சகுந்தலா நரசிம்மன்
சகுந்தலா நரசிம்மன் (Sakuntala Narasimhan) (பிறப்பு 30 டிசம்பர் 1939) ஓர் இந்தியப் பத்திரிகையாளரும், நுகர்வோர் உரிமை ஆர்வலரும்,[1] இந்துஸ்தானி இசையின் இராம்பூர்-சகாசுவான் கரானாவின் பாரம்பரிய பாடகரும் ஆவார்.[2] இவர் அபீசு அகமது கானின் சீடராக இருந்தார்.[3] மேலும் தூர்தர்ஷன் மற்றும் அனைத்திந்திய வானொலி ஆகியவற்றில் கர்நாடக மற்றும் இந்துஸ்தானி பாணியில் ஏற்பாடு செய்யப்பட்ட தேசிய இசை நிகழ்ச்சியிலும் பாடியுள்ளார். முசிரி சுப்பிரமணிய ஐயர் மற்றும் தஞ்சாவூர் பிருந்தா ஆகியோரிடம் கர்நாடக பாரம்பரிய இசையில் பயிற்சி பெற்றார். இரண்டு பாணிகளையும் இணைத்து "சுய-ஜுகல்பந்தி" செய்து வருகிறார்.[4]
சகுந்தலா நரசிம்மன் | |
---|---|
ஐக்கிய நாடுகளின் ஜனநாயக நிதியம் திட்டத்தின் பொறுப்பாளர்களுக்கு நுகர்வோர் உரிமைகள் குறித்த அறிமுக அமர்வை நடத்துகிறார் | |
பின்னணித் தகவல்கள் | |
பிறப்பு | 30 திசம்பர் 1939 |
இசை வடிவங்கள் | இந்துஸ்தானி இசை, கருநாடக இசை |
தொழில்(கள்) | பாடகர், ஊடகவியலாளர், நுகர்வோர் உரிமை ஆர்வலர் |
இசைத்துறையில் | 1950s–தற்போது வரை |
ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி
சகுந்தலா, பொருளாதாரத்தில் முதுகலைப் பட்டமும், பாரம்பரிய இசையில் முதுகலைப் பட்டமும் பெற்றவர். மேலும் பெண் கல்வியிலும், இசையியலிலும் முனைவர் பட்டம் பெற்றவர். 1947 ஆம் ஆண்டு இந்தியா சுதந்திரம் அடைந்தபோது[5] தில்லியில் வாழ்ந்தார். இந்தியப் பிரிவினைக்குப் பின்னர் [6] மும்பைக்கு குடிபெயர்ந்தார். தற்போது பெங்களூரில் வசிக்கிறார். இசையியலில் இவரது முனைவர் பட்ட ஆய்வு கர்நாடக மற்றும் இந்துஸ்தானி பாணிகளின் ஒப்பீட்டு ஆய்வில் இருந்தது. சகுந்தலா அனைத்திந்திய வானொலியில் சிறுவயதிலேயே நிகழ்ச்சிகளை நடத்தத் தொடங்கினார். கடந்த 60 ஆண்டுகளாக இளைஞர்களிடையே இசை மற்றும் கலாச்சாரத்தை மேம்படுத்துவதற்கான சங்கம் உள்ளிட்ட பல அமைப்பாளர்களுக்காக ஒரு நிகழ்ச்சிக் கலைஞராக இருந்து வருகிறார்.
தொழில்
பத்திரிகையாளராக, சகுந்தலா மும்பையில் உள்ள தி டைம்ஸ் ஆஃப் இந்தியா குழுமத்தில் 7 ஆண்டுகள் பணியாற்றினார். 1995 இல் டெக்கன் ஹெரால்டு பத்திரிகைக்காகவும், 2000 ஆம் ஆண்டில் நியூயார்க்கில் நடந்த 23 வது ஐநா பொதுச் சபை அமர்விலும், சீனாவில் பெண்களுக்கான ஐநா உலகளாவிய மாநாடு குறித்தும் இவர் அறிக்கை செய்தார். 2002 இல் தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற நிலையான வளர்ச்சிக்கான உலக உச்சி மாநாட்டில் கலந்துகொள்ளவும் அதைப் பற்றி எழுதவும் தேர்ந்தெடுக்கப்பட்ட நான்கு இந்திய பத்திரிகையாளர்களில் இவரும் ஒருவர். 2009 வரை 27 ஆண்டுகள் டெக்கான் ஹெரால்டில் இவரது பத்திகள் வெளிவந்தன. மேலும் இவர் தற்போது தி வயர், [7] சிட்டிசன் மேட்டர்ஸ்,[8] மற்றும் மனிலைஃப் ஆகியவற்றிற்காக எழுதுகிறார்.
சகுந்தலா மும்பை பல்கலைக்கழகத்தில் இசை கற்பித்துள்ளார். மேலும் பெங்களூரு பல்கலைக்கழகத்தில் முதுகலை மட்டத்தில் பத்திரிகை, பெண்கள் படிப்பு மற்றும் பொருளாதாரம் கற்பித்துள்ளார். அமெரிக்கா, ஐக்கிய ராச்சியம்]], நோர்வே, பாக்கித்தான், கென்யா, உகாண்டா, பிலிப்பீன்சு, இந்தோனேசியா, யப்பான், தாய்லாந்து மற்றும் ஆத்திரேலியா ஆகிய நாடுகளில் ஊடகங்கள், இசை மற்றும் பெண்ணிய ஆய்வுகள் தொடர்பான சர்வதேச மாநாடுகளில் கட்டுரைகளை சமர்ப்பித்துள்ளார்.
விருதுகள்
- 1957 மற்றும் 1958 இல் தும்ரி மற்றும் காயலில் அனைத்திந்திய வானொலி விருதுகள்
- 5 கியான் சமாஜ் இசை அகாதமி விருதுகள், 1980
- 1983 இல் சிறந்த பெண் ஊடகவியலாளர்களுக்கான சமேலி தேவி ஜெயின் விருது.
- 2000 ஆம் ஆண்டில் மக்கள் சிவில் உரிமைகளுக்கான சங்கத்தின் 'மனித உரிமைகளுக்கான பத்திரிகை' விருது.
- 2016 ஆம் ஆண்டு கர்நாடக இராச்யோத்சவா விருதுகள்.[9]