அன்சா ஜீவராஜ் மேத்தா
அன்சா ஜீவராஜ் மேத்தா (Hansa Jivraj Mehta) (1897 சூலை 3 - 1995 ஏப்ரல் 4) [1] இவர் ஓர் சீர்திருத்தவாதியும், சமூக ஆர்வலரும், கல்வியாளரும், சுதந்திர ஆர்வலரும், பெண்ணியவாதியும் மற்றும் இந்திய எழுத்தாளரும் ஆவார். [2] [3]
அன்சா ஜீவராஜ் மேத்தா | |
---|---|
பிறப்பு | 3 சூலை 1897 |
இறப்பு | 4 ஏப்ரல் 1995 | (அகவை 97)
வாழ்க்கைத் துணை | ஜீவராஜ் மேத்தா |
ஆரம்ப கால வாழ்க்கை
அன்சா மேத்தா 1897 சூலை 3 அன்று ஒரு நகர் பிராமண குடும்பத்தில் பிறந்தார். இவர் பரோடா அரசைச் சேர்ந்த மனுபாய் மேத்தாவின் மகளும் மற்றும் முதல் குசராத்தி புதினமான கரண் கெலோவின் ஆசிரியர் நந்தசங்கர் மேத்தாவின் பேத்தியுமாவார். [1] [4]
இவர் 1918 இல் தத்துவத்தில் பட்டம் பெற்றார். இவர் இங்கிலாந்தில் பத்திரிகை மற்றும் சமூகவியல் துறையை படித்தார். 1918 இல், சரோஜினி நாயுடுவையும் பின்னர் 1922-ல் மகாத்மா காந்தியையும் சந்தித்தார். [5] [6]
இவர் சிறந்த மருத்துவரும் மற்றும் நிர்வாகியுமான ஜீவராஜ் நாராயண் மேத்தா என்பவரை மணந்தார்.
தொழில்
அரசியல், கல்வி மற்றும் செயல்பாடு
அன்சா மேத்தா மகாத்மா காந்தியின் ஆலோசனையின் படி பிற சுதந்திர இயக்க நடவடிக்கைகளிலும் பங்கேற்றார். வெளிநாட்டு உடைகள் மற்றும் மதுபானங்களை விற்கும் கடைகளின் முன் மறியலில் ஈடுபட்டார். மேலும் 1932 ஆம் ஆண்டில் இவர் தனது கணவருடன் ஆங்கிலேயர்களால் கைது செய்யப்பட்டு சிறை சென்றார். பின்னர் இவர் மும்பை சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். [7]
சுதந்திரத்திற்குப் பிறகு, இந்திய அரசியலமைப்பை உருவாக்கிய சட்டமன்றத்தின் ஒரு பகுதியாக இருந்த 15 பெண்களில் இவரும் ஒருவராக இருந்தார்.[8] இவர் அடிப்படை உரிமைகள் தொடர்பான ஆலோசனைக் குழு மற்றும் துணைக் குழுவிலும் உறுப்பினராக இருந்தார்.[9] இவர் இந்தியாவில் பெண்களுக்கன சமத்துவம் மற்றும் நீதிக்காக வாதிட்டார். [10] [11][12]
அன்சா 1926இல் மும்பை பள்ளிகள் குழுவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். 1945-46ல் அகில இந்திய மகளிர் மாநாட்டின் தலைவரானார். ஐதராபாத்தில் நடைபெற்ற அகில இந்திய மகளிர் மாநாட்டு மாநாட்டில் தனது தலைமை உரையில், பெண்கள் உரிமைகள் சாசனத்தை முன்மொழிந்தார். இவர் 1945 முதல் 1960 வரை இந்தியாவில் வெவ்வேறு பதவிகளை வகித்தார் - சிறிமதி நாதிபாய் தாமோதர் தாக்கர்சி மகளிர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர், அகில இந்திய இடைநிலைக் கல்வி வாரிய உறுப்பினர், இந்திய பல்கலைக்கழக வாரியத் தலைவர் மற்றும் பரோடா மகாராஜா சாயாஜிராவ் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் [13] போன்ற பதவிகளில் பணியாற்றினார்.
அன்சா 1946இல் பெண்களின் நிலை குறித்த அணுசக்தி குழுவில் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தினார். 1947-48ல் ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தில் இந்தியப் பிரதிநிதியாக, மனித உரிமைகளுக்கான உலகளாவிய பிரகடனத்தின் மொழியை " எல்லா மனிதர்களும் சமமாக உருவாக்கப்படுகிறார்கள் " ( எலினோர் ரூஸ்வெல்ட்டின் விருப்பமான சொற்றொடர்) என்பதிலிருந்து " அனைத்து மனிதர்களுக்கும் " மாற்றுவதற்கான பொறுப்பு இவருக்கு இருந்தது. இதில் பாலின சமத்துவத்தின் அவசியத்தை எடுத்துக்காட்டினார். [14] அன்சா பின்னர் 1950இல் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையத்தின் துணைத் தலைவரானார். மேலும் இவர் யுனெஸ்கோவின் நிர்வாகக் குழுவின் உறுப்பினராகவும் இருந்தார்.
இலக்கிய வாழ்க்கை
குசராத்தியில் அருன்னு ஆட்புத் ஸ்வப்னா (1934), பாப்லானா பரக்ரமோ (1929), பால்வர்த்தவாலி பகுதி 1-2 (1926, 1929) உட்பட பல குழந்தைகள் புத்தகங்களை எழுதினார். வால்மீகி இராமாயணத்தில் ஆரண்ய காண்டம், பால காண்டம் மற்றும் சுந்தரகாண்டம் ஆகியவற்றை இவர் மொழிபெயர்த்துள்ளார். கல்லிவரின் பயணங்கள் உட்பட பல ஆங்கிலக் கதைகள் இவரால் மொழிபெயர்க்கப்பட்டது சேக்சுபியரின் சில நாடகங்களையும் இவர் தழுவினார். இவரது கட்டுரைகள் சேகரிக்கப்பட்டு கேட்லாக் லெகோ (1978) என்ற பெயரில் வெளியிடப்பட்டன.
விருதுகள்
அன்சா மேத்தாவுக்கு 1959 இல் பத்ம பூசண் விருது வழங்கப்பட்டது . [15]