அசுவத்தாமன்
அசுவத்தாமன் (Ashwatthama) என்பவர் மகாபாரதக் கதைமாந்தர்களுள் ஒருவர் ஆவார். இவர், துரோணாச்சாரியாருடைய மகனாவார். இவரது தாய், கிருபாச்சாரியாருடைய தங்கை கிருபி ஆவார். இவர் பரத்வாஜ முனிவரின் பேரன் ஆவார். அஸ்வத்தாமா ஹஸ்தினாபுரத்தின் ஆட்சியாளர்களுக்கு அடிபணிந்து அசிச்சத்திரத்தை தலைநகராகக் கொண்டு பாஞ்சாலாவின் வடக்குப் பகுதியை ஆட்சி செய்தார். இவர் குருசேத்திரப் போரில் பாண்டவர்களுக்கு எதிராக கௌரவப் பக்கத்தில் இருந்து போரிட்ட மஹாரதி[1] ஆவார். கிருஷ்ணர் அளித்த சாபத்தால் இவர் சிரஞ்சீவி (அழியாதவர்) ஆனார்.[2][3]துரோணாச்சாரியார் இவன்மீது அளவு கடந்த அன்பு வைத்திருந்தார். குருச்சேத்திரப் போரின், அசுவத்தாமன் இறந்துவிட்டதாகக் தருமர் மூலம் கூறப்பட்ட வதந்தியை நம்பித் துரோணர் கவலையில் இருந்தபோது இளவரசன் திருஷ்டத்யும்னனின் வாளுக்கு இரையாகித் துரோணர் காலமானார்.
சொற்பிறப்பியல்
மகாபாரதத்தின் படி, அஸ்வத்தாமா என்றால் "குதிரையின் குரல் தொடர்பான புனிதமான குரல்" என்று பொருள் ஆகும்.[4] மேலும், இவர், பிறந்தபோது குதிரையைப் போல அழுததால் இந்த பெயர் வந்ததாகச் சொல்லப்படுகிறது.[5]
குருசேத்திரப் போரில் இவரின் பங்கு
குருச்சேத்திரப் போரின் 18-ஆம் நாள் இரவில், கௌரவர் பக்கம் உயிர்பிழைத்திருந்த மூவரில் இவரும் ஒருவர் ஆவார். தனது தந்தையை நயவஞ்சகமாக கொன்ற பாண்டவர் படைகளின் தலைமைப் படைத்தலைவர் திருஷ்டத்யும்னனை தூக்கத்தில் இருக்கும்போது கொன்று பழி தீர்த்தவராக அறியப்படுகிறார். மேலும், பாண்டவர்களின் ஐந்து குலக்கொழுந்துகளையும் (உபபாண்டவர்கள்), பஞ்சபாண்டவர் தவிர மற்ற பாண்டவ படைவீரர்களை அதே இரவில் கொன்றவர் என்று சொல்லப்படுகிறது.