சோலைமந்தி
சோலைமந்தி[1] | |
---|---|
![]() | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | Cercopithecidae |
பேரினம்: | Macaque |
இனம்: | M. silenus |
இருசொற் பெயரீடு | |
Macaca silenus (லி., 1758) | |
வேறு பெயர்கள் | |
|
சோலைமந்தி (wanderoo அல்லது lion-tailed macaque, சிங்க-வால் குரங்கு, உயிரியல் பெயர்: macaca silenus) இந்தியாவின் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் காணப்படும் மந்தி இனத்தைச் சேர்ந்த முதனிகளாகும். இம்மந்தியின் வெளிப்புற தோல் மயிர்கள் மின்னும் கரு நிறத்தைக் கொண்டவை. இதன் வால் சிங்கத்தின் வால் போன்று இருப்பதால் ஆங்கிலத்தில் இது lion-tailed macaque என்று அழைக்கப்படுகிறது. இம்மந்தியின் தமிழ்ப் பெயரான "சோலைமந்தி" என்பதை அறியாதவர்கள், இதன் ஆங்கிலப் பெயரின் நேரடி மொழிபெயர்ப்பான "சிங்கவால் குரங்கு" என்று தவறாக அழைக்கிறார்கள். இவ்விலங்கிற்கு "கருங்குரங்கு" என்றொரு பெயருமுண்டு. சங்க இலக்கியங்களில் இது நரைமுக ஊகம் என அறியப்படுகிறது.[3]
உடல் அமைப்பு
இவ்விலங்கின் வெளிமயிர் கருப்பு நிறத்திலானது. இதன் வெள்ளை அல்லது வெள்ளி நிறத்திலான பிடரிப் பகுதியின் மயிர்கள் இவ்விலங்கிற்கே உரிய சிறப்பாகும். இதன் முகம் மயிர்கள் ஏதுமின்றி கருப்பு நிறத்தில் காணப்படும். தலை முதல் வால் வரையிலான நீளம் 45 முதல் 60 செ. மீ ஆகும் மற்றும் இதன் உடல் எடை 3 முதல் 10 கிலோகிராம் வரை இருக்கும். இதன் வால்ப்பகுதி மட்டும் சுமார் 25 செ. மீ நீளமாகும் மற்றும் வாலின் நுனிப்பகுதியில் கருப்பு நிறத்திலான ஒரு மயிர் கொத்து இருக்கும். இம்மயிர் கொத்து ஆண் மந்திகளுக்கு மிகுதியாகவும், பெண் மந்திகளுக்கு சற்று குறைந்தும் காணப்படும்.
வாழ்க்கை முறை
வெப்பமண்டல மழைக்காடுகளில் மட்டும் வாழும் சோலைமந்தி பகற்பொழுதில் மட்டும் சுறுசுறுப்புடன் காணப்படும் பகலாடியாகும். மரமேறுவதில் மிகவும் திறமைவாய்ந்த இம்மந்தி தன் பெரும்பாலான நேரத்தை உயர்ந்த மரக்கிளைகளிலேயே கழிக்கும். மிகவும் கூச்சவுணர்வுடைய இவ்விலங்குகள் மனிதர்களைத் தவிர்த்தே வாழவிரும்புபவை. இவை 10 முதல் 20 வரையிலான உறுப்பினர்களைக் கொண்டக் குழுக்களாக வாழும் நடத்தையைக் கொண்டவை. ஒரு குழுவில் ஒரு சில ஆண் மந்திகளும் பல பெண் மந்திகளும் இருக்கின்றன. ஒவ்வொரு குழுவும் தனக்கென்று ஒரு எல்லையை வகுத்திருக்கும், தங்கள் எல்லைக்குள் வேறொரு குழு நுழையும்பொழுது, மிகுந்த ஓசையுடன் கூச்சலிடும், சில வேளைகளில் வேற்றுக்குழு உறுப்பினருடன் சண்டைகளும் நடக்கும்.
இவ்விலங்கின் சூல்கொள்ளல் காலம் (பேறுகாலம்) 6 மாதங்களாகும். பிறந்ததிலிருந்து ஒருவருட காலம் வரை குட்டி தன் தாயின் அரவணைப்பில் வாழும். இதன் சராசரி ஆயுட்காலம் காடுகளில் சுமார் 20 ஆண்டுகள் எனவும் விலங்குக்காட்சியகங்களில் ஏறத்தாழ 30 ஆண்டுகள் என்றும் கணக்கிடப்பட்டுள்ளது.[4]
சூழியல்
![](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/c/c3/Lion-tailed_Macaque_in_Bristol_Zoo.jpg/200px-Lion-tailed_Macaque_in_Bristol_Zoo.jpg)
சோலைமந்திகள் மழைக்காடுகளின் மரக்கிளைகளில் மட்டும் வாழக்கூடிய ஒர் குறிப்பிடத்தக்க வாழ்க்கை முறையை கொண்டவை. இவை பழங்கள், இலைகள், பூவின் மொட்டுகள், பூச்சிகள், முதுகெலும்பற்ற சிறு விலங்குள் ஆகியவற்றை உண்கின்றன. இம்மந்திகள் பகற்பொழுதில் பெரும்பாலான நேரத்தை உணவு தேடுவதிலேயே கழிக்கின்றன. இது மிகவும் விரும்பி உண்ணும் பழவகைகள் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் மட்டும் காணப்படும் மரங்களில் கிடைக்கக்கூடியவை.[5]
காப்பு நிலை
பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்பு கூட்டமைப்பின் (IUCN) அண்மைய கணக்கெடுப்பின்படி சோலைமந்தியின் மொத்த உயிர்த்தொகை 3000 முதல் 3500 இருக்கக்கூடும்.[6] உலகிலுள்ள முதனிகளில் மிகவும் அரிதானதும் மிகவும் அச்சுறுத்தலுக்குள்ளானதுமான முதனிகள் சோலைமந்திகளாகும். இவை தமிழ் நாடு, கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்களின் பசுமைமாறாக் காடுகளில் மட்டும் காணப்படுகின்றன.[7] இவ்விலங்கின் வாழ்விடம், காடுகள் திருத்தப்பட்டு பணப்பயிர் வேளாண்மை மேற்கொள்ளப்படுவதால் மிகவும் பிளவுப்பட்டுள்ளது. தவிர மின் உற்பத்திக்கென அணை கட்டுதல், காடுகளில் சாலைகள் அமைத்தல் போன்ற மாந்தரின் பல்வேறு செயல்கள் சோலைமந்திகளின் வாழ்க்கைக்குப் பெரும் அச்சுறுத்தல்களாகியிருக்கின்றன.
பாதுகாப்பிற்கான காரணம்
சோலைமந்திகள் முதன்மையான இனங்கள் என்ற அந்தஸ்தின் காரணமாக முக்கியமானவை மற்றும் சுற்றுச்சூழல் அமைப்பு மற்றும் காடுகளுக்கு அவற்றின் முக்கியத்துவம் காரணமாகும். அவை குறிப்பிடத்தக்க விதைப் பரப்பிகளாக இருப்பதால், அவை தென் மேற்குத் தொடர்ச்சி மலையில் காணப்படும் ஒரு பசுமையான பூக்கும் மர இனமான குல்லேனியா எக்ஸாரிலாட்டா (Cullenia exarillata) போன்ற தாவர இனங்களுக்கு முக்கியமானதாக இருக்கலாம், இவ்விலங்கின் உணவின் முக்கிய ஆதாரமாகவும் விளங்குகிறது [8] . வெப்பமண்டல மழைக்காடுகளில் விதைகளை சிதறடிப்பவர்களாக சேவை செய்வதால் இந்த இனம் பாதுகாப்பிற்கு முக்கியமானது, குறிப்பாக 50 கிலோ வரை எடையுள்ள பெரிய மரம் தாங்கும் பழங்களைக் கொண்ட பலா மரம். அவை பழங்களை உண்கின்றன மற்றும் விதைகளை சிதறடிக்கின்றன, இது மரங்கள் காடுகளின் வழியாக விரைவாக பரவுவதற்கும், கிடைக்கக்கூடிய நிலத்தின் திட்டுகளைத் தேடுவதற்கும் அனுமதிக்கிறது. குரங்குகளால் மனிதர்களும் பயனடைகிறார்கள், ஏனெனில் உள்ளூர் பிராந்தியங்களில் பழம் அவர்களின் முக்கிய வருமான ஆதாரங்களில் ஒன்றாகும். மனிதர்கள் பலாப்பழத்தின் பழங்களை பல்வேறு வகையான உணவுப் பொருட்களை உற்பத்தி செய்ய பயன்படுத்துகின்றனர். சுற்றுச்சூழல் அமைப்பு சேவைகளில் விதை பரவல் போன்ற செயல்பாடுகளின் காரணமாக தாவர மற்றும் மர பல்லுயிர் மற்றும் மர உற்பத்தி (வழங்குதல்) போன்ற சேவைகளைப் பெறுதல் மற்றும் மறுபுறம், காட்டிற்குச் செல்வது மற்றும் சிங்கத்தின் வாலைப் பார்ப்பது போன்ற கலாச்சார சேவைகள் உள்ளன. காட்டிற்குச் செல்வது மற்றும் சோலைமந்திகள் பார்ப்பது அல்லது ஒரு நாட்டில் இந்த இனம் இருப்பதைப் பற்றி பெருமிதம் கொள்வது போன்றவை.
காணப்படும் இடங்கள்
மேற்கோள்கள்
- சோலை எனும் வாழிடம் தியோடர் பாஸ்கரன்
வெளி இணைப்புகள்
![](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/d/df/Wikispecies-logo.svg/50px-Wikispecies-logo.svg.png)
- ARKive - சோலைமந்திகளைப் பற்றிய நிழற்படங்களும் அசைபடங்களும் பரணிடப்பட்டது 2007-04-05 at the வந்தவழி இயந்திரம்
- The Knights of the Forest - சோலைமந்திகளைப் பற்றிய படக்கோவை