மா. க. ஈழவேந்தன்
மா. க. ஈழவேந்தன் (M. K. Eelaventhan) என அழைக்கப்படும் மாணிக்கவாசகர் கனகசபாபதி கனகேந்திரன் (14 செப்டம்பர் 1932[1][2] – 28 ஏப்ரல் 2024) இலங்கைத் தமிழ் அரசியல்வாதியும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார்.
எம். கே. ஈழவேந்தன் M. K. Eelaventhan | |
---|---|
தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் | |
பதவியில் 2004–2007 | |
பின்னவர் | ரசீன் முகம்மது இமாம் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | மா. க. கனகேந்திரன் 14 செப்டம்பர் 1932 |
இறப்பு | ஏப்ரல் 28, 2024 தொராண்டோ, கனடா | (அகவை 91)
அரசியல் கட்சி | தமிழீழ விடுதலை முன்னணி |
பிற அரசியல் தொடர்புகள் | தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு |
முன்னாள் கல்லூரி | பரி. யோவான் கல்லூரி, யாழ்ப்பாணம் உவெசுலி கல்லூரி, கொழும்பு |
இனம் | இலங்கைத் தமிழர் |
வாழ்க்கைச் சுருக்கம்
கனகேந்திரன் என்ற இயற்பெயர் கொண்ட ஈழவேந்தன் நல்லூரைச் சேர்ந்த புகையிரத நிலைய அதிபர் கனகசபாபதி, சிவயோகம் ஆகியோருக்குப் பிறந்தவர்.[2] இவர் யாழ்ப்பாணம் பரி யோவான் கல்லூரியிலும், பின்னர் கொழும்பு உவெசுலி கல்லூரியிலும் கல்வி பயின்றார்.[2] தமிழ்த் தேசியக் கொள்கையில் மிகவும் பிடிப்புள்ளவராக இருந்த இவர் ஈழவேந்தன் என்ற புனைபெயரில் அறியப்பட்டார்.[3]
பணி
தமிழிலும் ஆங்கிலத்திலும் புலமைமிக்கவராக இருந்த ஈழவேந்தன் இலங்கை மத்திய வங்கியில் பணியாற்றி, பின்னர் பொருளாதார ஆய்வுத் திணைக்களத்தில் மொழிபெயர்ப்பாளராக இணைந்து தமிழ் மொழிபெயர்ப்பு பிரிவின் தலைவராக 1980 இல் ஓய்வுபெற்றார்.[2][4]
அரசியலில்
1952 ஆம் ஆண்டிலேயே இலங்கைத் தமிழரசுக் கட்சியில் முக்கிய உறுப்பினராக இணைந்தார். இக்கட்சியின் சுதந்திரன் பத்திரிகையில் ஈழவேந்தன் என்ற புனைபெயரில் அரசியல் கட்டுரைகளை எழுதத்தொடங்கி, அதே பெயரிலேயே அரசியல் கூட்டங்களிலும் உரையாற்றினார். 1968-ஆம் ஆண்டில் தமிழரசுக் கட்சியில் இருந்து விலக்கப்பட்ட வி. நவரத்தினம் தொடங்கிய தமிழர் சுயாட்சிக் கழகத்தில் இணைந்தார்.[2][3] சுயாட்சிக் கழகத்தின் விடுதலை பத்திரிகையில் தொடர்ந்து எழுதி வந்தார். 1970 பொதுத் தேர்தலில் சுயாட்சிக் கழகம் போட்டியிட்ட அனைத்துத் தொகுதிகளிலும் தோல்வியடைந்தது. ஈழவேந்தன் பின்னர் மீண்டும் தமிழரசுக் கட்சியில் சேர்ந்தார். தமிழரசுக் கட்சி அப்போது தமிழர் விடுதலைக் கூட்டணியில் ஓர் உறுப்புக் கட்சியாக இருந்தது.[3][4] தமிழர் விடுதலைக் கூட்டணியின் கொழும்புக் கிளைக்கு ஈழவேந்தன் தலைவராக இருந்து பணியாற்றினார்.[3] 1977 வன்முறைகளில் இவர் கடுமையாகப் பாதிக்கப்பட்டார்.[3] 1980 ஆம் ஆண்டில் வேறு சிலருடன் இணைந்து தமிழரசுக் கட்சியில் இருந்து விலகி, தமிழீழ விடுதலை முன்னணி என்ற கட்சியை ஆரம்பித்தார்.[2] அக்கட்சியின் செயலாளராக ஈழவேந்தன் பணியாற்றினார்.[2]
இலங்கையில் தமிழருக்கு எதிரான வன்முறைகள் கிளம்பிய காலகட்டத்தில் 1981 ஆம் ஆண்டில் இவர் தமிழ்நாட்டுக்கு சென்றார்.[4] விடுதலைப் புலிகளுக்கு மருந்துகள் கொள்வனவு செய்தனர் என்ற குற்றச்சாட்டில் இவரும் வேறும் நால்வரும் 1997 பெப்ரவரியில் சென்னையில் கைது செய்யப்பட்டனர்..[3][4] 1999 ஆம் ஆண்டில் இவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.[4] ஈழவேந்தன் 2000 டிசம்பர் 4 இல் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டார்.[4][5]
2004 நாடாளுமன்றத் தேர்தலில் ஈழவேந்தன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் உறுப்பினராக நியமிக்கப்பட்டு நாடாளுமன்றம் சென்றார்.[6][7] மூன்று மாதங்களுக்கு மேலாக நாடாளுமன்றத்துக்குச் செல்லாமல் விட்டதை அடுத்து இவரது நாடாளுமன்ற உறுப்பினர் பதவி 2007 நவம்பரில் பறி போனது.[8][9]
ஈழவேந்தன் இலங்கையில் இருந்து இடம் பெயர்ந்து கனடாவுக்குப் புலம் பெயர்ந்தார். 2010 மே மாதத்தில் நாடு கடந்த தமிழீழ அரசின் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[10]
இறப்பு
2010 இல் புலம்பெயர்ந்து கனடாவில் வாழ்ந்து வந்த ஈழவேந்தன் தொராண்டோ மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் 2024 ஏப்ரல் 28 அன்று தனது 91-ஆவது அகவையில் காலமானார்.[11] இவரின் துணைவியார் அருளாம்பிகை. இரு மகள்கள் உண்டு.
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
- "One Hundred Tamils of the 20th Century: M. K. Eelaventhan". Tamil Nation.