அட்டலட்சுமி
அஷ்டலட்சுமி அல்லது எண்திரு என்பது திருமகளின் எட்டு வெவ்வேறு தோற்றங்களைக் குறிப்பிடும் பதம் ஆகும்.[1] அட்டலட்சுமியரை ஒரே குழுமமாக வழிபடுவது வழக்கமாகக் காணப்படுகின்றது.[2]
அட்டலட்சுமி | |
---|---|
வகை | திருமகள், தேவி |
துணை | திருமால் |
செல்வம் என்பது பணத்தினை மட்டும் குறிப்பதன்று, எனவே கல்வி, நீண்ட ஆயுள், நம்பிக்கைக்கு உரிய நண்பர்கள், வாழ்க்கைக்கு தேவையான செல்வம், உழைப்புக்கு தேவையான ஊதியம், நோயற்ற வாழ்க்கை, எதற்கும் கலங்காத மனவலிமை, அன்புள்ள கணவன் மனைவி, அறிவு ஒழுக்கம் ஆற்றல் கொண்ட குழந்தைகள், மேன்மேலும் வளரக்கூடிய புகழ், மாறாத வார்த்தை, தடங்கலில்லாத வாழ்க்கை, வருவாயைச்சிக்கனமாக செலவழித்து சேமிப்பு அதிகரித்தல், திறமையான குடும்ப நிர்வாகம், நமக்கு உதவக்கூடிய பெருமக்களின் தொடர்பு, பிற உயிர்களிடம் அன்பு செலுத்துதல். முதலிய பதினாறு செல்வங்களுக்கும் அதிபதியாக லட்சுமி திகழ்கிறாள்.
வழிபாட்டின் தோற்றம்
அஷ்டலட்சுமி பற்றிய குறிப்புகளை பல்வேறு நூல்களில் காணும் போதும்,[1] 1970களில் வைணவ அறிஞர் முக்கூர் வித்வான் உ.வே.ஸ்ரீநிவாசவரதாச்சாரியார் இயற்றிய சங்கத அட்டலட்சுமி தோத்திரத்துடனேயே, எண்திருக்களின் வழிபாடு மிக வேகமாகப் பரவலாயிற்று.[3] தென்னிந்தியாவின் ஸ்ரீவைணவர்கள் மற்றும் ஏனைய இந்துக்களால் அதிகளவில் எண்திருக்கள் வழிபடப்படுகின்றனர். திருவுருவப்படமாக, ஆலயங்களிலும் இல்லங்களிலும் அவர்கள் போற்றப்பாடுகின்றனர். 1970களுக்குப் பின் ஏற்பட்ட புதிய எண்திரு ஆலயங்கள், இலத்திரனியல் ஊடகங்களின் வருகை, வழிபாட்டுநூல்கள், சமயத்துதிகள் என்பன தென்னிந்தியாவில் இத்தேவியரின் வழிபாடு பிரபலமாகக் காரணமாயிற்று.[4]
பெயர்களும்[1] உருவவியலும்
- முந்துதிரு - ஆதிலட்சுமி
மகாலட்சுமி, பிருகு முனிவரின் மகளாக அவதரித்தவள். திருமகளின் மிகப்பழைமையான தோற்றம்.[2] இந்த லட்சுமியை ரமா லட்சுமி என்றும் அழைக்கின்றார்கள். தாமரை, வெண்கொடி, அஞ்சேல், அருளல் தாங்கும் நாற்கரங்கள் கொண்ட அன்னை.
- செல்வத்திரு - தனலட்சுமி
பொன், பணம் என்பவற்றை அருளும் அன்னை.[2] சக்கரம், சங்கு, கலசம், வில்லம்பு, தாமரை, அஞ்சேல் என்பவற்றைத் தாங்கும் ஆறுகரம் கொண்டவள்.
- தானியத்திரு - தானியலட்சுமி
வேளாண்மை வளம் பெருக்கும் தேவி.[2] பசுந்துகில் தரித்து, நெற்கதிர், கரும்பு, வாழை, தாமரைகள், கதை, அஞ்சேல், அருளல் தரித்த எண்கரம் கொண்டருளும் தாயார்.
- வேழத்திரு - கஜலட்சுமி
கால்நடைகள் மூலம் வளம் அருள்பவள்.[2] இவளே அரசரொக்கும் பெருஞ்செல்வங்கள் தருபவள்.[5] பாற்கடலிலிருந்து உதித்தவளும் இவளே! இருயானைகள் நீராட்ட[1] , அஞ்சேல், அருளல், தாமரைகள் தாங்கியவளாக செந்துகில் உடுத்து அருளுவாள்.
- அன்னைத்திரு - சந்தானலட்சுமி
குழந்தைப்பேறு அருளும் திருமகள்.[2] கலசங்கள், கத்தி, கேடயம், அஞ்சேல் தரித்த அறுகரத்தவள். மடியில் குழந்தையொன்று அமர்ந்திருக்க அருள்புரிவாள்.
- திறல்திரு - வீரலட்சுமி
வீரம், வலிமை, அருளுவாள்.[2] துன்பகரமான தருணங்களில் வாழ்க்கையில் துணிவைத் தரும் தாயார்.செவ்வாடை தரித்தவள். சங்கு, சக்கர, வில், அம்பு, கத்தி, ஓலைச்சுவடி, அஞ்சேல், அருளல் என்பவற்றைத் தாங்கிய எண்கரத்தினள்.
- வெற்றித்திரு -விஜயலட்சுமி
யுத்தங்களில் மாத்திரமன்றி[2], எடுத்த காரியங்கள் எல்லாம் வெற்றி பெற அருளுவாள். [5] சங்கு, சக்கரம், பாசம், கத்தி, கேடயம், தாமரை, அஞ்சேல், அருளல் என எட்டுக்கரங்களுடன் காட்சியளிப்பவள்.
- கல்வித்திரு - வித்யாலட்சுமி
அறிவையும் கலைகளில் வல்லமையும் தருபவள்.[5] வெண்துகிலுடுத்திய, அஞ்சேல், அபயம், தாமரைகள் ஏந்திய நாற்கரத்தினள்.
ஏனைய வேறுமங்கள்
சில அஷ்டலட்சுமி பட்டியல்களில் இன்னும் சில திருக்கள் கூறப்படுகின்றனர்.செழிப்பை நல்கும் வளத்திரு (ஐசுவரியலட்சுமி)[2], நன்மைகள் யாவும் தரும் நற்றிரு (சௌபாக்கியலட்சுமி)[5], அரசபோகங்களை அருளும் நகர்த்திரு (இராச்சியலட்சுமி)[6], மற்றும் வரத்திரு (வரலட்சுமி) [6] ஆகியோர் இந்தப் பட்டியலில் சிலவேளைகளில் அடக்கப்படுவதுண்டு.
![](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/8/8c/Ashtalakshmi_Kovil_-_Temple_of_Eight_Lakshmis%2C_Chennai%2C_Tamil_Nadu%2C_India.jpg/200px-Ashtalakshmi_Kovil_-_Temple_of_Eight_Lakshmis%2C_Chennai%2C_Tamil_Nadu%2C_India.jpg)
ஆலயங்கள்
அஷ்டலட்சுமிக்காக அமைக்கப்பட்ட முதலாவது ஆலயம்.[7]
மேலும் பார்க்க
அடிக்குறிப்புகள்
உசாத்துணைகள்
- Studies in Hindu and Buddhist Art By P. K. Mishra, Published 1999, Abhinav Publications,413 pages, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-7017-368-X
- Vasudha Narayanan in Chapter ŚRĪ: Giver of Fortune, Bestower of Grace in book Devī: Goddesses of India By John Stratton Hawley, Donna Marie Wulff ; Published 1996; University of California Press ;373 pages ;பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-520-20058-6