கோபிந்த்கர் கோட்டை
கருவிகள்
Actions
பொது
அச்சு/ஏற்றுமதி
பிற திட்டங்களில்
கோபிந்த்கர் கோட்டை (Gobindgarh Fort) அல்லது பாங்கியான் டா கிலா என்றழைக்கப்படும் இந்த புராதன கோட்டை, வடமேற்கு இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் அமைந்துள்ள அம்ரித்சர் நகரின் நடுவத்தில் அமைந்துள்ளது. மேலும், ஒரு வரலாற்று இராணுவ கோட்டையாக உள்ள இது, யாவரும் தவறாமல் தரிசிக்க வேண்டிய சுற்றுலா தளமாகவும் அறியப்படுகிறது.[1]
1706-ல் கட்டப்பட்ட இந்த கோட்டையை, 1760-ம் ஆண்டில், செங்கல் மற்றும் சுண்ணாம்புக் கலவையைக் கொண்டும், 12,000 வீரர்கள் படைக்குழுவை பயன்படுத்தியும் நான்கு கொத்தளங்களுடன் இந்த கோட்டையை, ஒரு சீக்கிய போராளியான குஜ்ஜார் (சர்தார்) சிங் பாங்கி என்பவரது படையினர் இந்த கோட்டையை கட்டியுள்ளனர். பின்னர், 1805-1809-ம் ஆண்டு காலங்களில், "பஞ்சாப் சிங்கம்" என அழைக்கப்படும் பஞ்சாபி மக்களின் சீக்கிய பேரரசின் மன்னரான மகாராஜா ரஞ்சித் சிங் இந்த கோட்டையை மறு கட்டுமானம் செய்துள்ளார். கோஹினூர் வைரம், பிற பொக்கிஷங்களையும், மற்றும் ஒப்பந்தங்கள் சம்பந்தமான தஸ்தாவேஜுகளையும் பாதுகாப்பான முறைபடுத்த மறு கட்டமைப்பு செய்ததாக கருதப்படுகிறது.[2]
1849-ல் ஆங்கிலேய ஆட்சியாளர்கள் இந்த கோட்டையை கைப்பற்றி இதில் உள்ள தர்பார் ஹால், ஹவா மஹால் மற்றும் பான்சி கர் போன்ற இணைப்புகளை உருவாக்கினர். 1919-ம் ஆண்டுகளில் நிகழ்ந்த ஜாலியன்வாலா பாக் படுகொலைக்கு காரணமான ஜெனரல் ரெஜினால்டு எட்வர்டு ஹார்ரி டையர் இந்த பான்சி கர் மாளிகையில் வசித்துள்ளார்.[3]
இந்திய விடுதலைக்குப்பின் இந்த கோட்டை, இந்திய ராணுவத்தினர் வசம் வந்தது. 1948-ம் ஆண்டு, பாக்கித்தான் பகுதியிலிருந்து வந்த ஏதிலிகளுக்கு தஞ்சம் அளிக்க இது பயன்பட்டது. இந்திய சுதந்திரப்போராட்டத்தின் பல்வேறு நிகழ்வுகளுக்கு, மௌன சாட்சியாக இருந்த இந்த வரலாற்றுக்கோட்டை 2006-ல் பஞ்சாபைச் சேர்ந்த இந்திய தேசிய காங்கிரசு அரசியல்வாதியும், அப்போதைய பஞ்சாப் முதல் அமைச்சருமான கேப்டன் அமரிந்தர் சிங் என்பவரால் பொதுமக்கள் பார்வைக்கு திறந்துவிடப்பட்டது. .[4]