உரோமப் பண்ணைத் தொழில்
கருவிகள்
Actions
பொது
அச்சு/ஏற்றுமதி
பிற திட்டங்களில்
உரோமப் பண்ணைத் தொழில் (Fur farming) என்பது சில வகையான விலங்குகளை அவற்றின் உரோமங்களுக்காக இனப்பெருக்கம் செய்து வளர்ப்பது ஆகும்.
உலகில் பண்ணைத் தொழிலாகச் செய்யப்படும் உரோம உற்பத்தியில் பெரும்பாலானவை ஐரோப்பிய பண்ணையார்களால் மேற்கொள்ளப்படுகின்றன. 2018-ம் ஆண்டு நிலவரப்படி, ஐரோப்பிய ஒன்றியத்தில் 22 நாடுகளில் 5,000 உரோமப் பண்ணைகள் அமைந்துள்ளன. ஒட்டுமொத்தமாக உலக பண்ணை உரோம உற்பத்தியில் இந்த உற்பத்திப் பகுதிகளின் பங்கு மட்டும் 50% என்பது குறிப்பிடத்தக்கது.[1][2] ஐரோப்பிய ஒன்றியம் உலகளாவிய உரோமக்கீரி (mink) உரோம உற்பத்தியில் 63 சதவிகிதமும் நரி உரோம உற்பத்தியில் 70 சதவிகிதமும் பங்காற்றுகிறது. உலக உரோமக்கீரி உற்பத்தியில் தோராயமாக 28 சதவிகித பங்களிப்புடன் டென்மார்க் முன்னணி நாடாக உள்ளது. உலகின் முதல் மூன்று உரோமத் தயாரிப்பு நாடுகளாவன டென்மார்க் (முன்பு), போலந்து மற்றும் சீனா.[3] ஐக்கிய அமெரிக்காவிற்கு நரி உரோமத் தோல்களை அதிகம் ஏற்றுமதி செய்யும் நாடாக பின்லாந்து விளங்குகிறது. உரோமத் தோல்களை ஏற்றுமதி செய்யும் முக்கிய நாடாக ஐக்கிய அமெரிக்கா இருக்கிறது. இதன் முக்கிய ஏற்றுமதி சந்தைகளில் சீனா, ரஷ்யா, கனடா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவை அடங்கும். மொத்த ஏற்றுமதியில் 1998-ல் 22% ஆக இருந்த ஆசியாவிற்கான ஏற்றுமதிகள் 2002-ல் 47% ஆக வளர்ந்தது.[4] 2012-ம் ஆண்டு நிலவரப்படி, உரோமங்களுக்கான உலகின் மிகப்பெரிய விற்பனைச் சந்தையாக ரஷ்யா விளங்குகிறது.[5][6] உரோமத் தோல்களை இறக்குமதி செய்யும் உலகின் மிகப்பெரிய நாடாகவும், தயாரிப்பு முடிந்த உரோமத் தயாரிப்புகளின் மிகப்பெரிய ஏற்றுமதியாளராகவும் சீனா உள்ளது.[7]
ஆஸ்திரியா,[8][9] குரோஷியா,[9][10] ஐக்கிய இராச்சியம்,[11][12] செக் குடியரசு,[13] நெதர்லாந்து (மார்ச் 2021 முதல்),[14] நார்வே (பிப்ரவரி 2025 முதல்),[15] இத்தாலி (ஜூன் 2022 முதல்)[16] ஆகிய நாடுகளில் உரோமப் பண்ணைத் தொழில் தடைசெய்யப்பட்டுள்ளது. சுவிட்சர்லாந்தில் உரோமப் பண்ணைத் தொழிலுக்குக் கடும் விதிமுறைகள் விதிக்கப்பட்டு அங்கு உரோமப் பண்ணைகள் முற்றிலுமாக இல்லாமல் போயின.[9] சில நாடுகளில் குறிப்பிட்ட வகையான விலங்குகளின் உரோமம் வளர்ப்பதற்கு மட்டும் தடை உள்ளது.
விலங்குரிமை செயற்பாட்டாளர்களின் முயற்சி, அதன் விளைவாக உரோம ஆடை வடிவமைப்பாளர்களின் செயற்பாட்டுத் தொய்வு என பல்வேறு காரணங்களினாலும் 1980-களின் பிற்பகுதியிலும் 1990-களிலும் உரோமத்தின் தேவை குறையத் துவங்கியது. 2000-ம் ஆண்டுத் தொடக்கத்திலிருந்து இந்நிலை திடீரென மாறத் துவங்கி உலகெங்கிலும் உரோம விற்பனையானது வரலாறு காணாத வண்ணம் உயர்ந்தது. இது உரோம வேலைப்பாடுகளில் புகுந்த புதிய தொழிற்நுட்பங்களாலும், சீனா, ரஷ்யா ஆகிய நாடுகளில் செலவழிப்பு வருமானத்தில் ஏற்பட்ட திடீர் உயர்வினாலும் இந்நிலை மேலும் வலுப்பெற்றது. இந்த வளர்ந்து வரும் தேவையானது சீனா, போலந்து ஆகிய நாடுகளில் மேலும் விரிவான உரோமப் பண்ணைத் தொழில் நடவடிக்கைகளின் வளர்ச்சிக்கு வழிவகுத்தது.
கோவிட்-19 பொருந்தொற்றின் போது, உரோமக்கீரி–மனித தொடர்பின் மூலம் நோய்த்தொற்று மிகவும் எளிதில் பரவக்கூடியதாக இருந்ததால் பல நாடுகளின் உரோமக்கீரிப் பண்ணைகளின் மூலம் தொற்றுநோய் பரவும் அபாயம் இருந்ததும் அது கோவிட்-19 தடுப்பூசிக்கு எதிராகச் செயல்பட வல்லது என்பதும் பரவலான அச்சத்தை ஏற்படுத்தியது.[17] நெதர்லாந்தில் உள்ள பல உரோமக்கீரிப் பண்ணைகளில் ஜூன் 2020 முதல் விலங்குகள் அழிக்கப்பட்டு பண்ணைகள் முழுவதுமாக அகற்றப்பட்டன. ஆகஸ்ட் 2020-ல், அதுவரை 1 ஜனவரி 2024 முதல் மூடப்படவிருந்த உரோமப் பண்ணைகள் 1 மார்ச் 2021 முதலாகவே மூடப்படவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.[14][18] ஜூலை 2020-ல், ஸ்பெயின் 100,000 உரோமக்கீரிகளை கொன்று அழித்தது.[17] நவம்பர் 6, 2020 அன்று கோவிட்-19 கிருமியின் பிறழ்ந்த திரிபு வடிவம் ஒன்று பரவுவதைத் தடுக்கும் நோக்கில் டென்மார்க் தன்னிடமிருந்த 17 மில்லியன் உரோமக்கீரிகள் அனைத்தையும் அவசரநிலை காரணமாக மொத்தமாக அழிக்கப் போவதாக அறிவித்தது. இந்த புதிய வடிவக் கிருமியினால் குறைந்தது ஐந்து பேர் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டதே இதற்குக் காரணம்.[19] நோய் பரவும் அபாயத்தைக் கட்டுப்படுத்த எண்ணி 11 நவம்பர் 2020 அன்று நெதர்லாந்து மீண்டும் தனது உரோமக்கீரிப் பண்ணைகளை மூடுவதற்கான கெடுவை 1 ஜனவரி 2021-க்கு மேலும் முன்னோக்கி நகர்த்தியது.[20] உலகளவில் 40% உரோமக்கீரி உற்பத்தியைச் செய்து வந்த நிறுவனமான கோபன்ஹேகன் ஃபர் 2020 நவம்பர் நடுப்பகுதியில் நிகழும் சூழ்நிலைகளில் உலகளாவிய உரோம வர்த்தகத்தின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு இன்னும் 2 முதல் 3 ஆண்டுகளில் படிப்படியாகத் தனது செயல்பாடுகளை நிறுத்தப்போவதாக அறிவித்தது.[21]
| |||||||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||||||
|