இராகினி மாநிலம் (Rakhine State (/rəˈkaɪn/பர்மியம்: ရခိုင်ပြည်နယ်; MLCTS: ra.hkuing pranynay, இராகினி பலுக்கல் [ɹəkʰàiɴ pɹènè]; பர்மிய பலுக்கல்: [jəkʰàiɴ pjìnɛ̀]; முன்னர் அரக்கான்) என்பது மியன்மரின் (பர்மா) ஒரு மாநிலமாகும். மியான்மரின் மேற்கு கடற்கரையில் அமைந்திருக்கும் இதன் வடக்கில் சின் மாநிலம், கிழக்கே மாகுவே மண்டலம், பாகோ பிராந்தியம் மற்றும் அயெயர்வாடி பகுதி, மேற்கில் வங்காள விரிகுடா மற்றும் வடகிழக்கு வங்காளத்தின்சிட்டகாங் கோட்டம் ஆகியவற்றை எல்லைகளாக கொண்டுள்ளது. இது தோராயமாக வடக்கில் 17°30' மற்றும் 21°30' க்கு இடையிலும், கிழக்கில் 92°10' மற்றும் 94°50' இடைப்பட்ட நீளத்தில் அமைந்துள்ளது. மத்திய பர்மாவில் இருந்து இராகினி மாநிலத்தை தனிமைப்படுத்துவதாக அரக்கான் மலைகள் உள்ளன. இதன் உயரமான சிகரம் விக்டோரியா சிகரம் இது 3,063 மீட்டர்கள் (10,049 அடி) உயரமுடையது. இராகினி மாநிலத்தின் கரையோரத்தில் சௌபாபா மற்றும் மயிங்ன் தீவு போன்ற பெரிய தீவுகள் உள்ளன. இந்த மாநிலத்தின் பரப்பளவானது 36,762 சதுர கிலோமீட்டர்கள் (14,194 sq mi) ஆகும். மாநிலத்தின் தலை நகரம் சிட்வே நகரம்.[2]
சொற்பிறப்பு
இராகினி என்னும் பெயரானது பாளி சொல்லான ராக்ஹபுரா (சமசுகிருதம் ராக்ஷபுரா) என்ற சொல்லில் இருந்து தோன்றியது. இதன் பொருள் "இராட்சதர் நிலம்" (அரக்கர்) என்பதாகும். இந்த இராட்சதர் என்பது நெகிரிட்டோ மக்களைக் குறிப்பிட்டதாக நம்பப்படுகிறது, ஆயினும் போதிய ஆதாரமில்லை. பாலி சொல்லான "ராக்ஹபுபுரா" ("ரக்ஹிதா") என்பதன் பொருள் "ராக்ஷா மக்களின் நிலம்" (ராக்ஹா, ராக்கிங்) என்பது ஆகும். இராகினி என்ற சொல்லின் பொருள், "ஒரே இனத்தைச் சார்ந்தவர்" என்பதாகும். இராகினி மொழியில் இப்பகுதியானது இராகினிபிரே (Rakhinepray) என அழைக்கப்படுகிறது. மேலும் இராகினிய இனத்தை ராகினீதா என்று அழைக்கிறார்கள்.
பிரித்தானிய காலனி ஆட்சிக் காலத்தில் பயன்படுத்தப்பட்ட அரகான் என்ற சொலானது, போர்த்துக்கேய மொழியில் சொல்லப்பட்ட இராகினி என்ற சொல்லின் மோசமான வடிவத்தில் இருந்து வந்தது என்று நம்பப்படுகிறது, இந்தப் பெயரானது இன்றுவரை ஆங்கிலத்தில் பிரபலமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.[note 1] பல ஆங்கில மொழிப் பயனர்கள் இராணுவ ஆட்சியால் அறிவிக்கப்பட்ட பெயர்களை பயன்படுத்தாமல் தவிர்கின்றனர்.
வரலாறு
அரக்கான் (இப்போது இராகினி என்று பெயர் மாற்றப்பட்டுள்ளது) மாநிலத்தின் வரலாறு ஏழு காலகட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. முதல் நான்கு காலகட்டங்களானது வடக்கு இராகினி பிராந்தியத்தின் இராகினிகளின் ஆதிக்கமும் அதிகாரமும் நிறைந்த குறிப்பாக கலடான் ஆற்றுப் பகுதியில் இருந்த இறையாண்மை மிக்க அரசின் காலத்தைக் குறிப்பது ஆகும். இக்கால கட்டத்தின் வரலாறானது தண்ணிவாடி, வைத்தாலி, லேமிரோ மெரக் யூ என்று நான்காக பிரிக்கப்பட்டுள்ளது. இப்பகுதியின் மொரக் யூவினரை வீழ்த்தி பர்மாவின் கொங்குவங் பேரரசானது 1784–85 ஆம் காலகட்டத்தில் இப்பகுதியைக் கைப்பற்றியது. இதன் பிறகான காலகட்டத்தில் இராகினி பர்மாவின் கொன்ஹாங் இராச்சியத்தின் பகுதியாக மாறியது. 1824 ஆம் ஆண்டில் முதல் ஆங்கிலோ-பர்மியப் போர் வெடித்தது, 1826 ஆம் ஆண்டு, பர்மியருக்கும் பிரித்தானியருக்கும் இடையில் ஏற்பட்ட ஒப்பந்தத்தின் மூலம் பிரித்தானியருக்கு ஏற்பட்ட இழப்புக்கு ஈடாக இராகினி (தொனிந்தாரியுடன்) பிரித்தானியர்களுக்கு வழங்கப்பட்டது. இதனால், பிரித்தானிய இந்தியாவின் பர்மா மாகாணத்தின் ஒரு பகுதியாக இராகினி ஆனது. 1948 இல், பர்மாவுக்கு விடுதலை வழங்கப்பட்டபோது, இராகினி புதிய கூட்டாட்சி குடியரசின் ஒரு பகுதியாக (காலனி) ஆனது.
சுதந்திர இராச்சியம்
வாய்மொழி வரலாறு மற்றும் சில கோயில் கல்வெட்டுகள் ஆகியவற்றின் அடிப்படையில் பார்க்கும்போது, இராகினிப் பிரதேசத்தின் வரலாறானது கிட்டத்தட்ட ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முந்தியதாக நம்பப்படுகிறது, ஆயினும் போதிய ஆதாரமில்லை. இராகினி மக்கள் தங்கள் சமூக வரலாற்றை பொ.ச.மு. 3325 வரை கண்டடைந்துள்ளனர். மேலும் 1784 ஆம் ஆண்டுவரை தங்களுக்கான சொந்த முடியாட்சிகளையும், ஆட்சியாளர்கள், இளவரசர்கள் ஆகியவர்களாக 227 பேரை தொடர்ச்சியாக கொண்டிருந்துள்ளனர். இராகினி நாட்டின் எல்லைகளாக, அவாவின் பகுதிகள், ஐராவதி வடிநிலம், துறைமுக நகரான தன்லின் (சிரியாம்) மற்றும் கிழக்கு வங்கத்தின் சில பகுதிகள் ஆகியவற்றைக் குறிப்பிடுகின்றனர். இருப்பினும், தொடர்ச்சியான இராகினி இராச்சியத்தின் பரப்பானது சரியாக அறியப்பட்ட வரலாற்று ஆவணங்களால் உறுதிப்படுத்தப்படவில்லை.
இராகினி புராணத்தின்படி, பொ.ச.மு. 34 ஆம் நூற்றாண்டில் வடக்கு நகரான டன்யவாடியை மையமாக் கொண்டு அமைந்த முதலில் தெரிந்த இராஜ்யம் எழுந்தது. அது கி.பி. 327 வரை நீடித்தது. இராகினியின் ஆவணங்கள் மற்றும் கல்வெட்டுகளின் கூற்றின்படி, ஏறக்குறைய பொ.ச.மு. 554 இல் புத்தரால் இந்த இராச்சியம் பார்வையிட்டதாகவும், மன்ஹூனி புத்தர் உருவப்படம் தண்யவதிக்கு அனுப்பப்பட்டது என்று கூறப்படுகிறது. 4 ஆம் நூற்றாண்டில் தண்ணிவாடி வீழ்ச்சியடைந்த பிறகு, இராகினியின் அதிகார மையமானது வெயிட்டி நகரிலுள்ள ஒரு புதிய வம்சத்தின் வசம் மாறியது. 4 ஆம் நூற்றாண்டின் துவக்கத்திலிருந்து கி.பி. 818 வரை இராகினி பிரதேசங்களை வெய்திலி பேரரசு ஆட்சி செய்தது. இராகினி பிரதேசத்தின் கலாச்சாரம், கட்டிடக்கலை, புத்த சமயம் ஆகியவற்றின் பாரம்பரியக் காலமாக இந்த காலம் கருதப்படுகிறது, வெயிடி காலத்திற்கு முன்னர் இருந்ததை விடவும் இக்காலகட்டத்தைச் சேர்ந்த தொல்லியல் களங்கள் மிகுதியாக எஞ்சியுள்ளன. லெய்தோ ஆற்றை ஒட்டிய நான்கு நகரங்களில் ஒரு புதிய வம்சம் தோன்றியது இதன் செல்வாக்கால் வெயிடிலி வம்சம் வீழ்ச்சியடைந்தது. மேலும் தொடர்ச்சியாக தலைநகரங்களாக இருந்த நான்கு பிரதான நகரங்கள் லெமோரோ காலத்தில் கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது, ஆயினும் போதிய ஆதாரமில்லை.
இராகினி இராச்சியத்தின் இறுதி சுதந்திர அரசான மொரக் யூ 1429 இல் மின் சா மோன் என்பவரால் நிறுவப்பட்டது. இராகினி மக்களின் வரலாற்றின் பொற்காலமாக மொரக் யூ வம்சத்தின் ஆட்சிக்காலம் கருதப்படுகிறது. இவர்கள் காலத்தில் இராகினி பிரதேசமானது வணிக ரீதியாக முக்கியமான துறைமுகப் பகுதியாகவும், வங்காள விரிகுடாவில் அதிகாரமிக்க தளமாகவும் இருந்தது. மேலும் அரேபியா மற்றும் ஐரோப்பாவோடு பரந்த அளவில் கடல் வர்த்தகத்தில் ஈடுபட்டதாகவும் நம்பப்படுகிறது. 1666 ஆம் ஆண்டில் சிட்டகொங்கைமுகலாய பேரரசிடம் இழந்தபின்னர், நாடு 17 ஆம் நூற்றாண்டிலிருந்து நிரந்தரமாக வீழ்ச்சியுற்றது. ஆட்சியின் வீழ்ச்சிக் காலத்தில் நாட்டில் ஸ்திரமின்மை, உள்நாட்டுக் கிளர்ச்சி மற்றும் அரசர்களைக் கவிழ்த்துவது ஆகியவை மிகவும் பொதுவானவையாயின. ஆசியாவில் போர்ச்சுக்கீசியர்கள் மேன்மையுற்றிருந்த காலத்தில், அரக்கனில் தங்கள் ஆதிக்கத்தை சிறிதுகாலம் நிறுவியிருந்ததாக நம்பப்படுகிறது, ஆயினும் போதிய ஆதாரமில்லை.
அரகாகானியர் அல்லாதவர்களின் ஆட்சி
இராகினி இராச்சியமானது 1785 ஆம் ஆண்டு சனவரி 2 இல், பர்மாவின் கொன்ஹாங்கின், படையெடுப்புக்கு ஆளானது உள்நாட்டில் பிளவுபட்ட இராச்சியமானது பர்மியர்களால் வெற்றிகொள்ளப்பட்டது. போரின்போது சூறையாடிய பர்மிய படைகள் மகாமுனி படத்தை எடுத்துச் சென்றன. பர்மாவின் இந்த எல்லை விரிவாக்கத்தினால், பிரித்தானிய கிழக்கிந்திய கம்பனியின் பிராந்தியங்களுடனான நேரடியான தொடர்புகளை எதிர்கொண்டது, இது எதிர்கால விரோதப் போக்கிற்கு களம் அமைத்தது. பல்வேறு புவிசார் அரசியல் பிரச்சினைகளானது முதல் ஆங்கிலோ-பர்மியப் போருக்கு (1824–26) வழிவகுத்தது. கடந்த போரின்போது ஏற்பட்ட சூறையாடலின்போது மகாமுனி படத்தை பர்மியர்கள் கொண்டு சென்றதுபோல், இந்தப் போரில் பிரித்தானிய இராணுவத்தால் இந்த கோவிலின் பெரிய மணி எடுத்துச் செல்லப்பட்டது. இப்போரில் துணிவாக செயல்பட்டதற்காக பிரித்தானிய கிழக்கிந்திய கம்பெனியின் 2 வது பிரிவின் இராணுவ வீரரான பீம் சிங்கிற்கு விருது வழங்கப்பட்டது. இந்தியாவின் உத்திரப்பிரதேச மாநில கான்ஷிராம் நகர் மாவட்டத்தில் உள்ள கஸ்கனி நகரத்திற்கு அருகே உள்ள நாட்ரா என்னும் கிராமத்தில் உள்ள கோயிலில் இந்த மணி தற்போதும் உள்ளது. போர் முடிவடைந்த நிலையில் யந்தாபோ (1826) உடன்படிக்கையின்படி, பிரித்தானியருக்கு இழப்பீடாக அரேகான் பகுதியை பிரித்தானிய இந்தியாவுக்கு பர்மா அளிக்க கட்டாயப்படுத்துக்கு ஆளானது. ஆங்கிலேயர் அரக்கானின் தலைநகராக அக்கான் (இப்போது சிட்வே) நகரை ஆக்கினர். பின்னர், அரக்கன் பிரித்தானிய இந்தியப் பேரரசின் பர்மா மாகாணத்தின் பகுதியாக மாறியது. பின்னர் பர்மாவானது பிரித்தானிய இந்தியாவில் இருந்துபிரிக்கப்பட்டு ஒரு தனி காலனி ஆட்சிப்பகுதியாக மாற்றப்பட்டது. அராகன் நிர்வாக முறையானது மொரக் யூ காலகட்டத்தின் பாரம்பரிய பிரிவுகளுடன் மூன்று மாவட்டங்களாக பிரிக்கப்பட்டது.
1940 இல் இருந்து
இராகினி பிரதேசமானது (அரக்கன்) இரண்டாம் உலகப் போரின்போது பல போர்கள் நடைபெற்ற இடமாக இருந்தது, குறிப்பாக அரக்கன் போர்த்தொடர்கள் 1942–1943 மற்றும் ரமரி தீவு போர் ஆகியன குறிப்பிடத்தக்கன. 1948 இல் ஆங்கிலேயர் வெளியேறிய பின்னர் உருவான விடுதலைப் பெற்ற பர்மிய ஒன்றியத்தின் ஒரு பகுதியாக அரக்கான் மாறியதுடன், அதன் மூன்று மாவட்டங்கள் அராகான் பிரிவுகளாக மாறியது. 1950 களில் இருந்து, அராக்கனின் சுதந்திரத்திற்காகவும், அதன் பிரிவினை மற்றும் இழந்த இறையாண்மையை மீளமைப்பதற்கான இயக்கம் வளர்ந்து வந்தது. இந்த உணர்வை சமாதானப்படுத்துவதன் ஒரு பகுதியாக, 1974 இல், ஜெனரல் நியின் சோசலிஸ்ட் அரசாங்கமானது, ரேகின் மாகாணத்தின், அரக்கன் பிரிவில் இருந்த, ரேகினின் மக்களின் பிராந்திய பெரும்பான்மையை குறைந்தபட்சம் பெயரளவில் ஒப்புக் கொண்டது.
2010 இல் இருந்து (2008 அரசியலமைப்பின் பின்னர்)
இராகினி மாநிலத்தின் முதல் அமைச்சர்கள் இருந்தவர்கள்
ஹல மவுங் டின் ( சனவரி 2011–20 சூன் 2014)
இவர் 2010 பொதுத் தேர்தலில் அன் நகரியத்தில் இருந்து USDP யின் பிரதிநிதியாக இராகினி மாநில ஹெலட்டு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 2012-14ல் முஸ்லிம்களுக்கும் இராகினிய இனக்குழுக்களுக்கும் இடையில் தொடர்ச்சியாக ஏற்பட்ட தீவிர இனவாத முரண்பாடுகளின் பின்னர் தன் பதவியை ராஜினாமா செய்தார்.[3]
மேஜர் ஜெனரல் மவுங் மவுங் ஓன் (30 ஜூன் 2014 - தற்போதுவரை)
அவர் 2014 சூன் 21 ஆம் நாள் தேர்தல் ஆணையத்தின் மூலமாக இராணுவ நியமனமாக இராகினி மாநில ஹெலட்டு உறுப்பினராக நியமிக்கப்பட்டார். இதை அரக்கன் தேசியக் கட்சி அதை எதிர்த்தது. அதற்கு முன் அவர் எல்லை விவகாரங்கள் துணை அமைச்சர் மற்றும் இராகினி மாநில அவசர ஒருங்கிணைப்பு மையத்தின் தலைவராக இருந்தார.[4]
இனவாத மோதல்கள் மற்றும் ரோகிஞ்சா கிளர்ச்சி
2012 இராகினி மாநில கலவரங்கள்
2012 இராகினி மாநில கலவரங்கள் என்பது ரோகிஞ்சா முஸ்லிம்கள் மற்றும் இராகினி மாநிலத்தில் பெரும்பான்மை இனமாக இருந்த ராகின்களுக்கு இடையே ஏற்பட்ட தொடர்ச்சியான மோதல்களாகும். கலவரங்களுக்கு முன்னர் பௌத்த ராக்கியின்களிடையே பரவலான மற்றும் வலுவான ஒரு அச்சம் நிலவியது. அச்சத்திற்கான காரணம் தங்கள் ஆதி தாயகத்தில் விரைவில் தாங்கள் சிறுபான்மையினராக ஆகிவிடுவோம் என்பது ஆகும்.[5] இராகினி மாநிலத்தில் பத்து பர்மிய முஸ்லீம்கள் இராகினியர்களால் கொல்லப்பட்டது மற்றும் ரோஹிங்கா முசுலீம்களால் இராகினி இனத்தவர் ஒருவர் கொல்லப்பட்டது உட்பட நிகழ்வுகளால் துவங்கிய கலவரம் பல வாரங்களுக்கு பின்னர் முடிவுற்றது.[6][7]இரு தரப்பினராலும், முழு கிராமங்களும் "அழிக்கப்பட்டன".[8] பர்மிய அதிகாரிகளின் கருத்துப்படி இனவாத இராகினி பௌத்தர்கள் மற்றும் ரோகிஞ்சா முஸ்லிம்கள் 78 பேர் கொல்லப்பட்டனர், 87 பேர் காயமடைந்தனர், 140,000 பேர் வரை இடம்பெயர்ந்தனர்.[9] அரசாங்கம் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தி பிராந்தியத்துக்கு துருப்புக்களை அனுப்பியது. 2012 சூன் 10 இல் இராகினியில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டது, பிராந்தியத்தின் நிர்வாகம் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டது.[10][11] ரோகிஞ்சா அரசு சாரா அமைப்புகளானது, பர்மிய இராணுவம் மற்றும் காவல்துறையானது ரோகிஞ்சா முஸ்லிம்களை இலக்கு வைத்து கைது செய்வது மற்றும் வன்முறையில் ஈடுபடுவது போன்ற செயல்களில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டின.[12][13] இருப்பினும், சர்வதேச நெருக்கடி குழு நடத்திய ஆழ்ந்த ஆராய்ச்சியானது, இரு சமூகங்களும் இராணுவத்தினால் வழங்கப்பட்ட பாதுகாப்புக்காக நன்றி தெரிவித்தன என்று காட்டின.[14] பல துறவிகள் அமைப்புகளானது ரோகிங்கியாக்களுக்கு உதவும் தொண்டு நிறுவனங்களை தடுக்கும் நடவடிக்கைகளை எடுத்தது.[15] 2012 சூலையில் பர்மிய அரசு, ரோகிஞ்சா சிறுபான்மைக் குழுவை கணக்கெடுப்பில் சேர்க்கவில்லை-1982 ஆம் ஆண்டிலிருந்து வங்கதேசத்திலிருந்து ஊடுருவிய வங்காள முஸ்லிம்களாக வகைப்படுத்தியது.[16] பர்மாவில் சுமார் 140,000 ரோகிஞ்சா மக்கள் அகதி முகாம்களில் தங்கியுள்ளனர்.[17]
2016–தற்போதுவரை ரோகிஞ்சா மக்களின் நிலை
மக்கள் வகைப்பாடு
பர்மாவின் பல பகுதிகளைப் போலவே, ராக்கின் மாநிலமானது (முன்பு அரக்கான் மாகாணம் என அழைக்கப்பட்டது), மாறுபட்ட இன மக்களைக் கொண்டிருக்கிறது. உத்தியோகபூர்வ பர்மிய புள்ளிவிவரங்களின்படி இராகினி மாநில மக்கள் தொகையானது 3,118,963 ஆகும்.[18]
இந்த மாநிலத்தில் இராகினி மக்கள் பெரும்பான்மையினராக உள்ளனர் அவர்களை அடுத்து ரோகிஞ்சா முஸ்லிம்கள் கணிசமான மக்கள் தொகை கொண்டவர்கள்.[19][20] இராகினி மக்கள் பிரதானமாக தாழ்நில பள்ளத்தாக்கிலும் ராம் மற்றும் மானுங் (செதுபா) தீவுகளிலும் வசிக்கிறனர். கமேன், சின், மோரோ, சக்மா, கமி, டெய்னெட், பெங்காலி, ஹிந்து, மராமாரி போன்ற பிற இன சிறுபான்மையினர் முக்கியமாக மாநிலத்தின் மலைப்பகுதிகளில் வாழ்கின்றனர். இராகினி மாநிலத்தில் வாழும் திபெத்திய-பர்மியர்களின் பெரும்பகுதியினர் தேரவாத புத்தமதத்தை பின்பற்றுகின்றனர். சீர்திருத்த கிறித்துவம் அல்லது ஆன்மிசத்துடன் பொதுவாக தொடர்புடைய சின் மக்கள் கூட, இராகினி மாநிலத்தில் இராகினி மக்களுடைய கலாச்சார செல்வாக்கு காரணமாக பௌத்தத்தை பின்பற்றுகிறார்கள். வங்கதேசம் மற்றும் அதை ஒட்டிய கடலோரப் பகுதி எல்லைக்கு அருகே உள்ள மக்களில் 80-96 சதவிகிதத்தினர் முஸ்லீம்களாக உள்ளனர். 2012 கலவரம் நடந்தபின்னர் நடத்தப்பட்ட பல உள்ளூர் ஆய்வுகள் படி, பர்மாவுக்கு வெளியில் உள்ள +1 மில்லியன் புலம்பெயர்ந்த ரோகிஞ்சா முஸ்லீம்களையும் மக்கள்தொகையில் சேர்த்தால் இராகினி மாநில மக்கள் தொலையில் இவர்களின் எண்ணிக்கை 62.7% இருக்கலாம் என நம்பப்படுகிறது, ஆயினும் போதிய ஆதாரமில்லை.
இராகினி மாநிலத்தில் சமயம்(2015)
பௌத்தம் (52.2%)
இசுலாம் (42.7%)
கிருத்தவம் (1.8%)
இந்து (0.5%)
ஆன்ம வாதம் (0.1%)
பிற (2.7%)
நிர்வாகப் பிரிவுகள்
ரோகினி மாநிலத்தில் மொத்தம் ஐந்து மாவட்டங்கள் உள்ளன. அவற்றின் 2002 ஆண்டைய அதிகாரப்பூர்வ மதிப்பிடப்பட்ட மக்கள் எண்ணிக்கை:
சிட்வே (12,504 km2; 1,099,568 மக்கள்)
மராக்- யூ (அண்மையில் சிட்வே மாவட்டத்திலிருந்து உருவாக்கப்பட்டது)
மவுங்வா (3,538 km2; 763,844 மக்கள்)
க்யூக்கிபூ (9,984 km2; 458,244 மக்கள்)
தாண்ட்வெ (10,753 km2; 296,736 மக்கள்)
மாநிலத்தின் மொத்த மக்கள் தொகை: 36,778 km2; 2,915,000 மக்கள்
மாநிலத்தில் உள்ள இந்த மாவட்டங்களில் மொத்தம் 17 நகரியங்களும்,[21] 1,164 கிராமங்கள் உள்ளன. சிட்வே மாநிலத்தின் தலைநகரம் ஆகும்.
போக்குவரத்து
மத்திய பர்மாவிலிருந்து இராகினி மாநிலத்தை இணைக்கும்விதமாக அரக்கான் மலைகளைக் கடந்து சில சாலைகள் உள்ளன. மூன்று நெடுஞ்சாலைகள் இராகினி மாநிலத்தின் முதன்மை சாலைகள் ஆகும். அவை நடு ரகினியில் உள்ள அன் முதல் முன்பரா,[22] தென் மத்திய இராகினில் உள்ள டவுங்கப் முதல் பம்மாங் சாலை, தெற்கு இராகினில் உள்ள குவா-நாகத்சிங்சுங் சாலை .[23][24] போன்றவை ஆகும். விமானப் போக்குவரத்தானது பொதுவாக யங்கோன் மற்றும் மண்டலையில் இருந்து சிட்வே மற்றும் நாகாபலி வரை உள்ளது. நாகாபலியில் பிரபலமான கடற்கரை ரிசார்ட் உள்ளது. 1996 இல் சிட்வெவிலிருந்து பிரதான நிலப்பகுதிவரை மட்டுமே நெடுஞ்சாலை இருந்தது. மாநிலத்தில் இன்னமும் தொடர்வண்டிப் பாதை கிடையாது (இந்நிலையில் மியன்மர் இரயில்வேயானது 480-கிமீ நீள பாதையை சிட்வேயில் இருந்து பாத்தேன்வரை பாட்னாகுன்-க்யுட்டா-மெரக் யு-மப்யா-அன் வழியாக அமைப்பதாக அறிவித்துள்ளது).[25]
இராகினி மாநிலத்தில் உள்ள விமான நிலையங்கள்
சிட்வே விமான நிலையம்
கியூய்கி விமான நிலையம்
தண்ட்வி விமான நிலையம்
ஆன் விமான நிலையம்
மனாவ்ங் விமான நிலையம்
சீன முதலீட்டில், மலாக்கா நீரிணை வழியாக இந்தியப் பெருங்கடலில் இருந்து இயற்கை எரிவாயு மற்றும் கச்சா எண்ணெயை சீனாவிற்குக் கொண்டு செல்வதற்காக கியூபியுவில் ஒரு ஆழமான கடல் துறைமுகம் கட்டப்பட்டுள்ளது.[26]
இராகினியில் போக்குவரத்து பயனுள்ளதாக இருக்கும் ஆறுகள்
நஃப் ஆறு
காலன் ஆறு
லெம்ரோ ஆறு
மயூ ஆறு
பொருளாதாரம்
இராக்கின் மியான்மரின் வறிய மாநிலமாகும்.[27] 75% க்கும் மேற்பட்ட மக்கள் வறுமையில் வாழ்கின்றனர்.[28]
இப்பகுதியில் முக்கிய பயிர் நெல், மொத்த விவசாய நிலத்தின் 85% பகுதியில் பயிரிடப்படுகிறது. தென்னை மற்றும் நப்பா பனை தோட்டங்கள் கூட முதன்மையானவை ஆகும். மீன்பிடித்தல் ஒரு பெரிய தொழிலாக உள்ளது. இங்கு பிடிக்கப்படும் மீனில் பெருமளவு யாகோனுக்கு கொண்டு செல்லப்படுகின்றன, என்றாலும் சில ஏற்றுமதியும் செய்யப்படுகின்றன. மரம், மூங்கில் மற்றும் விரகு போன்ற மர பொருட்கள் மலைகளில் இருந்து கொண்டுவரப்படுகின்றன. சிறிய அளவிலான தாழ்ந்த-தரமற்ற கச்சா எண்ணெய் பழமையான, மேலோட்டமான, கைகளால்-தோண்டிய கிணறுகளிலிருந்து உற்பத்தி செய்யப்படுகிறது. ஆனால் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு போன்றவை இன்னும் கண்டறியப்படாத வளங்கள் இன்னும் உள்ளன.
கல்வி
மியான்மரில் உள்ள கல்வி வாய்ப்புகளானது யங்கோன் மற்றும் மண்டலை போன்ற முக்கிய நகரங்களைத் தாண்டி மிகவும் குறைவாகவே உள்ளன. 2013–2014 கல்வியாண்டில் மாநிலத்தில் பொதுப் பள்ளி முறை பற்றிய சுருக்கம் பின்வருமாறு.[29]
க ஆ 2013–2014
துவக்க
நடுநிலை
உயர்
பள்ளிகள்
2,515
137
69
ஆசிரியர்கள்
11,045
2,909
1,337
மாணவர்கள்
370,431
100,566
26,671
சிட்வே பல்கலைக்கழகம் மாநிலத்தின் முக்கிய பல்கலைக்கழகம் ஆகும்.
நலவாழ்வு
மியான்மரில் பொது சுகாதாரப் பாதுகாப்பு மோசமான நிலையில் உள்ளது. இராணுவ அரசாங்கம் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.5% முதல் 3% வரை எல்லாவித சுகாதாரப் பராமரிப்புக்கும் செலவழிக்கிறது, உலகில் மிகக் குறைந்த அளவாகவே இது உள்ளது.[30][31] சுகாதார பராமரிப்பு பெயரளவில் இலவசமாக இருந்தாலும், உண்மையில், நோயாளிகள் மருத்து மற்றும் சிகிச்சைக்கு, மருத்துவமனை மற்றும் பொது மருத்துவமனைகளில் பணம் செலுத்த வேண்டிய நிலை உள்ளது. பொது மருத்துவமனைகளில் அடிப்படை வசதிகளும் உபகரணங்களும் இருப்பதில்ல. பொதுவாக, யங்கோன் மற்றும் மண்டலைக்கு வெளியே சுகாதார பராமரிப்பு உள்கட்டமைப்பு மிகவும் மோசமாக உள்ளது. ஆனால் குறிப்பாக இராகினி மாநிலம் போன்ற தொலைதூர பகுதிகளின் நிலையோ மிக மோசமாக உள்ளது. முழு ராக்கின் மாகாணத்திலிம் உள்ள மருத்துவமனை படுக்கைகளைச் சேர்த்தால் யாங்கோன் பொது மருத்துவமனையை விட குறைவான படுக்கைகளே உள்ளன. மாநிலத்தில் பொது சுகாதார அமைப்பின் சுருக்கம் பின்வருமாறு.[32]