அனந்தி சசிதரன்
அனந்தி சசிதரன் (Ananthi Sasitharan, பிறப்பு: செப்டம்பர் 10, 1971) இலங்கைத் தமிழ் அரசியல்வாதியும், ஆசிரியையும், மாகாணசபை உறுப்பினரும் ஆவார்.
அனந்தி சசிதரன் Ananthi Sasitharan | |
---|---|
யாழ்ப்பாண மாவட்டத்துக்கான வட மாகாண சபை உறுப்பினர் | |
பதவியில் 11 அக்டோபர் 2013 – 24 அக்டோபர் 2018 | |
இலங்கை, வட மாகாண சபை மகளிர் விவகார மற்றும் சமூக சேவைகள் புனர்வாழ்வு கூட்டுறவு அமைச்சர் | |
பதவியில் ஜூன்.29. 2018 – 24 அக்டோபர் 2018 | |
முன்னையவர் | க. வி. விக்னேஸ்வரன் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | செப்டம்பர் 10, 1971 |
குடியுரிமை | இலங்கைத் தமிழர் |
அரசியல் கட்சி | ஈழத்தமிழர் சுயாட்சிக் கழகம்(2018 முதல்) |
பிற அரசியல் தொடர்புகள் | இலங்கைத் தமிழரசுக் கட்சி (2018 வரை) |
துணைவர் | வேலாயுதம் சசிதரன் (எழிலன்) |
தொழில் | ஆசிரியை |
ஆசிரியையான அனந்தி[1] தமிழீழ விடுதலைப் புலிகளின் திருக்கோணமலை மாவட்ட அரசியல் துறைப் பொறுப்பாளராக இருந்த எழிலன் எனப்படும் வேலாயுதம் சசிதரனின் மனைவி ஆவார்.[2][3] எழிலன் 2009 மே மாதத்தில் ஈழப்போர் முடிவடைந்ததை அடுத்து இலங்கை ஆயுதப் படைகளிடம் சரணடைந்த பின்னர் காணாமல் போனார். இவர் சரணடைந்ததை இலங்கை அரசு மறுத்து வருகிறது[4][5] ஆனாலும், தனது கணவர் இலங்கை அரசின் காவலில் இன்னமும் உள்ளார் என அனந்தி நம்புகிறார், அவரது விடுதலைக்காக பரந்த அளவில் குரல் கொடுத்து வருகிறார்.[6][7] ஈழப்போரில் காணாமல் போனோர் மற்றும் விதவைகளின் குடும்பங்களுக்காக அனந்தி குரல் கொடுத்து வருகிறார்.[8][9]
அரசியலில்
அனந்தி 2013 செப்டம்பர் 21 இல் நடைபெற்ற மாகாணசபைத் தேர்தலில் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியினால் பரிந்துரைக்கப்பட்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்ப்பாண மாவட்ட வேட்பாளராகப் போட்டியிட்டு, இரண்டாவது அதிகப்படியான விருப்பு வாக்குகள் (87,870) பெற்று வட மாகாண சபைக்குத் தெரிவானார்.[10][11] இவர் 2013 அக்டோபர் 11 ஆம் நாள் மாகாண சபை உறுப்பினராக முதலமைச்சர் க. வி. விக்னேஸ்வரன் முன்னிலையில் பதவியேற்றுக் கொண்டார்.[12][13][14] அனந்திக்கு 1வது வட மாகாண சபையில் சமூக சேவைகள், புனர்வாழ்வு, மகளிர் விவகாரம், காணாமல் போனோர் தொடர்பான அறிக்கையிடும் பணி வழங்கப்பட்டுள்ளது[15]
2018 அக்டோபர் 21 இல் இவர், தமிழ் தேசிய உணர்வாளர்களை ஒன்றிணைக்க, ஈழத்தமிழர் சுயாட்சிக் கழகம் என்ற பெயரில் புதிய கட்சியை யாழ்ப்பாணத்தில் ஆரம்பித்தார்.[16][17]
தாக்குதல்
தேர்தல் பரப்புரைக் காலத்தில் இவருக்கு எதிராகப் பல தாக்குதல்கள் நடத்தப்பட்டன. 2013 செப்டம்பர் 11 இல் சுன்னாகத்திற்கு அருகில் இவர் பயணம் செய்த வாகனம் தாக்குதலுக்குள்ளானது.[18][19] 2013 செப்டம்பர் 19 இல் அனந்தியின் சுழிபுரம் இல்லத்தைச் சூழ்ந்து கொண்ட இராணுவ உடை தரித்த சுமார் 70 ஆயுதக்கும்பல் அவரது இல்லத்தை சேதப்படுத்தி, அவரது ஆதரவாளர்கள் பலரைத் தாக்கிக் காயப்படுத்தினர். இத்தாக்குதலில் தேர்தல் கண்காணிப்பாளர் ஒருவரும் காயமடைந்தார்.[20][21][22]
மீண்டும் அரசுப் பணியில்
தற்போது அனந்தி சசிதரன் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் மீண்டும் முகாமைத்துவ உதவியாளராக இணைந்து பணியாற்றி வருகிறார்.[23]