தவிட்டிச் சிலம்பன்
தவிட்டிச் சிலம்பன் | |
---|---|
![]() | |
T. c. caudata (அரியானா, இந்தியா) | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | Passeriformes |
குடும்பம்: | Leiothrichidae |
பேரினம்: | Turdoides |
இனம்: | T. caudata |
இருசொற் பெயரீடு | |
Turdoides caudata (Charles Dumont de Sainte Croix, 1823) | |
வேறு பெயர்கள் | |
Crateropus caudatus |
தவிட்டிச் சிலம்பன் (common babbler) என்பது சிரிப்பான் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பறவையாகும். இதை சாதா சிலம்பன், நாட்டுப் பூணியல் என்றும் அழைப்பர். இவை முக்கியமாக இந்தியாவில் புதர்காடுகளிலும், புல்வெளியான மணற்பகுதியிலும் காணப்படுகின்றன.
விளக்கம்
இது சற்று நீண்ட வாலுடைய சிறிய சற்று மெலிந்தத சிலம்பன். இதன் தலையும் முதுகும் ஆழ்ந்த பழுப்புக் கோடுகள் கொண்ட வெளிர் பழுப்பாக இருக்கும். அடிப்பகுதி கோடுகள் இல்லாமல் வெளிறியதாக இருக்கும். தொண்டை கிட்டத்தட்ட வெண்மையாக இருக்கும்.
நடத்தையும் சூழலியலும்
இவை மற்ற சிலம்பன்களைப் போலவே, ஆறு முதல் இருபது வரையிலான சிறிய கூட்டமாகத் தரையில் தாவித் தாவி ஓடியும், கொறிந்துண்ணிகள் குறுகி விரைந்தோடியும், புதரிகளிலும் வேலிகளிடையேயும் இரைதைடக்கூடியவை. அப்படி இலைத் தேடும்போது மென்மையான குரலில் கத்தியபடி இருக்கும். புதர்களின் மேலே இருந்து உறுப்பினர்கள் கண்காணித்துக்கொண்டு அவ்வப்போது தரையில் நகரும். தரையில் நகரும் போது, இவை அடிக்கடி தன் நீண்ட வாலை உயர்த்தியபடி இருக்கும். விச்-விச்விச், ரீ-ரீ-ரீ எனப் பலவகைக் குரல் ஒலிகள் எழுப்பியபடியே இரைந்தோடும். இது ஆபத்து என உணர்ந்தால் உரத்த அறிவிப்புக் குரல் கொடுக்கும்.[2] இவை முக்கியமாக வறண்ட பகுதிகளில் முட்கள் நிறைந்த குறுங்காட்டுத் தாவரங்கள் உள்ள பகுதிகளில் காணப்படுகின்றன.[3] இவை பூச்சிகள், சிறு பழங்கள், தானியங்கள் போன்றவற்றை உண்கின்றன. விருப்பமான சிறு பழங்களில் உண்ணிமுள் பழம், ஆதண்டை ஆகியவை அடங்கும்.[4]
இந்தியாவில் இவற்றின் கூடு கட்டும் பருவம் கோடைக் காலம் (மே முதல் சூலை வரை) ஆகும். புல், வேர் போன்றவற்றால் கோப்பை வடிவிலான கூட்டினை அழகாகத் தரையில் இருந்து ஒரு மீட்டர் உயரத்தில் லாண்டனா, இலந்தை முதலான புதர்களிடையே அமைக்கும். சப்பாத்திக் கள்ளி, ஈச்சமரம் ஆகியவற்றிலும் இதன் கூட்டைக் காண இயலும். இரண்டு அல்லது மூன்று முட்டைகளை இடுகின்றன. முட்டைகள் பசு நீலமாக இருக்கும். இவற்றின் முட்டைகள் 13-15 நாட்களில் குஞ்சுபொரிக்கின்றன. சுடலைக் குயில், அக்காக்குயில் போன்றவை இவற்றின் கூடுகளில் முட்டையிடுவது உண்டு. இளம் பறவைகள் ஒரு வாரத்துக்குப் பிறகு பறக்கத் துவங்குகின்றன. கூட்டாக தொடர்ந்து இருந்து, பெரியவர்களுடன் சேர்கின்றன.