எஸ். டி. உக்கம்சந்த்
எஸ். டி. உக்கம்சந்த் (S. D. Ugamchand) என்பவர் ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழ்நாடு சட்டமன்றத்தின் முன்னாள் உறுப்பினரும் ஆவார். இவர் தன் அரசியல் வாழ்வை முதலில் இந்திய தேசிய காங்கிரசு கட்சியில் துவக்கினார். 1980 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காத அதிருப்தியில் அதிமுகவில் இணைந்தார். பின்னர் அதே ஆண்டு 1980 தமிழக சட்டமன்றத் தேர்தலில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கட்சி சார்பாக மதுராந்தகம் தொகுதியில் போட்டியிட்டு வென்றார். எம்ஜிஆர் மறைவுக்குப் பிறகு அதிமுகவின் ஜெயலலிதா அணியில் இருந்தார். 1989 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக - ஜெயலலிதா அணியில் மதுராந்தகம் தொகுதியில் சேவல் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[1][2] பின்னர் அதிமுகவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, 1996ஆம் ஆண்டு திமுகவில் இணைந்தார். தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் தலைவர் பதவியை 3 முறை வகித்தவர். திமுகவின் சிறுபான்மையினர் நல உரிமைப் பிரிவின் மாநில தலைவராக இருந்து வந்தார். இவர் சூலை 11, 2018 அன்று இரவு திடீரென்று ஏற்பட்ட மாரடைப்பால் இவர் உயிரிழந்தார்.[3]