அமர் சிங் சம்கிலா
கருவிகள்
Actions
பொது
அச்சு/ஏற்றுமதி
அமர் சிங் சம்கிலா | |
---|---|
இயற்பெயர் | தன்னி ராம் |
பிற பெயர்கள் | அமர்சிங் சம்கிலா |
பிறப்பு | (1961-07-21)21 சூலை 1961 துக்ரி, பஞ்சாப், இந்தியா |
இறப்பு | 8 மார்ச்சு 1988(1988-03-08) (அகவை 26) மேசம்பூர், பஞ்சாப், இந்தியா |
இசை வடிவங்கள் | பஞ்சாபி இருவர் இசை, தனிப்பாடல், லோக்-டத், லோக்-கதா, தார்மிக் |
தொழில்(கள்) | பாடகர், பாடலாசிரியர், இசைக்கலைஞர், இசையமைப்பாளர் |
இசைக்கருவி(கள்) | வாய்ப்பாட்டு, தும்பி, ஆர்மோனியம், தோலக் |
இசைத்துறையில் | 1979–1988 |
வெளியீட்டு நிறுவனங்கள் | எச்எம்வி |
இணைந்த செயற்பாடுகள் | சம்கிலா & அமர்ஜோத், சுரிந்தர் சோனியா, மிஸ் உஷா |
இணையதளம் | www.amarsinghchamkila.com |
அமர் சிங் சம்கிலா (Amar Singh Chamkila) என பொதுமேடைகளில் பரவலாக அறியப்படும் தன்னி ராம் (Dhanni Ram, 21 சூலை 1961 – 8 மார்ச் 1988), புகழ்பெற்ற பஞ்சாபி பாடகரும் பாடலாசிரியரும் இசைக்கலைஞரும் இசையமைப்பாளரும் ஆவார். அமர்சிங் சம்கிலா தனது மனைவி அமர்ஜ்யோத்துடன் இணைந்து பாடி வந்தார். இருவரும் மார்ச் 8, 1988இல் அடையாளம் காணபடாத இளைஞர்களால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
பஞ்சாபின் மிகச் சிறந்த மேடைப் பாடகர்களில் சம்கிலா ஒருவராகத் திகழ்ந்தார். தான் வளர்ந்த பஞ்சாபி சிற்றூர் வாழ்க்கையின் தாக்கம் இவரது இசையில் தெரிந்தது. பொதுவாக திருமணத்திற்கப்பாற்பட்ட பாலுறவு, வயதுக்கு வருதல், குடித்தல், போதைமருந்துப் பயன்பாடு, பஞ்சாபி ஆண்களின் ஆண்மை குறித்த பாடல்களைப் பாடி வந்தார். இதனால் இவரது பாடல்கள் மிகவும் விரசமாக இருப்பதாக சர்ச்சைகள் எழுந்தன. இவரது விசிறிகள் இவரது பாடல்கள் உண்மையான பஞ்சாபிப் பண்பாட்டையும் பஞ்சாபி சமூகத்தையும் பிரதிபலிப்பதாக கூறினர்.
இவரது தொகுப்பில் "பெக்லே லால்கரே நால்" என்ற பாடலும் பக்திப் பாடல்களான "பாபா தேரா நான்கானா", "தல்வார் மே கல்கிதர் தி"யும் மிகவும் புகழ் பெற்றவை. இவர் எழுதி, ஆனால் பாடாத, "ஜட் தி துஷ்மனி" என்ற பாடல் மற்ற பல பஞ்சாபிக் கலைஞர்களால் பாடப்பட்டு பரவலான பாராட்டைப் பெற்றுள்ளது.
இந்தியத் திரைப்பட இசையமைப்பாளர் அமித் திரிவேதி சம்கிலாவை "பஞ்சாபின் எல்விஸ் பிரெஸ்லி" எனப் புகழ்ந்துள்ளார்.[1]
பிரித்தானிய இந்திய இசைக்கலைஞர் பஞ்சாபி எம்சி சம்கிலாவின் இசையின் தாக்கத்தால் இசைத்துறைக்கு வந்ததாக குறிப்பிட்டுள்ளார்.[2]