அருணன்
அருணன் (ⓘ) (Aruṇa or Arun), இந்து தொன்மவியல்படி காசிபர்-வினதா தம்பதியரின் செந்நிறமுடைய மூத்த மகன். கருடனின் அண்ணன். சூரியனின் தேரை ஓட்டுபவர் என்பதாலும், சூரியன் உதிக்கும் முன்பே அருணன் தோன்றுவதாலும், அந்நேரத்தை அருணோதயம் என்பர்.
![](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/1/17/Templo_Wat_Arun%2C_Bangkok%2C_Tailandia%2C_2013-08-22%2C_DD_28.jpg/220px-Templo_Wat_Arun%2C_Bangkok%2C_Tailandia%2C_2013-08-22%2C_DD_28.jpg)
வரலாறு
காசிபர் வழங்கிய வரத்தின்படி, வினதை, கத்ருவின் குழந்தைகளான ஆயிரம்நாகர்களை விட ஆயிரம் மடங்கு வலுமிக்க இரண்டு முட்டைகளை இட்டாள். முட்டையிட்டு ஐநூறு ஆண்டுகள் ஆகியும் இரண்டு முட்டைகளிலிருந்தும் குஞ்சு பொறிக்காததால், வினதை அவசரப்பட்டு அதில் ஒரு முட்டையை உடைத்துப் பார்க்கும் போது, அதில் இடுப்புக்குக் கீழ் வளர்ச்சி அடையாத அருணன் தோன்றினான். முட்டையிலிருந்து தானாகக் குஞ்சு பொறிக்கும் முன்பு வலிந்து முட்டையை உடைத்துப் பார்த்த காரணத்தால், முழு வளர்ச்சி அடையாத தன்னைப் பெற்ற தாயான வினதாவை,கத்ருவின் அடிமையாக ஆவாய் எனச் சாபமிட்டு, சூரியனின் தேரோட்டியானன்.
பின்னர் ஐந்நூறு ஆண்டுகள் கழித்து இரண்டாவது முட்டையிலிருந்து கருடன் தோன்றினான். கருடன் தேவ லோகத்திலிருந்து அமிர்தம் கொண்டு வந்து கத்ருவிடம் வழங்கி தன் தாயை அடிமைத்தனத்திலிருந்து விடுவித்தார்.[1][2].
இராமாயணம் இதிகாசத்தில் காணப்படும் சடாயு மற்றும் சம்பாதி எனும் கழுகு அரசர்கள் அருணனின் மகன்கள்.
அடிக்குறிப்புகள்
மேற்கோள்கள்
- Dictionary of Hindu Lore and Legend (பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-500-51088-1) by Anna Dallapiccola
- Devī-Bhāgavata Purāṇa 10:13