அஸ்கர் அலி என்ஜினியர்
அஸ்கர் அலி என்ஜினியர் (10 மார்ச் 1939 – 14 மே 2013), புகழ்பெற்ற இஸ்லாமிய அறிஞர், மதச்சார்பின்மை கோட்பாட்டை உயர்த்திப்பிடித்தவரும் வகுப்பு நல்லிணக்கத்திற்குப் பாடுபட்டவரும் இஸ்லாமிய சீர்திருத்தவாதியுமாவார்.[1] மதச்சார்பின்மை மற்றும் இஸ்லாமிய நெறி குறித்து ஏராளமான நூல்களையும் கட்டுரைகளையும் அவர் எழுதியுள்ளார். சுதந்திர இந்தியாவில் நடைபெற்ற மதக்கலவரங்கள் குறித்து அவர் விரிவான ஆய்வுகள் நடத்தியுள்ளார்.[2]
அஸ்கர் அலி என்ஜினியர் | |
---|---|
![]() | |
பிறப்பு | சலும்பர், இராஜஸ்தான் | 10 மார்ச்சு 1939
இறப்பு | 14 மே 2013 | (அகவை 74)
தொழில் | அறிஞர், எழுத்தாளர் |
தேசியம் | இந்தியர் |
குறிப்பிடத்தக்க விருதுகள் | 1990 டால்மியா விருது |
பிள்ளைகள் | இர்பான் , சீமா இன்டோர்வாலா |
வாழ்க்கைக் குறிப்பு
1939 ஆம் ஆண்டு முஸ்லீம் சமூகத்தின் போரா பிரிவில் பிறந்த அஸ்கர் அலி என்ஜினியர் இளமைக் காலத்தில் சமயம் சார்ந்த கல்வியை ஆழமாகப் பயின்றவர். பின்னர் அனைத்து சமய நூல்களையும் ஆழ்ந்து கற்றார். இதன் காரணமாக இஸ்லாத்தில் காலத்துக் கேற்ற சீர்திருத்தம் வேண்டும் என்பதை வலியுறுத்தினார்.[3] இஸ்லாம் வரலாறு பற்றிய அவரது நூல் பழமை வாதத்தை அம்பலப்படுத்துவதாக இருக்கிறது. இந்தியாவில் மத வன்முறைகளால் ஏற்பட்ட பாதிப்புகளைக் கள ஆய்வு செய்து நூலாக்கினார். உள்நாட்டிலிருந்தும் வெளிநாடுகளிலிருந்தும் ஏராளமான இதழ்களில் ஆய்வுக்கட்டுரைகளை எழுதினார்.1993 ஆம் ஆண்டு சமூகம் மற்றும் மதச்சார் பின்மைக்கான ஆய்வு மையத்தைத் துவக்கி மக்கள் ஒற்றுமைக்கு அயராது பாடுபட்டார்.[4]
சுய சரிதை
“வாழும் உண்மை: அமைதி, நல்லிணக்கம், சமூக மாற்றத்துக்கான எனது தேடல்” என்ற தலைப்பில் அவர் எழுதியிருக்கும் சுய சரிதை நூல் அவரது வாழக்கை லட்சியத்தை வெளிப்படுத்துவதாக உள்ளது.[5]
விருதுகள்
சமூக நல்லிணக்கத்திற்காக அவரது பங்களிப்பை பாராட்டி 1990ல் டால்மியா விருது அவருக்கு வழங்கப்பட்டது.1987ல் அமெரிக்காவின் புகழ் பெற்ற விருதான சர்வதேச மாணவர் பேரவை விருது அவருக்கு வழங்கப்பட்டது.[6]
இறப்பு
சிறிது காலமாக நோய் வாய்ப்பட்டிருந்த அவர், மே 14 , 2013 அன்று மும்பை புறநகரில் உள்ள சாந்தகுரூஸ் பகுதியில் உள்ள அவரது வீட்டில் காலமானார்.[4]