குளோரோமீத்தேன் (Chloromethane) என்பது CH3Cl என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு வேதிச்சேர்மம் ஆகும். கரிமச் சேர்மங்களில் ஆலோ ஆல்க்கீனான இச்சேர்மம் மெத்தில் குளோரைடு, குளிர்பதனி 40, ஆர்-40, எச்.சி.சி 40 என்ற பெயர்களாலும் அழைக்கப்படுகிறது. ஒரு காலத்தில் குளிர்பதனியாக இது பரவலாகப் பயன்படுத்தப்பட்டது. நிறமற்றது, எளிதில் தீப்பிடித்து எரியும் இச்சேர்மம் இனிய சுவை மணம் கொண்டதாக உள்ளது. இச்சேர்மத்தின் நச்சுத்தன்மை காரணமாக தற்காலத்தில் நுகர்பொருட்களில் பயன்படுத்தப்படுவது இல்லை. பிரெஞ்சு வேதியிலர்கள் இயீன் பாப்டிசுடு தூமாசு மற்றும் இயுகென் பெலிகோட் ஆகியோர் 1835 ஆம் ஆண்டில் இதைத் தொகுப்பு முறையில் தயாரித்தனர். மெத்தனால், கந்தக அமிலம், சோடியம் குளோரைடு ஆகியனவற்றின் கலவையை கொதிக்கச் செய்து குளோரோமீத்தேனை இவர்கள் தயாரித்தனர். தற்காலத்திலும் இம்முறையிலேயே குளோரோமீத்தேன் தயாரிக்கப்படுகிறது.
தோற்றம்
மனித இனச்சூழலிலும் அல்லது இயற்கையிலும், வளிமண்டலத்திலும் குளோரோமீத்தேன் மிகையாகக் காணப்படுகிறது.
கடல்சார் பகுதிகள்
ஆய்வக வளர்ப்பு அலைதாவரங்கள் (பேயோடாக்டைலம் டிரைகார்னட்டம் பாசி, பேயோசிசுடிசு பூஞ்சை, தலாசியோசிரா வெய்சுபுளோகை பாசிவகை, கீட்டோசெரசு பாசி, ஐசோகிரைசிசு கால்பனா, போர்பைரிடியம் குருயென்டம், சினெக்கோகாக்கசு பாக்டிரியம், டெட்ராசெல்மிசு, புரோரோசென்ட்ரம் மற்றும் எமிலியானா அக்சுசெய்) போன்றவை மிகக்குறைவான அளவில் குளோரோ மீத்தேனை உற்பத்தி செய்கின்றன[3][4]. துருவ பெரும்பாசிகளின் முப்பது வகையான இனங்கள் அதிக அளவிலான குளோரோமீத்தேனை வெளிவிடுகின்றன என கருதப்பட்டு ஆராயப்படுகின்றன[5].
உயிர்பிறப்பு மரபியல்
உலர்ச் சதுப்புநிலத் தாவரமான பாட்டிசு மாரிடிமாவில் மெத்தில் குளோரைடு டிரான்சுபெரேசு என்ற நொதி காணப்படுகிறது. இந்நொதி வினையூக்கியாகச் செயல்பட்டு எசு-அடினோசைன்-எல் மெத்தியோனின் மற்றும் குளோரைடில் இருந்து குளோரோமீத்தேனை உருவாக்குகிறது[6]. இப்புரதம் பின்னர் தூய்மைப்படுத்தப்பட்டு எசரிக்கியா கோலை என அழைக்கப்படுகிறது. பெல்லினசு போமாசியசு, என்டோகிளாடியா மியூரிகடா, மெசெம்பிரையந்தெமம் கிரைசுடாலினம் போன்றவற்றில் எசரிக்கியா கோலை காணப்படுவதாகவும், இவை ஒவ்வொன்றும் குளோரோ மீத்தேன் உற்பத்தியாளர்கள் எனவும் அறியப்படுகிறது[6][7].
தயாரிப்பு
பெருங்கடல்களில் உள்ள உயிர்த்திரள் மற்றும் குளோரின் மீது சூரிய ஒளி செயல்பட்டு பேரளவிலான குளோரோ மீத்தேன் உற்பத்தி செய்யப்படுகிறது. எனினும் தொழிற்சாலைகளிலும் இச்சேர்மம் செயற்கை முறையில் தயாரிக்கப்படுகிறது.
பெரும்பாலும் மெத்தனால், ஐதரசன் குளோரைடுடன் வினைபுரிவதால் குளோரோ மீத்தேன் உருவாகிறது.
CH3OH + HCl → CH3Cl + H2O
இவ்வினையில் ஐதரசன் குளோரைடு குமிழ்களை கொதிக்கும் மெத்தனாலில் துத்தநாக குளோரைடு வினையூக்கி முன்னிலையில் செலுத்தப்படுகிறது. அல்லது மெத்தனால், ஐதரசன் குளோரைடு ஆவிகளின் கலவையை 350 பாகை செல்சியசு வெப்பநிலையில் அலுமினா வினையூக்கி முன்னிலையில் செலுத்தியும் குளோரோ மீத்தேன் தயாரிக்கிறார்கள்.
மீத்தேனையும் குளோரினையும் சேர்த்து 400 ° செல்சியசு வெப்பநிலைக்கு சூடுபடுத்தி சிறிய அளவில் குளோரோ மீத்தேன் தயாரிக்கப்படுகிறது. உயர்குளோரினேற்றச் சேர்மங்களான டைகுளோரோமீத்தேன், குளோரோஃபார்ம், கார்பன் டெட்ராகுளோரைடு முதலானவற்றைப் பயன்படுத்தியும் இதே முறையில் குளோரோ மீத்தேன் தயாரிக்கலாம்
பயன்கள்
ஒரு காலத்தில் பரவலாக குளிர்பதனியாகப் பயன்படுத்தப்பட்ட குளோரோமீத்தேன் அதனுடைய நச்சுத்தன்மை மற்றும் தீப்பற்றும் தன்மை முதலிய காரணங்களால் பின்னர் கைவிடப்பட்டது. இதேபோல ஈயம்சார்ந்த பெட்ரோலியம் கூட்டுவிளைபொருட்கள் தயாரிப்பிலும் குளோரோமீத்தேன் பயன்படுத்தப்பட்டது. சிலிக்கன் பலபடிகள் தயாரிப்பின்போது வினை இடைநிலைப்பொருளாக பயன்படுவது இதனுடைய முக்கியமான பயனாகும். பெருமளவில் பியூட்டைல் இரப்பர் தயாரிப்பிலும், பெட்ரோலியம் சுத்திகரிப்பு செயல்முறையிலும் ஒரு கரைப்பானாக சிறிய அளவில் பயன்படுகிறது.
கரிம வேதியியலில் குளோரினேற்றும் முகவராகவும், மெத்திலேற்றும் முகவராகவும் குளோரோமீத்தேன் பயன்படுத்தப்படுகிறது.
உயவு எண்ணெய், எண்ணெய், பிசின் முதலியவற்றை கரைத்துப் பிரிக்கும் கரைப்பானாகவும், உந்துபொருளாகவும், பாலிசிடைரின் என்ற அரோமாட்டிக் பலபடிகள் தயாரிப்பில் ஊது முகவராகவும், ஒரிடவுணர்ச்சி நீக்கியாகவும், பேரளவிலான மருந்து தயாரிப்பில் இடைநிலைப் பொருளாகவும், சிலவகை பலபடியாக்கல் வினைகளில் வினையூக்கியாகவும், களைக்கொல்லியாகவும் குளோரோமீத்தேன் பல்வேறு பயன்களைக் கொண்டுள்ளது.
முன்பாதுகாப்பு
குளோரோமீத்தேனை சுவாசிக்க நேர்ந்தால் மத்திய நரம்பு மண்டலத்தில் பாதிப்புகள் தோன்றும். உடல் மேல் வெளிப்பட்டால் அயர்வு, தலைச்சுற்றல், குழப்பம், நடக்கும் போது அல்லது பேசும் போது மூச்சுத்திணறல் ஏற்படலாம்.அதிகமான அடர்த்தி சூழலில் பக்கவாதம், வலிப்பு மற்றும் நினைவிழப்பு முதலியன ஏற்படலாம்.தவறுதலாக ஊசிமூலம் உட்செலுத்தப்பட்டால் குமட்டல், வாந்தி முதலியன உண்டாகும். தோலில் பட்டால் பனிக்கடியும், கண்களில் பட நேர்ந்தால் பார்வை மங்குதலும் ஏற்படுகின்றன.
கற்பகாலத்தில் குளோரோமீத்தேன் வெளிப்பாட்டில் சிக்க நேர்ந்தால் இடுப்பு எலும்பு, தண்டுவடம் போன்ற பகுதிகளில் வளர்ச்சிக் குறைபாடுகள் தோன்றலாம் என்றும் கூறப்படுகிறது.
மேற்கோள்கள்
.
புற இணைப்புகள்