றி பெறவில்லை.[15][16] 2010 தேர்தலிலும் போட்டியிட்டார். இம்முறையும் அவரது கட்சி எந்த ஓர் இடத்தையும் கைப்பற்றவில்லை.[17]
2009 இல் ஈழப் போர் முடிவடைந்ததை அடுத்து, புளொட் அமைப்பு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் (ததேகூ) இணைந்தது.[18] சித்தார்த்தன் 2013 மாகாண சபைத் தேர்தலில் ததேகூ வேட்பாளராக யாழ்ப்பாண மாவட்டத்தில் போட்டியிட்டு வட மாகாண சபைக்குத் தெரிவானார்.[19][20][21] இவர் தனது பதவிப் பிரமாணத்தை சுன்னாகத்தில் பிளொட் செயலாளரும் சமாதான நீதவானுமாகிய சுப்பிரமணியம் சதானந்தன் முன்னிலையில் 2013 அக்டோபர் 14இல் எடுத்தார்.[22][23]
சித்தார்த்தன் 2015 நாடாளுமன்றத் தேர்தலில் ததேகூ வேட்பாளராக யாழ்ப்பாண மாவட்டத்தில் போட்டியிட்டு 53,743 விருப்பு வாக்குகள் பெற்று நாடாளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.[24][25][26][27] 2020 நாடாளுமன்றத் தேர்தலில் இவர் மீண்டும் தெரிவு செய்யப்பட்டார்.[28][29][30]