அறுவைசார் முகக் கவசம்
ஒரு அறுவை சிகிச்சை முகக் கவசம், ஒரு செயல்முறை முகக் கவசம், மருத்துவ முகக் கவசம் அல்லது முகமூடி என அழைக்கப்படுகிறது, [1] [2] இது அறுவை சிகிச்சையின் போது சுகாதார வல்லுநர்களால் அணியப்பட வேண்டும், சிகிச்சையின் பொழுது நோயாளிகளுக்கு மருத்துவ துறையினரின் வாய், மூக்கு போன்ற உறுப்புகளிடமிருந்து வெளிவரும் திரவ துளிகள் மற்றும் சுற்றுப்புற வளிமண்டலத்தில்(ஆங்:aerosol) வெளிவிடப்படும் பாக்டீரியாக்களைப் தடுக்க உதவுகின்றது. அறுவைசார் முகக்கவசமானது அணிந்திருப்பவரை காற்றின் வழி பரவும் பாக்டீரியா அல்லது வைரஸ் துகள்களை உள்ளிழுப்பதில் இருந்து பாதுகாக்க வடிவமைக்கப்படவில்லை, மேலும் இவை என்95 அல்லது FFP முகமூடிகள் போன்ற சுவாசக் கருவிகளைக் காட்டிலும் குறைவான செயல்திறன் கொண்டவை, ஆனால் என்95 அல்லது FFP போன்றவை அவற்றின் பொருள், வடிவம் மற்றும் இறுக்கமான முத்திரை காரணமாக சிறந்த பாதுகாப்பை வழங்குகின்றன.
கிழக்கு ஆசிய நாடுகளான சீனா, ஜப்பான், தென் கொரியா மற்றும் தைவான் போன்ற நாடுகளில் காற்றில் பரவும் நோய்களின் பரவலின் விகிதத்தை குறைக்கவும், காற்று மாசுபாடு மூலம் காற்றில் உருவாக்கப்பட்ட தூசி துகள்கள் சுவாசத்தின் மூலம் உட்செல்வதை தடுக்க, ஆண்டு முழுவதும் பொதுமக்களால் பரவலாக அறுவை சிகிச்சை முக கவசம் பயன்படுத்தப்படுகின்றன. [3] [4] அண்மையில், தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் புகைமூட்டம் அதிகரித்து வருவதால், இந்தியா, நேபாளம் மற்றும் தாய்லாந்தின் முக்கிய நகரங்களில் அறுவை சிகிச்சை முகமூடிகள் மற்றும் காற்று வடிகட்டுதல் முகமூடிகள் அடிக்கடி பயன்படுத்தப்படுகின்றன. [5] [6] [7] கூடுதலாக, தென்கிழக்கு ஆசிய மூடுபனி பருவத்தில் இந்தோனேசியா, மலேசியா மற்றும் சிங்கப்பூரில் முகமூடிகள் பயன்படுத்தப்படுகின்றன. [8] [9] காற்று வடிகட்டுதல் அறுவை சிகிச்சை பாணி முகமூடிகள் ஆசியா முழுவதும் மிகவும் பிரபலமாக உள்ளன, இதன் விளைவாக, பல நிறுவனங்கள் முகமூடிகளை வெளியிட்டுள்ளன, அவை காற்றின்வழி தூசி துகள்களின் சுவாசத்தை தடுப்பது மட்டுமல்லாமல் நாகரீகமாகவும் உள்ளன.[10] [11]
செயல்பாடு
அறுவைசார் முகமூடி என்பது ஒருமுறை மட்டும் பயன்படுத்தக்கூடிய தளர்வான முறையில் அணியக்கூடிய சாதனமாகும், இது அணிந்தவரின் வாய் மற்றும் மூக்கிற்கும், சுற்றுப்புற சூழலிலுள்ள அசுத்தங்களுக்கும் இடையே ஒரு ஸ்தூலமான தடையை உருவாக்குகிறது. இதனை ஒழுங்காக அணிந்தால், ஒரு அறுவைசார் முகமூடி என்பது வைரஸ்கள் மற்றும் பாக்டீரியாக்களைக் கொண்டிருக்கும் பெரிய துகள் மற்றும் நீர்த்துளிகள் ஆகியவற்றை அணிந்தவரின் வாய் மற்றும் மூக்கை அடைவதைத் தடுக்கிறது. அறுவைசார் முகமூடிகள் அணிந்தவரின் உமிழ்நீர் மற்றும் சுவாச சுரப்புகளை மற்றவர்களுக்கு வெளிப்படுத்துவதைக் குறைக்க உதவுகிறது.[13] அறுவைசார் முகமூடி அணிந்தவர்கள் தங்கள் வாய் அல்லது மூக்கினைத் தாமே தொடுவது தடுக்கப்படுவதால், இதன் மூலம் அசுத்தமான மேற்பரப்பைத் தொடுவதன் மூலம் அதிலிருக்கும் வைரஸ்கள் மற்றும் பாக்டீரியா நம் உடலின் உட்செல்வதை தடுக்கிறது.[12]
ஒரு அறுவைசார் முகமூடி, அதன் வடிவமைப்பால், இருமல், தும்மல் அல்லது சில மருத்துவ முறைகளால் பரவக்கூடிய காற்றிலுள்ள மிகச் சிறிய துகள்களை வடிகட்டவோ தடுக்கவோ இயலாது. இந்த முகமூடியை தளர்வாக அணிவதால் முகமூடியின் மேற்பரப்புக்கும் முகத்திற்கும் இடையில் ஏற்படும் மெல்லிய இடைவெளி காரணமாக, இந்த முகமூடிகள் கிருமிகள் மற்றும் பிற அசுத்தங்களிலிருந்து முழுமையான பாதுகாப்பை வழங்காது.