அத்தி வரதர் தரிசனம் 2019
- பக்கம்
- உரையாடல்
கருவிகள்
Actions
பொது
அச்சு/ஏற்றுமதி
அருள்மிகு தேவராஜ சுவாமி கோயில் | |
---|---|
அமைவிடம் | |
நாடு: | இந்தியா |
மாநிலம்: | தமிழ்நாடு |
மாவட்டம்: | காஞ்சுபுரம் |
அமைவு: | காஞ்சிபுரம் |
ஆள்கூறுகள்: | 12°50′07″N 79°42′00″E / 12.83515°N 79.70006°E / 12.83515; 79.70006 |
கோயில் தகவல்கள் | |
கட்டிடக்கலையும் பண்பாடும் | |
கட்டடக்கலை வடிவமைப்பு: | திராவிடக் கட்டிடக்கலை |
இணையதளம்: | www |
அத்தி வரதர் தரிசனம் 2019 என்பது 2019 ஆம் ஆண்டில் காஞ்சிபுரம் வரதராசப் பெருமாள் கோயிலின் திருக்குளமான அமிர்தசரசு அல்லது ஆனந்த புஷ்கரணி தீர்த்தத்தின் அடியில் வைக்கப்பட்டிருக்கும் மூலவர் 40 ஆண்டுகளுக்குப் பிறகு தரிசனம் தரும் ஒரு உற்சவம் ஆகும். இதற்கு முன்னதாக 1979 ஆம் ஆண்டு சூலை 2-ஆம் நாள் அத்திவரதர் திருக்குளத்திலிருந்து எடுக்கப்பட்டார். 1 சூலை 2019 அன்று திருக்குளத்திலிருந்து அத்தி வரதர் எடுக்கப்பட்டு பொதுமக்கள் தரிசனத்திற்காக காட்சியளிக்கிறார். இந்த தரிசனம் 01.07.2019 முதல் 48 நாட்கள் வரையிலும் நீடிக்கும். 48 நாட்களுக்குப் பிறகு வெள்ளிப்பேழையில் வைக்கப்பட்டு திருக்குளத்திற்குள் அத்தி வரதர் மீண்டும் வைக்கப்படுவார்.[1]
காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயில் நூற்றுக்கால் மண்டபத்துக்கு வடக்கே உள்ள அனந்த புஷ்கரணியானது அனந்தனான ஆதிசேஷன் இருந்து தவம் செய்த இடம் எனப்படுகிறது. இந்த அனந்த சரசின் நடுவிலே ஒரு நீராழி மண்டபம் உள்ளது. அந்த மண்டபத்தின் அடித்தளத்தில் உள்ள ஒரு மாடத்தில் அத்திவரதர் இருக்கிறார். அத்திவரதர் என்றால் அத்திமரத்திலே உருவானவர்தான். இவர் இந்தத் தண்ணீருக்குள்ளேயே முழுகிச் சயனத் திருக் கோலத்திலேயே இருக்கிறார். நாற்பது ஆண்டுகளுக்கு ஒரு முறையே குளத்தில் உள்ள நீரையெல்லாம் இரைத்து அவரை வெளியே கொணர்கிறார்கள். ஒரு மண்டல காலம் பூசை நடக்கும். அதன் பின் திரும்பவும் தண்ணீருக் குள்ளேயே வைக்கபடுவார்.
ஆதியில் இந்து மதக் கடவுளான பிரம்ம தேவர் தனது படைப்புத் தொழிலை செய்து வரும் போது, தனது படைப்புத் தொழில் சிறப்புற நடைபெற காஞ்சியில் ஒரு யாகம் செய்யததாகவும், தன்னை அழைக்காமல் யாகம் செய்த பிரம்ம தேவன் மீது சரசுவதி கோபம் கொண்டு பிரம்ம தேவரின் யாகத்தை அழிக்க வேகவதி ஆறாக வடிவெடுத்து வெள்ளப்பெருக்காக வந்ததாகவும், பிரம்ம தேவரின் யாகத்தைக் காக்க வேண்டி திருமால் ஆற்றின் நடுவே சயனம் கொண்டதாகவும், அதனால் சரசுவதி தனது பாதையை மாற்றிக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. தனது யாகத்தைக் காத்த திருமாலை வணங்கித் தொழுததாகவும், வேண்டிய வரங்களைத் தந்ததால் பெருமாள் வரதர் என அழைக்கப்பட்டதாகவும் புராணங்கள் கூறுகின்றன. சித்திரை மாதம், திருவோணம் நட்சத்திரத்தில், புண்ணியகோடி விமானத்தில், சங்கு, சக்கரம், கதை தாங்கிய கோலத்தில் திருமால் பிரம்மதேவருக்கும் மற்ற தேவர்களுக்கும் காட்சியளித்ததாகவும், பிரம்ம தேவர் அதே திருக்கோலத்தை அத்தி மரத்தில் வடித்து வழிபட்டதாகவும் புராணம் கூறுகிறது. பின்னர் ஒரு முறை பிரம்ம தேவர் அத்தி வரதரை முன்னிருத்தி ஒரு யாகம் செய்யததாகவும், யாகத்தீயின் காரணமாக அத்தி வரதர் பின்னப்பட்டு விட்டதாகவும் கூறப்படுகிறது. திருமாலின் வேண்டுகோளின்படி அத்தி வரதர் கோயிலிலுள்ள இரண்டு திருக்குளங்களில் நீராழி மண்டபத்திற்கு அடியில் உள்ள மற்றொரு மண்டபத்தில் வெள்ளிப்பேழையில் சயனக் கோலத்தில் வைக்கப்பட்டதாகவும், கலியுகம் முழுவதும் அமிர்தசரசு திருக்குளத்தின் அடியில் குளிர்ந்த நிலையில் பெருமாள் இருப்பார் எனவும் கூறப்பட்டது. [2]
அத்தி வரதர் தரிசனத்திற்காக காஞ்சிபுரத்திற்கு சிறப்பு பேருந்து ஏற்பாடுகள், காவல் துறை கண்காணிப்பு போன்றவை இந்து சமய அறநிலையத்துறையாலும், மாவட்ட நிர்வாகத்தாலும் செய்யப்பட்டுள்ளது. பல்வேறு வெளியூர்களில் இருந்தும் அத்தி வரதரை தரிசிக்க பக்தர்கள் காஞ்சிபுரத்தில் குவிந்த வண்ணம் உள்ளனர். அத்தி வரதரை தரிசனம் செய்வதற்கான நேரம் காலை 5.00 மணி முதல் மாலை 5.00 மணி வரையாக தற்போது குறைக்கப்பட்டுள்ளது.[3] அத்தி வரதர் தரிசனத்திற்காக காஞ்சிபுரத்திற்கு சிறப்பு தொடருந்துகளும் இயக்கப்படுகின்றன.[4] அத்தி வரதர் ஆகத்து 1, 2019 முதல் ஆகத்து 17 ஆம் நாள் வரை நின்ற கோலத்தில் காட்சியளிப்பார் என்று காஞ்சிபுரம் வரதராசப் பெருமாள் கோயில் நிர்வாகம் அறிவித்தது.[5] சூலை 1 முதல் 31 ஆம் நாள் வரை படுத்த கோலத்தில் இருந்த அத்தி வரதர் ஆகத்து 1 முதல் நின்ற கோலத்தில் காட்சியளிக்கிறார். சூலை 2019 மாதத்தில் 48 இலட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் தரிசனம் செய்திருப்பர் என்று தெரிவிக்கப்படுகிறது.[6]
அத்தி வரதரை தரிசிக்க சூலை12 ஆம் நாள் பிற்பகல் 3.05 மணியளவில் இந்தியக் குடியரசுத் தலைர் இராம்நாத் கோவிந்த் காஞ்சி வரதராசப் பெருமாள் கோயிலுக்கு வந்திருந்தார். தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், தமிழக வருவாய்த் துறை அமைச்சர் ஆர். பி. உதயகுமார், மாவட்ட ஆட்சியர் ஆகியோர் குடியரசுத் தலைவரை வரவேற்று தரிசனத்திற்கு அழைத்துச் சென்றனர்.[7]தமிழக முதலமைச்சர் எடப்பாடி க. பழனிச்சாமி 23.07.2019 அன்று அத்தி வரதரை தரிசித்தார்.[8] அத்தி வரதரை துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு, தமிழக துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ், பிரதமர் மோடியின் சகோதரர் பங்கஜ் மோடி ஆகியோரும் தரிசித்துள்ளனர். நடிகர்கள் இரசினிகாந்த்[9], லாரன்ஸ்[10], நயன்தாரா [11]உள்ளிட்ட திரை பிரபலங்களும் தரிசித்தனர்.