அல் சபாப் (Al-Shabaab, அரபு மொழி: حركة الشباب المجاهدين, எனும் குழு சோமாலியா நாட்டில் செயல்படும் ஜிகாத் இயக்கம் ஆகும். அல் சபாப் எனும் அரேபிய மொழிச் சொல்லுக்கு நல் இளைஞன் என்று பொருள்.[2] 2012 ஆம் ஆண்டில் இது அல் காயிதா என்ற தீவிரவாத அமைப்பில் இணைந்தது.[3] இக்குழுவில் பல்வேறு நாட்டு இசுலாமிய இளைஞர்களும் சேர்ந்து ஜிகாத் எனும் புனிதப்போரில் ஈடுபட்டுள்ளனர். 2013 நிலவரப்படி, இக்குழுவினர் சோமாலியாவில் முக்கிய நகரங்களிலிருந்து வெளியேறி விட்டாலும், நாட்டில் பல கிராமப் பகுதிகளில் கடுமையான இசுலாமியச் சட்டத்தைக் கொண்டு வந்துள்ளனர்.[4][5] அல் சபாப் இயக்கத்தில் 4,000 முதல் 9,000 போராளிகள் வரை உறுப்பினர்களாக உள்ளனர் என மதிப்பிடப்பட்டுள்ளது.[6] அல்-சபாப் இயக்கத்தை, ஐக்கியஅமெரிக்காவும், ஐக்கிய இராச்சியமும் தடை செய்துள்ளது[2].
தாக்குதல்கள்
கென்யா மீதான தாக்குதல்
23-09-2013 அன்று கென்யா தலைநகர் நைரோபியில் உள்ள வெஸ்ட் கோஸ்ட் எனப்படும் 4 மாடிக்கட்டிட வணிகவளாகத்திற்குள் புகுந்த சோமாலிய அல்-சபாப் தீவிரவாதிகள் கையெறிக்குண்டுகளை வீசி கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டனர். இதில் பொதுமக்கள் 61 பேர், 5 தீவிரவாதிகள், 6 பாதுகாப்பு படையினர் என மொத்தம் 72 பேர் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதலுக்கு அல் ஷபாப் தீவிரவாத இயக்கம் பொறுப்பேற்றுள்ளது. இக்கட்டிடத்தில் தீவிரவாதிகளால் பிணையக் கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டிருந்த 137 பேர் கட்டிட இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தனர்.[7].[8] ஏப்பிரல் 2, 2015 அன்று காரிசா பல்கலைக்கழகத்தில் நடத்திய தாக்குதலில் 147 பேர் கொல்லப்பட்டனர் விக்கிச்செய்தி[9]
சோமாலிய நாடாளுமன்றம் மீதான தாக்குதல்
23-05-2014 அன்று அல் ஷபாப் இயக்கத்தினர் சோமாலிய நாடாளுமன்றத்தினுள் நடத்திய தாக்குதலில் குறைந்தது 10 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.[10][11][12]
சோமாலியாவில் நடவடிக்கைகள்
சோமாலியாவில் உள்ள கிஷ்மாயூ என்ற துறைமுகப் பகுதியையும் தெற்குப் பகுதியையும் கைப்பற்றியதைத் தொடர்ந்து அப்பகுதியில் தங்கள் அதிகாரத்தைச் செலுத்த தொடங்கி விட்டனர். அல்-ஷபாப் [13] இயக்கத்திற்குகென்று தனி சட்டதிட்டங்கள் அடங்கிய தனியரசு, நீதிமன்றங்கள், தனிக்கொடி என்று அமைத்துள்ளனர்.
தங்கள் ஆளுமைக்குட்பட்ட பகுதிகளில் திரைப்படம், நடன நிகழ்ச்சிகள் மற்றும் திருமண நிகழ்ச்சிகள், மற்றும் விளையாட்டுகளைத் தடை செய்துள்ளனர். இந்த நிலையில் அலைபேசிகளில் பயன்படுத்தி வந்த ரிங் டோன்களுக்கு தடை விதித்துள்ளனர்.
தீவிரவாதிகளின் தடையை மீறுபவர்களுக்குக் கடுமையான தண்டனையும் வழங்கப்படுகிறது. இசுலாமிய மதத்திற்கு எதிரான கொள்கைகளைக் குறிப்பாக இசை மற்றும் பாலியல் காணொளி காட்சிகளைக் காணத் தடை செய்துள்ளனர்.