இந்தியன் ஏர்லைன்சு விமானம் 171
இந்தியன் ஏர்லைன்சு விமானம் 171 (Indian Airlines Flight 171) 1976 அக்டோபர் 12 அன்று பம்பாய் விமான நிலையத்தில் அவசரமாகத் தரையிறங்கும் போது தரையில் மோதி விபத்துக்குள்ளானது. இதன் போது இவ்விமானத்தில் இருந்த அனைத்து 95 பேரும் உயிரிழந்தனர். விமானத்தின் இயந்திரத்தில் தீப்பிடித்ததால், விமானம் கட்டுப்பாட்டை இழந்து தரையில் மோதியது.
![]() | |
விபத்து சுருக்கம் | |
---|---|
நாள் | 12 அக்டோபர் 1976 |
சுருக்கம் | இயந்திரம் தீப்பிடித்தது |
இடம் | மும்பை, இந்தியா |
பயணிகள் | 89 |
ஊழியர் | 6 |
காயமுற்றோர் | 0 |
உயிரிழப்புகள் | 95 (அனைவரும்) |
தப்பியவர்கள் | 0 |
வானூர்தி வகை | சட் ஏவியேசன் கரவெல் |
இயக்கம் | இந்தியன் ஏர்லைன்சு |
வானூர்தி பதிவு | VT-DWN |
பறப்பு புறப்பாடு | சத்திரபதி சிவாஜி பன்னாட்டு வானூர்தி நிலையம் |
சேருமிடம் | சென்னை விமான நிலையம் |
விபத்து
விமானம் 171 மும்பையிலிருந்து சென்னை நோக்கி வந்த உள்ளூர் விமான சேவையாகும். இப்பறப்பை போயிங் ரக விமானமே மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், அவ்விமானத்தின் இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறால், இப்பறப்பை சட் ஏவியேசன் கராவெல் விமானம் மேற்கொண்டது.[1] மும்பையில் ஓடுபாதையில் இருந்து கிளம்பிய சிறிது நேரத்தில் விமானத்தின் இரண்டாவது இயந்திரம் செயலிழந்தது. இதனை அடுத்து விமானம் திரும்பவும் மும்பை விமான நிலையத்தில் அவசரமாகத் தரையிறங்க முயன்றது. விமானம் 300 அடி உயரத்தில் பறந்து கொண்டிருக்கையில், விமானம் கட்டுப்பாட்டை இழந்து தரையில் மோதியது. விமானத்தில் இருந்த எவரும் உயிர் தப்பவில்லை.[2][3][4]
விபத்தில் இறந்த சிலர்
- விமானத்தில் பயணம் செய்த 89 பயணிகளில் 17 பேர் பெண்கள் ஆவர். ஆறு விமானப் பணியாளர்களில் இருவர் பெண்கள் ஆவர்.[3]
- விமானத்தில் பயணம் செய்த தமிழக சட்டசபை முன்னாள் உறுப்பினரும், காமராஜர் காங்கிரசு கட்சி உறுப்பினருமான பொன்னப்ப நாடார் (வயது 53) என்பவர் கொல்லப்பட்டார். இவர் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு காங்கிரஸ் தலைவராகவும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினராகவும் திருவாங்கூர்-கொச்சி சட்டமன்றத்திற்கு இரண்டு முறையும், தமிழக சட்டமன்றத்திற்கு மூன்று முறையும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் 1971 தேர்தலில் கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு தொகுதியில் இருந்து தமிழக சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்.[5]
- தென்னிந்தியத் திரைப்பட நடிகை ராணி சந்திரா மற்றும் அவரது தாயார் காந்திமதி, தங்கைகள் அம்புலி (வயது 19), சீதா (18), நிம்மி (13) ஆகியோர் இறந்தனர். ராணி சந்திராவின் குழுவில் இடம்பெற்றிருந்த ஜெயலட்சுமி (பாடகி), சி. கே. கிருஷ்ணகுட்டி (மத்தளம்), எம். கோதண்டராம் (மிருதங்கம்), பி. எஸ். மாணிக்கம் (ஆர்மோனியம்) ஆகியோரும் இறந்தவர்களில் அடங்குவர்.[5]
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
- Indian Airlines Flight 171 at AirDisaster.com பரணிடப்பட்டது 2007-09-07 at the வந்தவழி இயந்திரம்