ஜுத்தி (பஞ்சாபி)
ஜுத்தி (பஞ்சாபி மொழி: ਜੁੱਤੀ) அல்லது பஞ்சாபி ஜுத்தி (பஞ்சாபி மொழி: ਪੰਜਾਬੀ ਜੁੱਤੀ) (உச்சரிப்பு: 'ஜுத்-தி' - பஞ்சாபி (அ) 'ஜு-தி' - இந்தி/உருது) என்பது வட இந்தியா மற்றும் அதன் அண்டை பகுதிகளில் பொதுவாகப் பயன்படுத்தப்படும் ஒருவகை காலணியாகும். முற்காலங்களில் பாரம்பரியமாக அவைத் தோலால் செய்யப்பட்டு, தங்கம் மற்றும் வெள்ளி நூலாலான நுட்பமான வேலைப்பாடுகளைப் பெற்றிருக்கும். எனினும் காலமாற்றத்திற்கேற்ப ரப்பர் காலடிகள் கொண்ட ஜுத்திகள் போன்ற பல்வேறு வகை ஜுத்திகளும் கிடைக்கப்பெறுகின்றன. பஞ்சாபி ஜுத்தி தவிர வேறு பல ஊர் பாணிகளிலும் உள்ளன. இன்றளவில் அம்ரித்சர் மற்றும் பட்டியாலா ("டில்லா ஜுத்தி") கைவினை ஜுத்திகளுக்கான முக்கிய வர்த்தக மையங்களாகத் திகழ்கின்றன, அங்கிருந்து உலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் பஞ்சாபிகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.[1][2][3] மோஜாரிஸுடன் நெருங்கிய தொடர்புடையது. ஜுத்திகள் பல்வேறு உள்ளூர் வடிவ மாற்றங்களுடனும், சில சமயங்களில் வடிவமைப்போர் பொருத்த மாற்றங்களுமாகவும் உருவாக்கப்பட்டு வருகின்றன. பெரும்பாலும் அவற்றுள் இடது வலது வேறுபாடு இருக்காது, காலப்போக்கில் அவை அணியப்படும் காலின் உருவத்தை ஏற்கும் . பொதுவாக தட்டையான அடிப்பாகத்தைக் கொண்டிருக்கும், ஆண்-பெண் இருபாலருக்கும் ஒரே வடிவமைப்பைக் கொண்டிருக்கும், எனினும் ஆணிற்கான காலணிகளில் மீசை வடிவில் மேல்நோக்கி வளைக்கப்பட்ட நோக் எனப்படும் நீட்டிக்கப்பட்ட கூரான முனை காணப்படும், அவை குஸ்ஸா என்றும் வழங்கப்படும். மற்றும் பெண்களுக்கான ஜுத்திகளில் கணுக்காலருகில் பின்பகுதி இல்லாமல் அமைந்திருக்கும், காலமாற்றங்களையும் கடந்து விழாக்களுக்கு அணியப்படும் ஆடைகளில், குறிப்பாக திருமண ஆடைகளுள், ஜுத்திகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன. அழகுபடுத்தப்படாத எளிய ஜுத்திகள் பஞ்சாபின் பெரும்பாலான பகுதிகளில் அன்றாட பயன்பாட்டில் இடம் பெறுகின்றன.[4]
ஜுத்தி கஸூரி பேரி நா பூரி ஹே ரப்பா மற்றும் ஜுத்தி லகுதி வைரியா மேரே போன்ற பல பஞ்சாபி நாட்டுப்புற பாடல்கள் ஜுத்திகளைக் குறிப்பிடுகின்றன.[1]
கண்ணோட்டம்
ஆண்-பெண் இருபாலருக்குமாகப் பல்வேறு வகையான ஜுத்திகள் உள்ளன. குறிப்பிட்ட விழாக்களின் போது சிறப்பான ஜுத்திகள் பசுக்களின் பாதங்களில் பொருத்தப்படுவதுண்டு. இந்தியாவின் பிற பகுதிகளில் ஜுத்திகள் மோஜாரி என்றும் பாகிஸ்தானில் குஸ்ஸா என்றும் அறியப்படும். மேற்கத்திய நாடுகளிலும் சமீப காலங்களில் ஜுத்திகள் பிரபலமடைந்து வருகின்றன. மோஜாரிகளைப் போலவே, இவைகளும் மேல்நோக்கி வளைந்த நீளமான காலணிகளாகும். இவைச் சிற்சில மாறுபாடுகளைப் பெற்றுத் தலைமுறை தலைமுறையாக வழங்கப்பட்டு வருகிறது. இவை பாரம்பரியமான இந்திய கலணிகளுள் ஒன்றாகும்.
இவை பொதுவாக தேர்ந்த தோலால் செய்யப்பட்டு, நூலும் மணிகளும் கொண்ட நுட்பமான பூத்தையல் வேலைபாடுகளை கொண்டிருக்கும். ஜுத்திகள் செருகி அணியும் பாணியில் அமைந்து, கால் விரல்களை மூடும் அரை-வட்ட அல்லது M-வடிவிலான பூத்தையல் வேலைப்பாடுகள் மிகுதியாக உடைய மேற்பகுதியைக் கொண்டிருக்கும். சில, கைவினையில் செய்யப்பட்டு, தனித்துவ பூத்தையல் வேலைப்பாடுகளைக் கொண்டிருக்கும்.
பாரம்பரியமிக்க இக்காலணிகள், இந்தியாவில் (குறிப்பாக பஞ்சாபில்) செல்வம் மிக்க ஜமீன்தாரர்கள், சவுத்திரிக்கள், நவாப்புகள், ஜாகிர்தாரர்கள், மகராஜாக்கள் மற்றும் மகாராணிக்களால் அணியப்பட்டன. இவற்றின் பல்வேறு வடிவங்களும் முகலாய காலத்துத் தாக்கம் பெற்றவை. இவை வட இந்தியாவில், குறிப்பாக பஞ்சாப், ஹரியானா மற்றும் ராஜஸ்தான் பகுதிகளில் புகழ்பெற்றவை. திருமணம் போன்ற விழாக்காலத் தருணங்களில் இவற்றை அணிவதை விரும்புவர். ஷெர்வானி குர்த்தா போன்ற பாரம்பரிய ஆடைகளோடு ஜுத்திகள் சிறப்பாகப் பொருந்துவன.
இவற்றையும் காண்க
- மோஜாரி - அதே பகுதியில் வழக்கில் இருக்கும் அதே போன்ற ஒரு காலணி
சான்றாதாரங்கள்
வெளிப்புற இணைப்புகள்
- "Punjabi Jutti most popular in holy city of Amritsar". Archived from the original on November 28, 2010.