திருக்கோணமலை[1][2][3][4] அல்லது திருகோணமலை (Trincomalee) இலங்கையின் கிழக்குப் பகுதியிலுள்ள முக்கிய நகரங்களில் ஒன்றாகும். இதே பெயரே இந்த நகரம் அமைந்துள்ள மாவட்டத்துக்கும் வழங்கிவருகின்றது.
2012 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி திருக்கோணமலை மாவட்டம் 379,541 மக்களைக் கொண்டுள்ளது இந்த நகரம். தமிழர், சிங்களவர், முசுலிம்கள் ஆகிய மூன்று இன மக்களும் இந்த நகரத்தில் வாழ்கின்றபோதிலும் நகரத்தில் தமிழர்களே பெரும்பான்மையாக வாழ்கின்றனர்.
வரலாறு
இங்குள்ள இயற்கைத் துறைமுகம் காரணமாக இந்த நகரம் இலங்கைக்கு வெளியிலும் அறியப்பட்ட ஒன்றாகும். இங்கு அமைந்துள்ள தொன்மையான சிவன் கோயிலான திருக்கோணேஸ்வரம் , இலங்கையிலும் வெளிநாடுகளிலுமுள்ள இந்து மக்கள் மத்தியில் பரவலாக அறியப்பட்டதாகும். இது கி.பி ஏழாம் நூற்றாண்டில் திருஞானசம்பந்தமூர்த்தி நாயனாரின் பாடல் பெற்ற தலமாகும். இது மட்டுமன்றி இலங்கையின் இன அரசியலிலும் திருக்கோணமலை மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகும். 1987ல் இலங்கை - இந்திய ஒப்பந்தத்தின் அடிப்படையில் தற்காலிகமாக இணைத்து நிர்வகிக்கப்படுகின்ற வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் தலைநகரமாகத் திருக்கோணமலையே விளங்கியது.இது தமிழர்களால் கோரப்பட்ட தனிநாடான தமிழீழத்தின் தலைநகராகவும் விடுதலைப் புலிகளால் பிரகடனப் படுத்தப்பட்டிருந்தது.
இது பண்டய காலம் முதலே பிரபலமான துறைமுகமாக இருந்துள்ளது. ஒல்லாந்தர், ஆங்கிலேயர்,போர்த்துக்கேயர், பிரஞ்சு போன்றோரின் ஆட்சிக்குட்பட்டு இருந்தது. பிரட்ரிக் கோட்டை மேற்கத்தைய ஆதிக்கத்தின் எச்சமாக இன்றும் நகரில் காணக்கூடியதாக உள்ளது. இந்த கோட்டையினுள்ளேயே புகழ் பூத்த திருக்கோணேச்சர ஆலயம் அமைந்துள்ளது.
நிர்வாகக் கட்டமைப்பு
திருக்கோணமலை மாவட்டம் ஆனது 11 பிரதேசசபைகளாக வகுக்கப்பட்டு நிர்வாகிக்கப்படுகின்றது. அவையாவன.திருக்கோணமலை பட்டினமும் சூழலும் - பெரும்பான்மையாகத் தமிழர்களைக் கொண்ட திருக்கோணமலை நகரப்பகுதி
குச்சவெளி - பெரும்பான்மையாக முஸ்லீம்களையும் ஏனைய இனத்தவர்களையும் கொண்ட பிரதேசம்.
பதவிசிறிபுர - பெரும்பான்மையாகச் சிங்களவர்களைக் கொண்ட பிரதேசம்.
கோமரன்கடவல - முன்னொருகாலத்தில் தமிழ்ப்பிரதேசமான குமரேசன்கடவை, தற்போது பெரும்பான்மையாகச் சிங்களவர்களைக் கொண்டபிரதேசம்.
மொரவெவ/முதலிக்குளம் (பழைய வழக்கில்) - முன்னொருகாலத்தில் தமிழ்ப்பிரதேசமான முதலிக்குளம், தற்போது பெரும்பான்மையாகச் சிங்களவர்களைக் கொண்ட பிரதேசம்.
தம்பலகாமம் - பெரும்பான்மையாக முஸ்லீம்களையும் ஏனைய இனத்தவர்களையும் கொண்ட பிரதேசம். சிங்களத்தில் தம்பலகமுவ என்றழைக்கப்படுகின்றது.
கந்தளாய் - தற்போது பெரும்பான்மையாகச் சிங்களவர்களைக் கொண்டுள்ளது. மகாவலி குடியேற்றத்திற்கு முன்னர் இப்பிரதேசத்தில் பெரும்பான்மையாகத் தமிழர்களே இருந்தனர்.
கிண்ணியா - பெரும்பான்மையாக முஸ்லீம்களைக் கொண்ட பிரதேசம்.
சேருவில - பெரும்பான்மையாக சிங்களவர்களைக் கொண்ட பிரதேசம்.
ஈச்சிலம்பற்றை - தமிழர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட பிரதேசம். இப்பிரதேசத்தில் அநேகமான இடங்கள் தற்போதைய உள்நாட்டுச் சண்டையினால் அழித்தொழிக்கப்பட்டு விட்டன.
மூதூர் - முஸ்லீம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட பிரதேசம். தமிழர்கள் உள்ள பிரதேசம், இலங்கை அரச வர்த்தமானியின் மூலம் அதியுயர் பாதுகாப்பு வலயமாகப் பிரகடனப்படுத்தப்பட்டு பலாத்காரமாத் தமிழர்கள் மீளக்குடியமர முடியாது செய்யப்பட்டது.
பிரித்தானியர் ஆட்சி
1957 வரை திருக்கோணமலை பிரித்தானியக் கடற்படையின் முக்கிய தளமாகவும், அதில் பணி புரிந்த இங்கிலாந்து பிரசைகளின் வசிப்பிடமாகவும் இருந்தது. திருமலை கோட்டை பிரித்தானியர்களாலும் பாவிக்கப்பட்டது. 1950 களில் பிரித்தானியரால் கோட்டையினுள் கட்டப்பட்ட பல பங்களாக்கள் இன்றும் நிலைத்து இருப்பதுடன். சிங்கப்பூரை ஜப்பானியர்கள் கைப்பற்றிய பின்பு திருக்கோணமலையே பிரித்தானியரின் முக்கியக் கடற்படைத்தளமாக செயற்பட்டது.
திருக்கோணமலையில் தனியான பல்கலைக்கழகம் இல்லாத போதும் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் வளாகம் ஒன்று திருமலையில் உள்ளது. இது திருக்கோணமலை வளாகம் என அழைக்கப்படுகின்றது. முன்னர் திருக்கோணமலை நகரப் பகுதியில் அமைந்திருந்த கிழக்குப் பல்கலைக்கழக வளாகம் நிலாவெளி எனும் புறநகர் பகுதிக்கு இடமாற்றப்பட்டு இயங்கிவருகின்றது.
தொலைத் தொடர்பு
தொலைபேசி
குறியீடு: 026 (வேறு மாவட்டங்களில் இருந்தும் தொலைபேசியூடாகத் தொடர்பு கொள்ள).
ஆரம்பிக்கும் இலக்கங்கள்
026-2 திருக்கோணமலை இலங்கைத் தொலைத் தொடர்பு நிலையம்
026-4 திருக்கோணமலை சண்ரெல்
026-5 திருக்கோணமலை லங்காபெல்
060-226 திருக்கோணமலை இலங்கைத் தொலைத் தொடர்பு நிலையம் CDMA இணைப்பு
கம்பி இணைப்புக்கள்
இலங்கைத் தொலைத்தொடர்பு நிறுவனம் கம்பியிணைப்புக்களை வழங்கி வருகினறது.
திருக்கோணமலையில் கம்பியற்ற இணைபுக்கள் தற்போதுள்ள யுத்த சூழ்நிலையாலால் அடிக்கடித் துண்டிக்கப் பட்ட நிலையிலேயே உள்ளது. இலங்கைத் தொலைத் தொடர்பு நிலையத்தின் கம்பி இணைப்புக்களே அநேகமாகத் துண்டிக்கபடுவது குறைவாகவுள்ளது.
மோபிற்றல் கோபுரங்கள் திருக்கோணமலை நகரம், கந்தளாய், புல்மோட்டை ஆகிய பகுதிகளில் அமைந்துள்ளது. புல்மோட்டையில் அமைந்துள்ள கோபுரமானத்தினூடாக முல்லைத்தீவு மாவட்டத்தில் அலம்பில் கடற்கரையோரமாக நகர்பேசியூடாகத் தொடர்புகொள்ளக் கூடியதாகவுள்ளதாகத் தெரிகின்றது.
திருக்கோணமலையில் இருந்து கொழும்பிற்கு காலை 10.00 மணிக்கும் மாலை 7.00 மணிக்கும் புகையிரதங்கள் புறப்படுகின்றன. மட்டக்களப்பு, பகுதிகளிற்குச் செல்பவர்கள் கல் ஓயா சந்தியில் பிரிந்து கொள்ளலாம் (வவுனியா செல்பவர்கள் மாஹோ பகுதியூடாகப் பிரிந்து கொள்ளலாம் எனினும் பெரும்பாலும் இது சாத்தியமாவதில்லை). அதாவது அங்கு புகையிரதத்தை மாற்றிக்கொள்ள வேண்டும். கொழும்பிலிருந்து காலை புகையிரதம் காலை 6.05 இற்குப் புறப்படும் திருக்கோணமலை புகையிரதத்திலேயே ,மட்டக்களப்பு பெட்டியும் இணைக்கப்படுவதால் திருக்கோணமலைப் பெட்டியில் ஏறியதை உறுதிப்படுத்திக் கொள்வது நன்று. தொடரூர்தியின் பிற்பகுதியில் உள்ள மூன்று பெட்டிகள் மட்டக்களப்பிற்கும் ஏனைய முற்பகுதியில் திருக்கோணமலைக்கும் ஆனவை. மட்டக்களப்பு நோக்கி பயணிப்பவர்கள் கல்லோயா சந்தியில் புகையிர பெட்டிகளில் மாறவேண்டியதில்லை.
கொழும்பிலிருந்து இரவு 7:15 இற்குப் புறப்படும் மட்டக்களப்பு கடுகதி புகையிரதத்தில் திருக்கோணமலையிலிருந்து மட்டக்களப்புக்கு பயணிப்பவர்கள் கல்லோயா சந்தியில் ஏறிக்கொள்வதன் மூலம் மட்டக்களப்புக்கு செல்ல முடியும்.
பேருந்து
திருக்கோணமலை-கொழும்பு
திருக்கோணமலையில் இருந்து கொழும்புக்கும் கொழும்பில் இருந்து திருகோணமலைக்கும் நேரடியாக பேருந்து சேவையானது .ஒவ்வொரு 45 நிமிடங்களுக்கும் உண்டு திருக்கோணமலையில் இருந்து கொழும்பு நோக்கி பேருந்து எடுப்பது சிரமமாக இருந்தால் திருக்கோணமலையில் இருந்து குருநாகலிற்கோ அல்லது தம்புள்ளவிற்கோ பேருந்து எடுத்து அங்கிருந்து கொழும்பிற்குச் செல்லலாம். திருக்கோணமலையில் இருந்து நேரடியாக் கொழும்பு செல்லும் பேருந்து இலக்கம் 49 ஆகும்.